Sunday 19 January 2014

பாலைவனப் பகுதி மக்களின் பிரதான பழமாம் பேரீச்சம்பழம் பற்றிய சிறப்பு பார்வை..

யற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. 
இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இது ஆப்பிரிக்கா, அரபு நாடுகளில் மட்டுமே அதிகம் விளைகின்றது.   


வெப்பம் அதிகமுள்ள பாலைவனப் பகுதிகள் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். இதற்கேற்ற தட்ப வெப்ப நிலை நம் நாட்டில் இல்லாததால் இங்கு விளைவதில்லை. இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். அரபு மக்களின் உணவுப் பொருட்களில் இதுவே முக்கிய இடம் பெறுகின்றது.

ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, விட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் விட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதன் காய் கர்ச்சூரக்காய் என்று வழங்கப் படுகின்றது.
பேரீந்தெனுங்கனிக்குப் பித்தமத மூர்ச்சை சுரம்
நீரார்ந்த ஐயம் நெடுந்தாகம் - பேரா
இரத்தபித்த நீரழிவி லைப்பறும் அரோசி
உரத்த மலக் கட்டுமறும் ஓது.
- அகத்தியர் குணபாடம்

கண்பார்வை தெளிவடைய...
பொதுவாக நம் இந்திய குழந்தைகளில் 42 சதவீதம் பேர் கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பழம் 2 ஐ தினமும் இரவு உணவுக்குப் பின் உண்டு 200 மி.லீ. பசும்பால் குடித்து வந்தால் உடல் உறுதி அடையும். கண்நோய்கட்டு மட்டுமன்றிதோலும்  மென்மை பெறும்.பல் நோய்களும் தீரும்.


குருதிக் கழிச்சல் போக
காய்களைப் பிளந்து விதையை நீக்கி அதற்குள் சுக்கு, மாம்பருப்பு, சிறுநாகப்பூ, கசகசா வகைக்கு 30 கி எடுத்து தூள் செய்து சுண்டை அளவு உருட்டி தினம் 23 உருண்டை வீதம் நாளொன்றுக்கு 34 வேளை கொடுக்க குருதிக்கழிச்சல் போகும்.


கழிச்சலை உண்டாக்க
பேரீச்சங்காய், கொட்டை, திராட்சை, சீரகம், ஓமம்,சீந்தில் தண்டு, வெட்டிவேர், நிலாவாரை, அதிமதுரம்  கடுகுரோகினி இவை சம எடை கொண்டு முறைப்படி குடிநீராக்கி 40 மி.லீ. வீதம் சிறிது பனங்கற்கண்டும் உப்பும் சேர்த்து ஒருவேளை காலையில் கொடுக்க கழிச்சல் உண்டாகும்.


மெலிந்த குழந்தைகளுக்கு...
சில குழந்தைகள் எதைச் சாப்பிட்டாலும் உடல் பெருக்காமல் மெலிந்தே காணப்படுவார்கள். பள்ளிக்குச் சென்று வந்தவுடன் கால் முட்டிகளில் வலி ஏற்படுவதாகச் சொல்வார்கள். எவ்வளவுதான் மருந்துகள் கொடுத்தாலும் இவர்கள் தேறாமல் இருப்பார்கள். இதை ஆங்கில மருத்துவரிடம் காண்பித்தால் சாதாரண வலி என்று கூறுவார்கள். ஆனால் சித்த மருத்துவர்கள் இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்பட ஈரல் பாதிப்பு ஒரு காரணம் என்கின்றனர்.
வர்ம பரிகார நூல்கள் கூட கால்சியம் சத்து குறைவால் ஈரல் பாதிப்பு ஏற்படும் என்கிறது. இந்த பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
பெண்களுக்கு...

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது.


இளமையில் நின்றுபோன மாதவிலக்கு ஏற்பட பாதாம்பருப்பு 40 கி, உலர்ந்த திராட்சை 100 கி, தேங்காய்ப் பருப்பு 70 கி, பேரீச்சம்பழம் 8, இந் நான்கினையும் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொண்டு வெறும் வயிற்றிலே அவ்வப்போது அருந்திவந்தால் இளமையிலே நின்றுபோன மாதவிடாய் தோன்றும்.


 மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.


குடற்புண்ணுக்கு இஞ்சி லேகியம்...
இஞ்சி 1 1/2 கிலோ தோல் சீவி 6 படி நீர்விட்டு நீர்சுண்டக் காய்ச்சி நன்றாக வெந்தபின் கீழிறக்கி ஆறவிட்டு அதனை அம்மியிலிட்டு மைபோலரைத்து வைத்துக்கொள்ளவும். பேரீச்சம்பழம் விதை நீக்கி 3 கிலோ எடுத்து சிறிது நெய்விட்டு வதக்கி எடுத்துக் கல்லுரலில் இட்டு நன்றாய் இடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும் சீனி 3 கிலோ, பசுநெய் 1/2 லீற், ஏலரிசிப் பொடி 20 கி,தேன் 1 1/2 இறா.


