Sunday 29 September 2013

பாம்புகள் பற்றிய விழிப்புணர்வு ஆய்வு !!! ஒரு சிறப்பு பார்வை....

பாம்பு என்றால் படையும் நடுங்கும், என்ற பழமொழி அதன் தோற்றத்திலும், விஷம் சார்ந்தும் வருவது, நமது சமூகத்தில் பாம்பு கடிக்கு இறப்பவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பயத்திலும், சரியான சிகிச்சை இல்லாமையாலும் இறக்கிறார்கள் என்பது அதிர்ச்சியான உண்மை.விலங்குகளிலேயே பாம்புகளின் மேல்தான் அதிகமான மூடநம்பிக்கைகளை மக்கள் கொண்டுள்ளனர். 


பாம்பு என்ற சொல் இந்திய சமூகத்தில் இரு வேறு கருத்து நிலைகளில் பார்க்கப்படுகிறது. முதலாவதாக, கடவுளாக கடவுகளின் அவதாரமாக, விசேட நாட்களில் பூசை செய்வது, பயபக்தியுடன் பாம்பை வணங்குவது, பாம்பின் இயல்பான உணவில் இல்லாத (முட்டை, பால்) பொருட்களை படைப்பது என பாம்பை இறை நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.


அடுத்தாக, அச்சத்தின் குறியீடாக, பார்க்கும் இடத்தில் கையில் கிடைக்கும் பொருளைக்(கம்பு, தடி) கொண்டு பல பேர் சூழ்ந்து அடித்துக் கொல்கின்றனர். 

இறைநிலையில் வைத்து வணங்ககப் பெறும் காட்டுயிர், நேரில் பார்க்கும் போது கொல்வது- என முரணான (அ) எதிர் நிலைப்பட்ட கருத்துக்கள் இந்திய சமூகத்தில் மக்களிடையே நிலவ எது காரணம்? பன்னெடுங்காலமாக மக்கள் மனதில் புரையோடி இருக்கும் மூட நம்பிக்கைகள் , பழமைவாத கருத்துகள் முன்பிறவி, மறுஜென்மம், பாவம், புண்ணியம் போன்ற அச்சமூட்டும், மக்களை பயத்தில் ஆழ்த்தும் கருத்துக்கள் போன்றவைகளால் மக்களின் உளவியல் சீர்கெட்டுள்ளது.

விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளோ, தேடல்களோ இல்லாதது, எதையும் ஏன்? என்ற கேள்வியுடன் விவாதமோ இல்லாதது மட்டுமல்லாது, மக்களை அறியாமையில் ஆழ்த்தியிருக்கும் அரசியல்வாதிகளும் மக்களின் உளவிய்ல் சீர்கேட்டிற்கு முக்கிய காரணங்களாகும்.
அந்த வகையில், தோழர், ச.முகமது அலி எழுத்தில் வெளி வந்துள்ளது பாம்பு என்றால்? நூல் முக்கிய இடத்தை பெறுகிறது.
கடந்த 35 ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்காகவும், காட்டுயிர்களுக்காகவும் தொடர்ந்து பணியற்றி வரும், இடதுசாரி சிந்தனையாளரும், பெரியாரியவாதியுமான தோழர்.ச.முகமது அலி, ஏற்கனவே " நெருப்புக் குழியில் குருவி", " அழியும் பேருயிர் யானைகள்", "இயற்கை செய்திகள், சிந்தனைகள்" போன்ற நூல்கள் வழியாக தமிழக வாசகர்களுக்கு அறிமுகமானவரே.

பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன ? 

உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?
ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .

ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.
பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.


பாம்புகள் வரலாறு :
                                            பாம்புகளை பற்றிய பழமைவாத கருத்துக்கள், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக, அறிவியல்துறை கொண்டு, தரவுகளின் அடிப்படையில் கருத்துகளை நூலில் பதிவு செய்துள்ளார். பாம்புகளின் பரிணாமம், வாழ்வியல், நடத்தைகள் என தலைமுறைகளில் பறந்த தளங்களில் விரிகிறது.

13 கோடி வருடங்களுக்கு முன்பு உருவானதாக கருதப்படும் பாம்புகள் , உலகம் முழுக்க சுமார் 3000 வகைகளாக பரவியுள்ளன (பக்.9) என்று கூறும் ஆசிரியர், இ.ந்தியாவில் காணப்படும் 270 வகைப் பாம்புகளில் 4 வகை பாம்புகள் மட்டுமே விஷத்தன்மை வாய்ந்தது, (பக்.29) என கூறி பொது புத்தியில் பதிந்துள்ள கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சீரிக்கும், பாம்புக்கும் போராட்டம் நடக்கும் போது, பாம்பு , கீரியை கடித்து விட்டால் விஷம் பரவாமல் இருக்க ஒரு வகை வேரைத் தின்று, வேரில் புரளும் என்பதெல்லாம் புகழ்பெற்ற பொய்களே, கீரி, பாம்பை தன் உணவுக்காக பிடிக்க முற்படும் போது மிக விரைவாக, லாவகமாக செயல்பட்டு, அதன் கடியிலிருந்து தப்பித்துக் கொள்வதுடன் இறையையும் வெற்றிகரமாகக் கொல்கிறது. (பக்.100 என்று பாம்புகள் மேலிருக்கும் பொய்களை தோலுரித்துக் காட்டுகிறார்.

