Wednesday 12 August 2015

சீனாவின் யுவான் மதிப்பு குறைப்பு எவ்வாறு நம்மைப் பாதிக்கும்?

சீனா தனது நாணய மதிப்பை இரண்டு சதவீத அளவு குறைத்துள்ளதாக நேற்று செய்தி வந்த பிறகு உலக சந்தையில் அதன் அதிர்வு அதிக அளவில் உணரப்பட்டது.


சீனாவின் நாணயம் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.



இது வரை வரலாற்றை புரட்டிப் பார்த்தால் உலகம் முழுமைக்கும் ஒரு பொதுவான நாணயம் என்றும் இருந்ததாக தெரியவில்லை. அது போல் நாணய மாற்று விகிதங்களுக்கு என்று பொதுவான விதிகள் இருந்ததாகவும் இல்லை.

யார் யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கு தக்கவாறு விதிகளும் மாற்றப்படுகின்றன.

இதனைத் தான் ரிசர்வ் வங்கி ராஜன் அடிக்கடி குறையாக குறிப்பிடுவார். செயற்கையாக செய்யப்படும் சில மாற்றங்கள் காலப்போக்கில் பெருமளவு சேதத்தை ஏற்படுத்தி விடுகின்றன. உண்மை தான்...

அப்படி ஒன்று தான் சீனாவின் நாணயமும்.

இதற்காக கொஞ்சம் நாணய வரலாற்றையும் திருப்பி பார்ப்போம். 

பிரிட்டிஷ் உலகின் முக்கால் பகுதியை காலனியாக வைத்து இருந்த போது தான் தங்கத்திற்கு ஏற்ப நாணயத்தை மாற்றும் குறையைக் கொண்டு வந்தது. அதற்கு முன்பு வரை பண்டமாற்று முறை தான் புழக்கத்தில் இருந்தது.

அதாவது பத்து ரூபாய் தாளை அச்சிட வேண்டும் என்றால் அதற்கு தக்க தங்க நாணயத்தை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். இது தான் பிரிட்டிஷ் விதி முறை.

ஆனால் இரண்டாம் உலகப் போர் வந்த போது அமெரிக்காவை தவிர மற்ற எல்லா நாடுகளும் பொருளாதார சீர்குலைவில் இருந்தது. இதனால் தங்களிடம் இருப்பில் இருந்த தங்கத்தை அடகு வைத்து அமெரிக்காவிடம் அதிக அளவில் கடன் பெற்றன.

இப்படியாக உலகின் பெரும்பகுதி தங்கமும் ஒரு கட்டத்தில் அமெரிக்காவிடம் வந்து சேர்ந்தது. 

இதனால் மற்ற நாடுகளிடம் நாணயம் பிரிண்ட் செய்ய தங்களிடம் தங்கம் இல்லாததால் அமெரிக்க டாலரை கையிருப்பில் வைத்து கொண்டு அதற்கு ஏற்றவாறு தங்கள் நாணயங்களை அச்சிட்டு வந்தன.

இந்த டாலர் புழக்கத்திற்கு ஏற்ப அமெரிக்கா தனது கையிருப்பில் தங்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட விதி முறையானது.

ஆனால் அமெரிக்காவிடம் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்று மற்ற நாடுகளிடம் தெரியாததால் இஷ்டத்துக்கு டாலரை பிரிண்ட் செய்து வந்தது.

ஒரு கட்டத்தில், 1970களில் அமெரிக்க அதிபர் நிச்சன் டாலர் சப்ளை அதிகமானதால் இனி அமெரிக்கா டாலருக்கு தக்க தங்கத்தை தராது என்று அறிவித்தார்.

இதனை நியாயம் இல்லாத படு அயோக்கியத்தனமான அறிவிப்பு என்று சொல்லலாம். இதனால் தான் சில சமயங்களில் அமெரிக்கா பஞ்சாயத்து பேச வந்தால் யோக்கியன் வருகிறான், செம்பை எடுத்து வை என்று தோன்றும்.

ஆனால் அந்த சமயத்தில் உலக நாடுகள் வலுவாகவும் இல்லை. அதே நேரத்தில் டாலரை தங்கள் இருப்பு நாணயமாக குவித்து வைத்து இருந்தன. இதனைக் கொண்டு போய் விற்றால் பழைய பேப்பர் கடையில் என்ன கிடைக்குமோ அது தான் கிடைக்கும். இதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதனால் பொருளாதார சீர்குலைவை தவிர்ப்பதற்காக தங்களுக்குள் கூடி ஒரு முடிவெடுத்தன. இனி டாலர் தான் உலக கரன்சி. அதற்கு ஏற்றவாறு சந்தையில் இருக்கும் டிமேண்ட், சப்ளைகேற்ப நமது நாணயங்களை மாற்றிக் கொள்வோம் என்பது தான் முடிவு..

இதனால் தற்போதும் டாலரைக் கொண்டு அமெரிக்காவிடம் கொடுத்தால் தங்கமோ, தகரமோ கிடைக்காது. ஆனால் அந்த டாலரை வாங்கி கொண்டு பெட்ரோல், அரிசி, பருப்பு சப்ளை செய்ய மற்ற நாடுகள் தயாராக இருகின்றன. இதனால் இன்னும் டாலர் மதிப்பு மிக்கதாகவே உள்ளது.

அமெரிக்கக்காரன் ஜாலியாக டாலரை பிரிண்ட் செய்கிறான். நாம் திருப்பூரில் பனியன் உற்பத்தி செய்து அமெரிக்காவிடம் விற்று அந்த டாலரை பெறுகிறோம். அந்த டாலரை வைத்து சவுதியிடம் பெட்ரோல் வாங்குகிறோம்.

இதனால் நோகாமல் நொங்கு குடிப்பதற்கு அமெரிக்காவை விட்டால் ஒரு நல்ல உதாரணம் கிடைக்காது.

இப்படி சந்தையில் நிலவும் தேவைக்கேற்ப தினமும் நாணய மதிப்பு மாறுவது என்பது எழுபதுகளில் தான் ஆரம்பித்தது. இதனை தான் Floating Exchange Rate என்று அழைக்கிறார்கள். இன்று இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த Floating முறை தான் பின்பற்றப்படுகிறது.

உதாரணத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தால் சந்தையில் ரூபாய் புழக்கம் அதிகமாகும். அன்று ரூபாயின் தேவை குறைந்து மதிப்பு குறையும். இது தான்  Floating முறையில் நடப்பது.



ஆனால் எழுபதுக்கு முன்னால் வரை பார்த்தால் அரசுகள் தங்கள் நாணயத்தை மதிப்பை தங்களிடம் இருக்கும் தங்கம், டாலருக்கு ஏற்றவாறு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தாங்களாகவே மாற்றி வந்தன. தினமும் மதிப்பு மாறாது. இதனை Fixed Exchange Rate என்று அழைத்தார்கள்.

இன்று பொருளாதாரத்தை அரசின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளும் சில கம்யூனிச நாடுகள் மட்டும் இந்த Fixed முறையைப் பின்பற்றி வருகின்றன. இதில் சீனாவின் யுவான் நாணயமும் உள்ளடங்கும்.


இன்றும் பொருளாதாரத்தை அரசின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளும் சில கம்யூனிச நாடுகள் மட்டும் இந்த Fixed முறையைப் பின்பற்றி வருகின்றன. இதில் சீனாவின் யுவான் நாணயமும் உள்ளடங்கும்.



சீனா தங்கள் நாணய மதிப்பைக் கூட்டுவதாக இருந்தால் தங்களிடம் உள்ள டாலரை விற்று யுவானை வெளிச்சந்தையில் இருந்து வாங்கும். இதனால் யுவானின் தேவை கூடி மதிப்பும் கூடி விடும்.

அது போல் யுவானின் மதிப்பைக் குறைப்பதாக இருந்தால் வெளியில் இருந்து டாலரை வாங்கி யுவானை அதிக புழக்கத்திற்கு விட்டு விடும்.

அப்படி என்றால், தற்போது யுவானின் நாணய மதிப்பு டாலருக்கு இரண்டு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றவாறு சந்தையில் சீனா மத்திய வங்கி டாலரை வாங்கியுள்ளது என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்.

இன்னொரு சந்தேகம் வரலாம். எல்லா நாடுகளும் தங்கள் நாணய மதிப்பை கூட்டத் தானே விரும்பும். ஆனால் சீனா ஏன் குறைக்க முயலுகிறது என்ற கேள்வி எழலாம்.

சீனாவை பொறுத்த வரை நிகர ஏற்றுமதி என்பது இறக்குமதியை விட மிகவும் அதிகம். இதனால் நாணய மதிப்பைக் குறைக்கும் போது அங்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கு அதிக யுவான் கிடைக்கும். அது அதிக அளவில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் உதவும்.

துவண்டு கிடக்கும் சீனாவின் ஏற்றுமதி பொருளாதரத்தை மீட்டெடுக்க இந்த நடவடிக்கை பெரிதும் உதவும்.

அதே நேரத்தில் ஏற்றுமதியாளர்கள் மற்ற நாடுகளின் தயாரிப்புகளோடு மலிவான விலையில் போட்டி போட முடியம். அதாவது தனது சீன மத்திய வங்கி தன்னுடைய சொந்த செலவில் ஏற்றுமதியாளருக்கு உதவ இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு, 100 யுவானுக்கு கடிகாரம் ஒன்றை ஏற்றுமதி செய்த சீன ஏற்றுமதியாளருக்கு தற்போது 102 யுவான் கிடைக்கும். அதே நேரத்தில் அவர் 100 யுவான் மதிப்புக்கு விற்றாலும் நஷ்டமில்லை. அதனால் விலையை இறக்கி மற்ற நாடுகளின் தயாரிப்புகளோடு போட்டி போட முடியும். இதனால் அவரது வியாபாரத்தையும் படுக்காமல் காப்பாற்ற முடியும்.

சரி. இந்தியாவை எப்படி பாதிக்கும் என்பதை பற்றியும் விரிவாக பார்ப்போம்.

இந்தியாவிலிருந்து துணி, கெமிக்கல் பொருட்கள் போன்றவை சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் அங்குள்ள யுவானின் வாங்கும் மதிப்புக்கு ஏற்றவாறு தான் நாம் டாலரில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது நம்முடைய நிறுவனங்களுக்கு குறைந்த டாலர் வருமானமே கிடைக்கும்.

அதே நேரத்தில் தாமிரம், இரும்பு போன்ற உலோகங்கள் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இவைகள் முன்பை விட குறைந்த விலையில் மலிவாக நமது சந்தைக்கு வர வாய்ப்பு உள்ளது. ஏன், சியோமி மொபைல் விலை கூட இதனால் குறையும்.

அப்படி வந்தால் நமது உற்பத்தியாளர்கள் போட்டி போடுவதற்காக அதற்கு ஏற்றவாறு விலையைக் குறைக்க வேண்டும். விலையைக் குறைத்தால் நமது நிறுவனங்களின் லாபம் பாதிக்கப்படும்.

இது இந்தியாவிற்கு மட்டுமல்ல, ஏற்றுமதியை சார்ந்து இருக்கும் பல நாடுகளுக்கும் சீனாவின் இந்த முடிவு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

பங்குச்சந்தையில் இருந்து பார்த்தால், டெக்ஸ்டைல், டயர், உலோகங்கள், எலெக்ட்ரிக்கல் உபகரணங்கள் போன்றவை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சீனாவின் இந்த முடிவால் பாதிப்பு ஏற்படலாம்.


மற்றொரு விதமாக பார்த்தால் சீனாவிற்கும் ஒரு எதிர்மறை பாதிப்பு உண்டு. பணவீக்கம் கணிசமாக கூடும். ஆனால் கட்டுபடுத்தப்பட்ட கம்யூனிச பொருளாதாரம் என்பதால் ரேஷனில் பொருளைக் கொடுத்தாவது விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள்.

இதனைக் காட்டிலும் ஏற்றுமதியைக் கூட்டி பொருளாதரத்தை நிலைப்படுத்த வேண்டும் என்பதே தற்போது அவர்கள் முக்கிய கொள்கையாக இருக்கிறது.

இதற்காக மற்றவர்கள் எப்படிப் போனாலும் கவலைப்படும் நிலையில் சீனர்கள் தற்போது இல்லை. ஆனால் தற்போது வலுவாக இருக்கும் சூழ்நிலையில் இந்தியா பெருமளவு பாதிக்கப்படாது என்றே நினைக்கிறோம்.

நன்றி : முதலீடு 

No comments:

Post a Comment