இஞ்சி, பேரீச்சம்பழம்,சீனி மூன்றையும் ஒரு சட்டியிலிட்டு நன்றாக கிளறி நன்றாய் உறவாகிய பின் ஏலரிசிப்பொடியை சேர்த்துக் கிளறி அப்பால் நெய்யையும் தேனையும் சேர்த்து நன்றாக கிண்டி ஒரு ஜாடியில் பத்திரப்படுத்தவும் இதில் 510 கி எடை காலை, மாலை தனியாகவேனும் சாப்பிட பசியின்மை, சுவையின்மை, மலச்சிக்கல், வயிற்றுப்பொருமல், வாந்தி, வாய்நீர் ஊறல், கிறுகிறுப்பு இவைகளும் தீரும்(அனுபவமுறை)



தேமலுக்கு..
பேரீச்சம்பழத்தை அனல்மீது காட்டிச் சுட்டு நீர்விட்டுப் பசைபோல அரைத்துத் தேமல் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் தேமல் குணமாகும்.


நாவரட்சிக்கு..
கொட்டை முந்திரிச்சாறு 1/4 படி கொண்டு அதில் உலர்ந்த பேரீந்தும் இலந்தைக் கொட்டைச் சதையும் கூட்டில் பிசைந்து வடித்த நீரை அடிக்கடி பருக உதடு நா வரண்டுபோதல் தணியும்.


சளி இருமலுக்கு...
பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

சிற்றரத்தை, பேரீச்சங்காய், சுக்கு, அதிமதுரம், வகைக்கு 7.5 கி நறுக்கி ஒரு சீலையில் தளர்ச்சியாக முடிந்து அதனை 1/4 படி பசுவின் பாலில் போட்டு மீண்டும் 1/4 படி தண்ணீர் விட்டு சிறு தீயில் எரித்து விட்ட தண்ணீர் சுண்டக் கவனித்து வடித்து 15 கி கற்கண்டைப் போட்டுக் கலக்கி காலை, மாலை குடிக்க  7நாட்களில் நாட்பட்ட இருமலும் குணமாகும்.



ஆண்மைக் குறைவிற்கு...
பேரீச்சம்பழத்தை தேனில் ஊறவைத்து இரவில் நாள்தோறும் 2 எடுத்துச் சாப்பிட்டு வரலாம்.


பேரீச்சம்பழம்,பாதாம்பருப்பு, பிஸ்தாப்பருப்பு சம எடை முறைப்படி குடிநீர் செய்து காலை மாலை பருகலாம்.


கொட்டைப்பாக்கையும் பேரீச்சம்பழத்தின் கொட்டையையும் சந்தனக் கல்லின்மீது நீர்விட்டுச் சந்தனம் போலரைத்து சம எடையாகக்கூட்டிக் களிபோல் கிளறி அடை தட்டி நெய்யில் வடைபோல சுட்டு எடுத்து தேனில் ஊறப்போட்டு வேளைக்கு 100 மி.கி.எடை காலை மாலை சாப்பிடலாம்.


காலை உணவுடன் 3பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வெந்நீர் அருந்த வேண்டும். இரவு உணவுக்குப்பின் 12 பழங்களை உட்கொண்டு பசும்பால் பருகவேண்டும். இவ்வாறு தொடர்ந்து 60நாட்கள் சாப்பிடவேண்டும். இந்நாட்களில் தயிர்,குளிர்பானம், கடலைவகை, எண்ணெய்ப்பண்டம். பழையசாதம் , உடலுறவு இவற்றைத் தவிர்க்கவேண்டும்.


நரம்பு தளர்ச்சி நீங்க...
அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

மாலை நேரத்தில் கண்பார்வைக் குறைபாடு கொண்டவர்களை கப உடம்பு சூலை நோய் என்பார்கள். சளியானது கண்ணில் படிந்து மாலைக்கண் நோய் ஏற்படச் செய்கின்றது. இதற்கு தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிடுவது சாலச் சிறந்தது.


இவ்வாறு சத்துக்கள் நிறைந்த பேரீச்சம் பழத்தை தினமும் உண்டு வந்தால் தீராத நோய்களும் நம்மை விட்டு நீங்கிச் சென்று விடும்.


ஆக்கம் & தொகுப்பு : .தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment