Friday 27 October 2017

தமிழ் திரைப்படங்களில் 15 சிறந்த அறிவியல் சிந்தனை கொண்ட படங்கள் !!

தமிழ் திரைப்படங்களில் 15 சிறந்த அறிவியல் சிந்தனை கொண்ட படங்கள்.


நான் பார்த்த தமிழ் திரைப்படங்களில் அறிவியல் சிந்தனை கொண்டவை என்று எனக்கு மனதில் பட்ட திரைப்படங்களில் சிலவற்றை சொல்லலாம் என நினைக்கிறேன்.


தொழில்நுட்பம் நிறைந்தவை என்றால் நிறைய படங்கள் அதன் வரையறைக்குள் வந்து விடும்.
எனவே கதை, திரைக்கதையில் அறிவியல் சார்ந்த விசயங்கள் கொண்ட திரைப்படங்கள் பற்றி மட்டும் பார்க்கலாம்.


தமிழில் முழு நீள அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த (Science Fiction) படங்கள் இல்லை என்றே சொல்லலாம். ஊறுகாய் போல அறிவியலைத் தொட்டுக்கொண்ட படங்கள் வருவதே கூட பெரிய ஆறுதலான விசயம்தான்.

அதே போல ஒரு சில அறிவியல் விசயங்களை மட்டும் சொல்லிவிட்டு பிறகு படம் வேறெங்கோ செல்லும். அப்படிப்பட்ட படங்களும் தமிழில் நிறைய உண்டு.

சரி, எது ஊறுகாய், எது முழு சாப்பாடு என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

15. உலகம் சுற்றும் வாலிபன்

1973 ல் எம்.ஜி.ஆர். இயக்கி இருவேடத்தில் நடித்த திரைப்படம். காண்க: 

படத்தின் தொடக்கத்தில் ஒரு விஞ்ஞானி எம். ஜி. ஆர். உலகில் அதிகமான ஆபத்தை விளைவிக்கும் குண்டு கண்டுபிடிப்பார்.



அந்த ஆபத்தான குண்டு தயாரிக்கும் ரகசிய சூத்திரத்தை அந்நிய நாட்டுக்கு விற்காமல் பாதுகாப்பது படத்தின் மையக்கதை.


ஜப்பானில் ஒரு புத்த மடாலயத்தில் புதைக்கப்பட்டிருக்கும் அந்த ரகசிய சூத்திரம் இறுதியில் மீட்கப்படும்.


14. விக்ரம்



1986 ல் ராஜசேகர் இயக்கி வெளிவந்த விக்ரம் என்ற கமலின் 1 கோடி ரூபாய் கனவுப்படத்திலும்  
அக்னிபுத்ரா என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை 
(ICBM-Inter Continental Ballistic Missile) 
திருடப்பட்டதை மீட்பதையே மையமாக கொண்ட படம். காண்க:





ஆனால் படத்திரைக்கதையின் பெரும்பகுதி வேறெங்கெங்கோ சுற்றி விட்டு வரும்.

13. நாளை மனிதன்.

போலீசால் கொல்லப்பட்ட கொலைகாரன், ஆராய்ச்சி மருத்துவர் ஒருவரின் புதிய கண்டுபிடிப்பால் உயிர் பெறுவதோடு, கொல்ல முடியாத வலிமை பெறுகிற அவனை கிணற்றில் மூடி விடுவதாய் படம் முடியும். காண்க:
1989 ல் வெளிவந்த ஆனால் 2008 ல் நடப்பதாக வந்த படம். பெரியாரிய சிந்தனை கொண்ட இயக்குனர் வேலு பிரபாகரன் இயக்கத்தில் வந்த படம். காண்க:


12 . நியூ.

