Tuesday 16 December 2014

அனைவருக்கும் அவசர எண் 108 பற்றி தெரியும் ஆனால் 104 பற்றி உங்களுக்கு தெரியுமா..?


104‘‘நாங்க இருக்கோம்’’இலவச அழைப்பு உதவி மையம் என்றால்  என்ன ?

104 மருத்துவ உதவி மையத்துக்கு ஓர் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர், ‘நான் ஒரு விவசாயி… எனக்கு கடன் தொல்லை தாங்கலை, நான் ரயில் தண்டவாளத்தில் தலைவைச்சு சாகப்போகிறேன்…’ என்றார். 

அந்த அழைப்பை எதிர்கொண்ட தகவல் மைய அலுவலர் பதற்றம் அடையாமல், அவரிடம் ஆறுதலாகப் பேச்சுக் கொடுத்தபடியே அவரது வயது, குடும்பத்தைப் பற்றி நிறையக் கேட்டார். பின்னர், ‘கண்ணை மூடி ரெண்டு நிமிஷம் அமைதியா இருங்க… நீங்க, இப்போ இறந்துட்டதா நினைச்சுக்குங்க… உங்க குடும்பம் என்ன செய்யும்? உங்க பசங்க நிலைமை என்ன ஆகும்?’ என்றார். எதிர்த்தரப்பில் அமைதி. சிறிது நேரத்தில் அந்த விவசாயி அழ ஆரம்பிக்க, அவரை ஆறுதல்படுத்தி, தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்டது 104 சேவை.
இரண்டு நாட்கள் கழித்து, ‘நான் மிகப் பெரிய தவறு செய்ய இருந்தேன். நல்ல வேளையாக என் மனதை மாற்றி உண்மை நிலையைப் புரியவைத்தீர்கள்’ என்று நன்றி தெரிவித்தார் அந்த விவசாயி.
100, 101, 108 என பல்வேறு சேவைகளைப் பற்றி நமக்குத் தெரியும். போலீஸ், தீ விபத்து, மருத்துவ உதவி போன்றவைகளுக்கு இந்த எண்களைத் தொடர்புகொண்டு உதவிகளைப் பெறலாம். அதில் புதிதாக இணைந்திருப்பதுதான் 104 சேவை. பலரது பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்டு, அதற்கான தீர்வைச் சொல்லும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த அற்புத சேவை மையம். அரசு உதவியோடு, எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஜி.வி.கே (#Emergency #Management and #Research#Institute & #GVK) என்ற நிறுவனம் இந்தச் சேவையை இயக்குகிறது. தமிழ்நாட்டு மக்கள் எந்த பகுதியிலிருந்தும், வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் (24/7) இந்தச் சேவையை இலவசமாகப் பெறலாம்.
இந்த மையத்தின் மேலாளர் பிரபுதாஸிடம் பேசினோம். ’104க்கு அழைப்பு வந்ததும், உடனடியாக தகவல் சேகரிக்கப்பட்டு, அது மனநல ஆலோசனைக்கா, மருத்துவ ஆலோசனைக்கா, அரசு மருத்துவ சேவைகளுக்கா என்று அழைப்புகளைத் தனித்தனியே பிரித்து, அதற்கான வல்லுநர்களிடம் அழைப்பை மாற்றி விடுவோம். பிறகு, தொடர்பு கொண்டவரின் பிரச்னைகளைக் கேட்டறிந்து அவருக்கான முதலுதவியும், ஆலோசனைகளும் வழங்கப்படும். உடல்நலப் பிரச்னைக்கான முதலுதவி மற்றும் ஆலோசனை காய்ச்சல், சளி, இருமல், வயிற்று வலி, வலிப்பு, வயிற்றுப் போக்கு, மாதவிலக்கு பிரச்னை, பிரசவ வலி, நாய்க்கடி, பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துகளின் கடிக்கான முதலுதவி, இரவில் திடீரெனத் தோன்றும் உடல் உபாதைகள், குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், விபத்துகள் போன்ற அனைத்துப் பிரச்னைகளுக்கும் முதலுதவிகளையும், மருத்துவ ஆலோசனைகளையும் பெறலாம்.

* மனநல ஆலோசனை 
சோர்வு, பயம், கோபம், தேர்வு பயம், மன அழுத்தம், மனச் சோர்வு, தற்கொலை எண்ணம், குடி மற்றும் புகைப் பழக்கத்துக்கு அடிமையானோருக்கான ஆலோசனை, தீய பழக்கத்தில் இருந்து தன் துணையைச் சரிசெய்வதற்கான ஆலோசனை, தாம்பத்ய உறவில் சிக்கல், துணையின் தவறான போக்கு, டென்ஷன், தம்பதியர்களின் உறவில் பிரச்னை, தூக்கமின்மை, குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் போன்ற அனைத்து மனப் பிரச்னைகளுக்கும் மனநல ஆலோசகர்கள் ஆலோசனைகளை வழங்குவர்.

* தகவல் மற்றும் விளக்கங்கள்
முதலுதவி பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம், ப்ளூ கிராஸ் குறித்த உதவிகள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள், சந்தேகங்கள், லேப் ரிப்போர்ட் விளக்கங்கள், மருந்்தகச் சீட்டிலுள்ள மருந்துகளின் தகவல்கள், மருத்துவமனைகள் அதைச் சார்ந்த சிறப்பு வல்லுநர்கள் போன்ற அனைத்துக்குமே 104 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
அரசு தொடர்பான புகார்
அரசு மருத்துவமனைகளில் ஏதேனும் சேவையில் பிரச்னையோ, குறையோ என்றால்கூட, 104க்கு அழைக் கலாம். அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை, மருத்துவ வசதிகள் இல்லை, மருந்துகள் இல்லை போன்ற அனைத்துப் புகார்களுக்கும் இந்த 104ஐ தொடர்பு கொள்ளலாம். பிரச்னைகளைப் பதிவு செய்ததும், உடனடியாக அந்தப் பிரச்னைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இங்கு வரும் அழைப்புகளில் 90 சதவிகிதம் குடிப்பழக்கம் மற்றும் தாம்பத்ய உறவு சார்ந்த பிரச்னைகளே. மாணவர்கள் சிலர் பரீட்சை குறித்த பயத்துக்கும் அழைப்பது உண்டு.
இந்த இலவச அழைப்பு உதவித் திட்டத்தினால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. மருத்துவத் தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதால், மக்களுக்கு உடல் மற்றும் மனநலப் பிரச்னைகளிலிருந்து தீர்வுகள் கிடைக்கின்றன.

சேவை அலுவலகம்:
104 அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் அனைவரும் டாக்டர் கோட், தலையில் ஹெட்போனுடனேயே தொலை பேசியில் அழைத்தோருக்கு ஆலோசனைகளை வழங்கி கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மருத்துவம் தொடர்பான அனுபவத்தைப் பெற்றவர்கள். இந்த மையத்தில் 50 முதல் 60 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். மூன்று ஷிஃப்டாகப் பிரித்து, 24 மணி நேரமும் (24/7) மக்களுக்கு முதலுதவிகளையும், ஆலோசனை களையும் வழங்கி வருகின்றனர் என்பது சிறப்பு.
104க்கு ஒரு சல்யூட்!

No comments:

Post a Comment