ஒரு 8 வயது சிறுவன் ஒர் அறிவியல் கண்டுபிடிப்பால் 25 வயது இளைஞனின் உருவம் பெறுவதால் வரும் பிரச்சினைகளே இந்தப் படம். எஸ். ஜே. இயக்கி நடித்து 2004 ல் வெளிவந்த படம். காண்க:


வயது அடிப்படையில் ஒருவன் 8 வயது சிறுவன் தான். ஆனால் உருவத்தில் 25 வயது இளைஞன். தோற்றத்தில் 25 வயது இளைஞனாக இருந்தாலும் பகலில் அவன் மனநிலை 8 வயது சிறுவனின் மனநிலை. மாலையில் 25 வயது இளைஞனாக மனநிலை மாறும்.


வெறும் கற்பனை கண்டுபிடிப்பு தான். வழக்கம் போல எஸ். ஜே. சூர்யாவின் சினிமாத்தன மசாலாக்கள் தான் படம் முழுக்க என்றாலும் ஒரு வித்தியாசமான கற்பனை என்ற வகையில் இதனை சேர்க்கலாம்.


11. அப்புச்சி கிராமம் 

வி. ஆனந்த் இயக்கத்தில் 2014 ல் வெளிவந்த படம். காண்க:




விண்கல் (Meteor) ஒன்று அப்புச்சி என்ற கிராமத்தில் விழ இருப்பதால் அந்த ஊரே அழியப்போகிறது என்ற பதைபதைப்பில் அந்த ஊரில் உருவாகும் நிகழ்வுகளே படம். காண்க:


விண்கல் விழுந்ததும் அதில் இருந்து வெளியேறும் ஒரு விண் உயிரினம் என்ன செய்யப்போகிறது என்ற அந்த படக்குழுவினரின் அடுத்த படத்திற்கான ஒரு எதிர்பார்ப்போடு படம் முடியும்.


விண்கல் விழுந்ததால் அமெரிக்க அரிசோனா மாநிலத்தில் உருவான பள்ளம்.



10. பேராண்மை

2009 ஆம் ஆண்டில் எஸ்.பி. ஜனநாதனின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பேராண்மை படத்திலும் இந்திய செயற்கைக்கோள் செலுத்துவதை தடுக்க நினைக்கும் அந்நிய சக்தியை தடுப்பது திரைக்கதையின் நோக்கம். காண்க:

கட்டுக்கோப்பான திட்டமிடல், பெண்களின் பங்களிப்பு, அந்நிய சதித்திட்டம், சாதீய பாகுபாடு என பல உள் கூறுகளை உடன் கொண்டு வெளிவந்த நல்ல ஒரு கலைப்படைப்பு.








9. இன்று நேற்று நாளை மற்றும் "24".

ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க 2015 ல் இன்று நேற்று நாளை யும்
விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்க 2016 ல் 24 ம் வெளிவந்தது. 

மேற்கத்திய (Time Machine Travel) காலப்பயணம் என்ற வித்தியாச சிந்தனை தான் இப்படங்களின் மையம். 

காலப்பயணம் என்றால் என்ன என்பது பலருக்கும் தெரியும் என்றாலும் ஒரு சிறிய விளக்கம்:

கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கற்பனையான வினோத இயந்திரத்தினைக் கொண்டு நாம் நம்முடைய பழைய காலத்திற்கு (ஒரு நாளைக்கு முன்னதாகவோ, பல ஆண்டுகள் முன்னதாகவோ) செல்ல முடியும், அல்லது எதிர்காலத்திற்கு செல்ல முடியும். அவ்வாறு செல்ல முடிவதோடு பழைய காலத்தில் செய்த தவறுகளை திருத்திக்கொள்ள முடியும், ஏற்பட்ட ஆபத்துக்களை சரி செய்துகொள்ள முடியும் என்பதே காலப்பயணம் என்ற ஒரு விசித்திர கற்பனை.

காலப்பயண உதாரணத்துக்கு: காலத்தில் பின்னோக்கி சென்று மகாத்மா காந்தியோடு ஒரு செல்பி எடுத்துக்கொள்ள முடியும்.


நடைமுறை சாத்தியம் இல்லை என்றாலும் வித்தியாசமான கற்பனை என்ற அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிந்தனை. இத்தகைய இயந்திரத்தாலும், அதில் பயணித்து இறந்த காலம், எதிர்காலம் இவற்றில் பயணிப்பதாலும் உருவாகும் நன்மைகள், பிரச்சினைகள், தீர்வுகள் என்பது பற்றியே மேற்சொன்ன இரண்டு திரைப்படங்களும்:

நேற்று நேற்று நாளை மற்றும் "24".


காலப்பயணம் மேற்கொள்ள 
பெய்யும் மழையையே நிறுத்தி வைக்கும் ஒரு கற்பனை
24 திரைப்படத்தில்.


24 காலப்பயணத்தில் மட்டைவீரர் தோனியுடன் கதாநாயகன் சூர்யா ஒரு செல்பி 

8ஈ.
ஏழை மக்களை, ஏழை நாடுகளை ஆராய்ச்சிக்கு பயன்படுத்தும் மேற்கத்திய கார்பொரேட்நிறுவனங்களின் மருத்துவ தொழில்நுட்ப சதிகளை வெளிக்கொணர்ந்த இயக்குனர் ஜனநாதனின் திரைப்படம். ஜீவா நடிப்பில் 2006 ல் வெளிவந்த படம். காண்க:

சர்வதேச பயங்கரவாத மருத்துவ போரை (Medical Bio-War) 
தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்திய படம்.







7. தசாவதாரம்

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடித்து 2008 ல் வெளிவந்த படம். காண்க: 
கமல் பத்து வித முக தோற்றங்களோடு நடித்திருக்கும், பலருக்கும் நன்கு அறிமுகமான படம்.


மேற்கத்திய வியாபாரம் நோக்கம் மட்டுமே கொண்ட மருந்து நிறுவனங்கள் புதிய புதிய மருந்துகளை தயாரிப்பதைவிட, புதிய புதிய நோய்களை உருவாக்குவதில் தான் அதிக பணவெறியோடு இருக்கின்றனர் என்றும், அவர்கள் அந்த நோய்களை, மருந்துகளை பரிசோதித்து பார்க்கும் உயிர்கள் இந்தியா போன்ற ஏழை நாட்டு மக்களே என்பதே இன்றைய டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களை சந்திக்கும் நமக்கு நன்கு விளங்கும். 

ஆட்டை கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில் மனுஷனை கடிப்பது என்ற சொற்பதம் போல
இன்றைய மேற்கத்திய வியாபார மருத்துவத்தின் பரிசோதனை சாலையில் இருப்பது குரங்குகளும் எலிகளும் அல்ல, என்னையும் உங்களையும் போன்ற உயிருள்ள மூன்றாம் உலக ஏழை நாட்டு மக்களே.


அத்தைகய நோய் உருவாக்கி பரப்பும் ஒரு
 வைரஸ் நோய்க்கிருமி 
அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருவதால் 
உருவாகும் பதற்றம், தேடுதல் என்பதே இந்தப்படம். 

கேயாஸ் தியரி (Chaos Theory) 
 இப்படத்தின் மூலம் பிரபலமான ஒரு வார்த்தை.

Chaos என்றால் ஆங்கில நேரடி அர்த்தம் குழப்பம்.

ஆனால் கேயாஸ் தியரி யின் அர்த்தம் வேறு .
Chaos Theory: காண்க: 

எங்கோ நடக்கும் ஒரு செயல்பாடு பின்னொரு காலகட்டத்தில் வேறெங்கோ நடக்கும் இன்னொரு செயல்பாட்டோடு தொடர்புடையதாகவே உள்ளது. 

உலகில் நடக்கும் எந்தவொரு நிகழ்வும் தன்னிச்சையானது அல்ல. ஒன்றோடொன்று தொடர்புடையதே.

Butterfly Effect:  காண்க:

எங்கோ நடக்கும் ஒரு சின்ன விசயம் கூட பின்னர் ஒரு பெரிய பிரளயத்தையே உண்டாக்க காரணமாய் அமைய வாய்ப்பு உள்ளது. 

6. எந்திரன் 

Artificial Intelligence என்று 2001 ல் வெளிவந்த ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் திரைப்படத்தின் பாதிப்பில் இயக்குனர் சங்கர் உருவாக்கிய மனித அம்சமுள்ள இயந்திரம் (Humanoid)எந்திரன் என்ற பெயரில் 2010 ல் வெளிவந்தது.


இயந்திரத்தில் மனித உணர்வுகள் சேருமானால் அது உருவாக்கம், விளைவிக்கும் 
நன்மைகளும் தீமைகளும் என்ன என்பதே படம்.



மேலே Artificial Intelligence படத்தில் 

கீழே எந்திரன் படத்தில் 




மேலே Artificial Intelligence படத்தில் 

கீழே எந்திரன் படத்தில் 









அறிவியலில் வளர்ச்சி என்ற பெயரில் எந்திர செயல்பாடுகள் பெரும்பாலும் ஆபத்து நிறைந்தவையே.

1. மனித இனமே பல்வேறு நாடுகளில் வேலை வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கும் வேளையில் மனித எந்திரங்கள் மனித இடத்தை ஆக்கிரமிக்கத்தான் செய்யும்.

2. ஆபத்து நிறைந்த போர்களில் மனித இயந்திரங்களை பயன்படுத்தலாமே? 

எதிரில் இருப்பவர்களும், "எதிரி" நாட்டில் இருப்பவர்களும் மனிதர்கள் தானே.
போரே வேண்டாம் என்ற சூழ்நிலையில் மனிதனோ, மனித எந்திரமோ தேவையே இல்லை.

3. வன்முறை மிகுந்து மனித உணர்வுக்கு, மனித நேயத்துக்கு மதிப்பில்லாமல் போகும்.

வன்முறையில் பல நிலைகள் உண்டு:

1. கைகளால், கால்களால் பிறரை அடித்து உதைக்கும் போது அடிப்பவருக்கும் வலிக்கும் என்பதால் அடுத்தவருக்கும் வலிக்கும் என்ற உணர்வு ஏற்படும். வன்முறை குறையும்.
2. அடுத்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் பிறரை துன்புறுத்தும் போது பிறருக்கு ஏற்படும் வலிகளும், காயங்களும் தன்னால் ஏற்பட்டது என்று உணரும் போது மனிதனின் வன்முறையைக் குறைக்கும்.
3. துப்பாக்கி போன்ற தொழில்நுட்ப ஆயுதங்களால் தாக்கும் போது கை விசை மட்டுமே தாக்குபவருடையது. வன்முறை துப்பாக்கி குண்டிற்கு கடத்தப்படுவதால் மனிதனின் உணர்வுகள் வலிக்காது என்றாலும் நேரடி பார்வையில் நடக்கும் போது பரிதாபம் ஏற்படும். வன்முறை குறைய வாய்ப்புண்டு 
4. ஏவுகணை, அணு ஆயுதம் போன்றவை பயன்படுத்தும் போது பாதிக்கப்படும் நபர்கள் முற்றிலும் நம் பார்வையை விட்டு தொலைவில் இருப்பதால் மனித பரிதாப உணர்வுக்கு வழியே இல்லை. ஒருவேளை அழிவு முடிந்த பிறகு கேள்விப்பட்டு வரும் பரிதாப உணர்வே மிஞ்சும். அதற்குள் அழிவு நிச்சயம்.

ஜப்பான் மீது அணுகுண்டு வீசியவர் இறந்தவர்கள் எண்ணிக்கை பார்த்து குற்ற உணர்வில் பின்னொரு நாளில் தற்கொலை செய்து கொண்டாரல்லவா.
5. ஆனால் இத்தகைய மனித எந்திரங்கள் வந்துவிட்டால் அவைகளுக்கு உணர்வுகளும் இருக்காது, பரிதாபமும், வருத்தமும் இருக்காது. இதனால் மனித உயிர் முற்றிலும் மதிப்பற்றதாய் போய்விடும் பேராபத்து இருக்கிறது.

வன்முறையையும், போரையும் விரும்பும் கார்பொரேட் நிறுவனங்களுக்கு இத்தைகைய எந்திர பிண்டங்களே தேவைப்படுகிறது.

5. தனி ஒருவன்

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 2015 ல் வெளிவந்த திரைப்படம். காண்க:


தனி ஒருவன் திரைப்படம் பற்றி பொதுவாக நமக்குத் தெரியும்.


அதில் முக்கியமான ஒரு விசயம் செல்விட பேசி யைக் கொண்டு ஒருவரின் இருப்பிடத்தை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்பதைப்போல, 

ஒருவரின் பேச்சு, நடவடிக்கைகளை அவரின் உடம்பில் ஒரு சிப்பை (Micro Chip)பொருத்துவதன் மூலம் கண்காணிக்க முடியும் என்பதை சொன்ன படம்.




இந்தியாவில் ஆதார் அட்டை நம் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ள மத்திய அரசின் திட்டம். இந்த ஆதார் அட்டையின் மறுபக்கம் படு பயங்கரமானது.


அமெரிக்க நிறுவனங்களால் அவைகளின் கைக்கூலிகளான மத்திய அரசு மாநில அரசுகளின் மூலம் நம் நாட்டு மக்களை அந்நிய உளவு நிறுவனங்கள் வேவு பார்க்கும் வழிதான் ஆதார் அட்டையே தவிர இதனால் நாட்டு மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.


இந்த ஆதார் அட்டையில் உள்ள (Chip) சிப் எனப்படும் தகவல் சேமிக்கும் சிலிக்கான் தனிம செல்கள் தனிமனிதனின் தகவல்களை கொண்டிருப்பதோடு, தனிமனிதனின் சுதந்திரம், நடமாட்டம், செயல்பாடுகள் என அவனின் ஒட்டு மொத்த நடவடிக்கைகளையும் உளவு பார்க்கவும், அவனின் தனி வாழ்விற்குள் நுழைந்து அவனின் ஆளுமையை கொச்சைப்படுத்துவும், ஏன் அவனைக் கொல்வதற்கும் கூட பயன்படுத்தப்பட அனைத்து ரகசிய வசதிகளையும் கொண்டது இந்த ஆதார். காண்க:

இந்த சிலிக்கான் செல் மூலம் உளவு பார்க்கும் செயலை முதல் முறையாக வெளிப்படுத்திய திரைப்படம் இந்தப்படம். அந்நிய கார்பொரேட் நிறுவனங்கள் எவ்வாறு மருந்து கண்டுபிடிப்புகளை காப்பீடு (Patent Right) என்ற பெயரில் ஏழை நாடுகளை அடிமைப்படுத்த முயற்சிக்கின்றன என்பதையும் அதற்காக எந்தவித மனிதக்கொலைகளையும் நடத்துவதற்கு தயங்காத நவீன பயங்கரவாதிகள் என்பதையும் தெளிவுபடுத்திய திரைப்படம் தனி ஒருவன்


4. குற்றம் 23

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து 2017 ல் வெளிவந்த படம். காண்க:

பெண்கள் அல்லது ஆண்களின் குழந்தைப்பேறு உருவாக்க இயலாத உடல் பலவீனங்களை, குறைபாடுகளை ஒரு சில தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பணம் சம்பாதிக்க பயன்படுத்தும் வழிமுறைகளாக மாற்ற நினைக்கும் குரூர சிந்தனைகளை கண்டுபிடிக்கும் படம்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் தவறானவர்களின் கைகளில் சேரும்போது, பல சமயம் மக்களுக்கு எதிராகவே அவை பயன்படுத்தப்படுகின்றன.


செயற்கை கருத்தரிப்பு முறைகள் பற்றி விளக்குகிறது இந்த திரைப்படம். 

குழந்தைப் பேறற்ற மனிதனின் 
பலவீனங்கள், இயலாமை மற்றும் 
இயலாமையின் காரணமாக குடும்பம், சமூகம் தன்னை புறக்கணித்துவிடுமோ 
என்ற பயம் 

இவைகளை அறிவியல் தொழில்நுட்பம் பயன்படுத்திக் கொண்டு 
செயற்கை கருத்தரிப்பை வியாபாரமாக்குவது பிரச்சினைகளில் ஒன்று.

குழந்தைபேறற்ற மலட்டுத்தன்மையை  புதிய உணவு பழக்கங்கள், மருந்து முறைகள், இரசாயன குளிர்பானங்கள், மது போதைப்பொருளுக்கு அடிமை ஆக்குதல், சுற்றுச் சூழல் சீர்கேடுகள் போன்ற காரணங்களால் தனியார் கார்பொரேட் நிறுவனங்களே செயற்கையாக இந்த மலட்டு தன்மையை உருவாக்குவது இன்றைய சமூகம் எதிர்கொள்ளும் மாபெரும் பிரச்சினை, மையப்பிரச்சினை .

விதையற்ற பழங்கள், (Seedless Fruits) காய்கறிகள், GMO (Genetically Modified Organisms) போல

 ஆபத்து விளைவிக்கும் அவசர உணவு வகைகள், 
உடல் பெருக்க வைக்கும் கொழுப்பு உணவு வகைகள், 
நோய்களை உருவாக்கும் இரசாயன உணவு வகைகள்.


இயற்கையான காய், கனிகள் இயற்கையாக காலாவதி ஆவதை தடுத்து 
வெகு நாட்களுக்கு வியாபாரம் நடைபெற
 செயற்கையான இரசாயனம் செலுத்தி 
மனிதருக்கு கொடூர நோய்களை உண்டாக்கும் 
இயற்கை மீதான சித்திரவதைகள் கார்பொரேட் நிறுவனங்களால்  
மேற்கொள்ளப்படுகிறது.


பூக்களின் மகரந்தம் மூலம் விதைகள் இயற்கையாக உருவாகுவதற்கு 
வண்ணத்து பூச்சிகளும், தேனீக்களும்  
உதவுவதால் அந்த இனங்களையே முற்றிலும் அழிப்பதற்கு 
தனியார் கார்பொரேட் நிறுவனங்கள் 
இயற்கை மீதே கொடூர போர் தொடுக்கிறது.



விதையற்ற மனிதகுலத்தை செயற்கையாக உருவாக்கி கார்பொரேட் நிறுவனங்களின் விதை வங்கிகளை சார்ந்தே குழந்தைப்பேறு இருக்கும் வகையில் எதிர்காலத்தை உருவாக்குகிறான்.



விதையில்லாத பழங்கள் (Seedless) மனிதருக்கு கேடு விளைவிப்பவை.


எச்சரிக்கை:
இன்று விதைகள் இல்லாத மலட்டு பழங்கள், பயிர்கள்
நாளை விதைகள் இல்லாத மலட்டு மனிதர்கள்.


3. ஏழாம் அறிவு.

இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து 2011 இல் வெளிவந்த படம். காண்க:

போதி தருமர் என்னும் தமிழ் சித்தர் சீனா சென்று தமிழரின் தொன்மையான மருத்துவ முறைகளையும், போர்ப்பயிற்சி முறைகளையும் கற்றுக்கொடுத்தவர் என்பதை தமிழர்களாகிய நமக்கே அறிமுகப்படுத்திய படம்.





நமது பன்முக வரலாற்று பார்வை மற்றும்  
வளர்ச்சியடைந்த வளமான தொன்மை அறிவு வளங்கள் 
பற்றிய அக்கறையற்ற சமூகமாய் நாம் வாழ்கிறோம் என்பதை செவிட்டில் அறைந்து சொன்ன படம்.



இவற்றோடு செல் களைக்கொண்டு டி.என்.ஏக்களை மீளுருவாக்கம் செய்வது பற்றியும் சொன்னது. நாம் இழக்கக்கூடாத நமது இயற்கை வளங்களை மீட்க என்ன செய்ய வேண்டும் என்றும் சொன்னது.

இன்று டெங்கு காய்ச்சலுக்கு மேற்கத்திய மருத்துவ முறை தீர்வு தரவில்லை. நமது நிலவேம்பும், பப்பாளி இலைகளும்தான் நமது பாதுகாப்பு அரண், நமது இயற்கை செல்வங்கள் என்பதை மீண்டும் நமக்கு காலம் உணர்த்தி இருக்கிறது.



நமது பாரம்பரிய வேம்பும், கடுகும், மஞ்சளும், பாசுமதி அரிசியும், நெல், பருத்தி விதைகளும் அந்நிய கார்பொரேட் நிறுவனங்களால் காப்புரிமை செய்து கொள்ளப்படும் இக்காலத்தில் நமது அறிவார்ந்த தொன்மையை இன்னும் நாம் இழந்து விடக்கூடாது.
வெறும் பழமை பேசுவதில் அர்த்தமில்லை ஆனால் பழமையில் அறிவும், ஆற்றலும், அனுபவமும், அறிவியலும் இருக்கிறது என்றால் அவைகளை தேடி மீட்பதில் நாம் பெருமையே கொள்வோம். நமது வளங்கள் நம் கண் முன்பாகவே திட்டமிட்டு மறைக்கப்படுகிறது, அழிக்கப்படுகிறது எனும்போது மாபெரும் பண்பாட்டு போரை நாம் மேற்கொள்வது அவசரமான அவசியம்.

நமது உணவு முறையே நமது மருத்துவ முறை. 

உணவே மருந்து மருந்தே உணவு



உணவு ஒவ்வொன்னும் ஒரு மருந்தே:


மருந்து ஒவ்வொன்னும் உணவே:


 மீட்டுருவாக்கம் செய்யவேண்டியது 
தமிழரின் பாரம்பரிய தொன்மை அறிவினை மட்டுமல்ல 
இன்றைய நவீன தொழில்நுட்பங்களையும்தான்
என்கிறது ஏழாம் அறிவு திரைப்படமும்.




2.  கலையரசி

எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்து  காசிலிங்கம் இயக்கத்தில்
 1963 ல் வெளிவந்த திரைப்படம்  கலையரசி

இந்தியாவிலேயே முதலாவதாக 
தமிழில் வெளிவந்த அறிவியல் படம்காண்க:

கீழே விளம்பர தாளில் உள்ளது போல விஞ்ஞான அற்புதங்களை விளக்கும் ஒரு புதுமைச்சித்திரம் தான்.



இந்தியாவிலேயே 
வேற்று கிரக வாசிகளைப்பற்றி (Aliens)
வந்த முதல் திரைப்படம் கலையரசி தான். காண்க:  
 

 கலையரசி படத்தின் சிறப்பு அம்சங்கள் 

1. எரிகல் (Meteor) 
2. வானியல் கிரகங்கள்,
3. பால்வெளி வீதி (Milky way Galaxy),
4. பறக்கும் தட்டு,


5. அயல்கிரகத்து மனிதர்கள்,


6. பிற கிரகங்களின் மாறுபட்ட ஈர்ப்பு விசைக்கேற்ப பயன்படுத்த காலணி,
(படத்தில் கிரகங்கள் இழுக்கும் சக்தி என்று சொல்லப்படும்)


7. நெருப்பு உமிழும் லேசர் துப்பாக்கி,
8. தொலைவில் நடக்கும் நிகழ்வுகளைக் காணும் தொலைக்காட்சி கருவி,


9. வானில் விசவாயு பகுதிகள்,  விச வாயு தடுப்பு கருவிகள், 
10. விண்வெளி வீரரின் சிறப்பு உடுப்புகள்,


11. மாத்திரை வடிவில் உணவு,


12. லேசர் வகை சித்திரவதை தண்டனை,


என பல்வேறு ஆச்சரியங்கள் நிறைந்த படம் கலையரசி 
இப்படம் பற்றிய தகவல்களைப் பார்த்ததும் ஆர்வம் கொண்டு படம் பார்த்தேன்.
ஆச்சரியமான அதிசயம் தான்.
தமிழில் அதுவும் 1963ம் ஆண்டில், நேருவும் காமராஜரும் ஆண்ட சமயத்தில், எம்.ஜி.ஆர். கதாநாயகனாக பானுமதி கதாநாயகியாக (இருவருக்கும் இரட்டை வேடம்). காண்க:

உலகளவில் வெளிவந்த அறிவியல் படங்கள் பற்றிய ஆங்கிலப் புத்தகத்தில் (கீழே) 
ஒரு பக்கம் முழுக்க கலையரசி திரைப்படம் பற்றிய செய்திதான். காண்க:

The Liverpool Companion to World Science Fiction Film

edited by Sonja Fritzsche 



1. தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்
 

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் 2015 ல் வெளியான படம் தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்.

இரண்டு மையக் கதைகள்:

ஒரு கதாநாயகன் வீடு தரகர் அட்டக்கத்தி தினேஷ் சமூக சேவை செய்யும் ஒரு பெண்ணை சந்தர்ப்ப சூழ்நிலையால் நேசிக்க தொடங்கும்போது அந்தப் பெண் விபத்தில் சிக்கிக்கொள்ளுதல்.

இன்னொரு நாயகன் நகுல் இயல்பிலேயே அறிவியல் ஆர்வம் கொண்டவராக இருப்பவர். சூரிய காந்தப்புயலால் செல்லிடப்பேசிகள் செயல்படாத சூழ்நிலையில் ஒரு கல்லூரி மாணவர்களுக்கு உதவும் நோக்கில் செல்லிடப்பேசிகள் செயல்பட வைக்க எடுக்கும் முயற்சிகள்.

இடையே தீவிரவாதத்தில் சிக்கிக்கொள்ளும் இன்னொரு துணைக்காதல். 


இந்த மூன்று கதைகளையும் ஒரு புள்ளியில் சேர்க்கும்  
சூரியனின் காந்தப்புயலால் செயல்படாமல் போகும் செல்லிட பேசிகள். 
இறுதியில் என்ன ஆனது? என்பதே கதை.

படத்தில் மிகவும் சுவாரசியமானது 
ஆங்காங்கே வரும் அறிவியல் விசயங்கள்.

சூரியனின் காந்தப்புயலால் செயல்படாமல் போகும் செல்லிட பேசிகள், செயல்பட வைக்க முயற்சிகள்.

  
சூரிய சக்தி ஈருருளி (Solar Bike),


எழுத்துக்களை மறைக்கவும் பின் வெளிக்கொண்டுவரவும் பயன்படும் ரசாயனம்,


மீத்தேன் வாயுவின் அழுத்த வேகம்,


உருளைக்கிழங்கிலிருந்து மின்சாரம் எடுத்து கடிகாரம் இயங்கச்செய்தல்,


மகனின் காதலியிடம் இரத்தக்குழு பற்றி கேட்டு பொருத்தம் பார்த்தல்,

தொலை இயக்கி (Remote) விளையாட்டு பொருளை குடும்பத்தலைவியே சரி செய்தல்,




ஸ்பெக்ட்ரம் அனலைசர் போன்ற கருவிகளின் பெயர்கள் புழக்கம்,


என பல்வேறு சின்னச்சின்ன அறிவியல் விசயங்கள் ஆங்காங்கே தரப்பட்டிருப்பது தமிழ் திரையில் ஒரு புது அனுபவம்.



கிரிக்கெட் டுக்கு பதில் கால்பந்து பற்றிய விவாதங்கள், சும்மா தான் இருக்கேன் நேசிக்கலாம் என்று நேசத்தை நகுல் வெளிப்படுத்தும் விதம்.



அந்த நாயகனின் வீட்டில் உள்ள ஒரு கடிகாரத்தில் கூட ஆச்சரியம் தரும் வகையில் 12 எண்களை ஒவ்வொன்றும் கணித, அறிவியல் சூத்திரத்தின்படி வைத்திருப்பார்கள்.


மேலுள்ள படத்தில் உள்ள கடிகாரத்தை உருப்பெருக்கி பார்த்தால் எந்த அளவிற்கு நுணுக்கமாக அறிவியல் சிந்தனைகளை தந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கீழே அந்த கடிகாரம் பெரிதாக்கப்பட்டு...


தமிழுக்கு நிச்சயம் எண் 1 ஐ அழுத்தலாம் 



                                                                                      தொடர்ந்து தேடுவோம்...

நன்றி  : திரு . செல்வராஜ்.

No comments:

Post a Comment