உலகிலேயே நீளமான பாம்பு -17 மீட்டர் நீளமுள்ள ஆசிய பாம்பு இவற்றிற்கு விஷம் இல்லை. உலகிலேயே மிக சிறிய பாம்பு-17செ.மீட்டர் நீளமுள்ள சிறு பாம்பு இவை நமது தமிழ்நாட்டிலும் காணப்படுகிறது. பாம்புகளின் ஆயுள் சராசரி 20 வருடம் வரை அரிதாக 30 ஆண்டுகள் வரை உயிர் வாழலாம். சிறு பாம்பு- மண்புழவைப் போல் ஆணின் துணையின்றியே குட்டிகளை பெற முடியும். பாம்புகள் 100 முதல் 700 அதிர்வெண் வரை, ஒலியை உணரும் சக்தி படைத்தவை.



 உலகளவில் 2,968 வகையான பாம்புகள் உள்ளன. இதில், இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பாம்பு வகையில் நான்கு மட்டுமே விஷமுள்ளவை. அவைகள் நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் மற்றும் சுருட்டை விரியன். நல்லபாம்பு: பழுப்பு, மஞ்சள் அல்லது கறுப்பு நிறங்களை கொண்ட நல்ல பாம்பு படம் எடுக்கும் தன்மை கொண்டது. ஒரு மீட்டர் நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 2.2 மீட்டர் நீளம் வரை வளரும். இவைகள் எலி வலை மற்றும் கரையான் புற்றுகளில் வாழும். நல்ல பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தையும், சுவாச மண்டலத்தையும் தாக்கி மரணம் விளைவிக்கக் 

கூடியது

பாம்புகள் பெரும்பாலும் இருட்டிய பிறகே இரை தேடப் புறப்படுகின்றன. எலி, தவளை, சிறுசிறு பூச்சிகள், மற்ற பறவைகளின் முட்டைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் மற்ற வகைப் பாம்புகளையே உண்ணக் கூடியவை. பாம்புகளில் மிகவும் எடையும், வலுவும், நீளமும், கொண்டவை மலைப்பாம்புகள்.

கட்டுவிரியன்: இரவு நேரங்களில் மட்டுமே இரை தேடி செல்லும் இந்த வகை பாம்பு மேல்புறம் பளபளக்கும் கறுமை நிறத்துடன் வால் வரை தொடரும் மெல்லிய வெள்ளைக் குறுக்கு கோடுகளும் காணப்படும். பாம்பின் கீழ்புறம் வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் கொண்டதாக காணப்படும். இதன் நாக்கு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது 1.75 மீட்டர் நீளம் வரை வளரும். கரையான் புற்று, எலி வலை, கற்குவியலில் இவைகள் வாழ்ந்தாலும் நிலத்தில் வாழும் பாம்புகளுக்கு மட்டுமே வீரியம் அதிகம். இந்த பாம்பின் விஷம் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. 


கண்ணாடி விரியன்: இரவு நேரத்தில் காணப்படக்கூடிய இந்த பாம்பின் தலை முக்கோண வடிவில் இருக்கும். கண்ணின் பாவை நெடு நீள வடிவத்திலிருக்கும். பழுப்பு அல்லது மஞ்சளம் கலந்த பழுப்பு நிறத்தில் உள்ள இந்த பாம்புகளின் மேல்புறம் பழுப்பு அல்லது மஞ்சள் நிற வட்ட வடிவம் காணப்படும். இது 1.80 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. முட்புதர் மற்றும் மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும். மிக நீளமான விஷப் பற்களை கொண்ட இந்த பாம்பிம் விஷம் இதயத் திசுக்களையும், ரத்த ஓட்ட அமைப்பினையும் தாக்கி மரணம் விளைவிக்க கூடியது. இந்த வகை பாம்பும் சென்னை புறநகரில் மிகக்குறைந்த அளவே காணப்படுகின்றன


சுருட்டை விரியன்: இந்த பாம்பின் கண்கள் மிகப்பெரியதாக காணப்படும். வெளிர் மற்றும் அடர் பழுப்பு செந்நிறம், சாம்பல் அல்லது மணல் நிறத்துடன் உடலின் மேற்புறத்தில் வளைவு வடிவங்களை கொண்டு காணப்படும். இதன் தலையின் மேற்புறம் அம்பு வடிவம் காணப்படும். 50 செ.மீ., நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 80 செ.மீ., நீளம் வரை வளரக் கூடியது. வறண்ட பரந்த நிலப்பரப்புகள் மற்றும் அதிக மழை பெய்யும் மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும். பகல் நேரத்தில் இந்த பாம்புகள் மரப்பட்டைகள், கற்களுக்கு இடையிலும் கற்றாழை போன்ற செடிகள் அடியிலும் காணப்படும். இந்த பாம்பின் விஷம் ரத்த மண்டலத்தை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தென்சென்னை கடற்கரை பகுதிகளில் இந்த வகை பாம்புகள் ஓரளவு காணப்படுகின்றன.


தங்கத்தை விட மதிப்பானது விஷம்: வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாம்புகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசின் அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்றை பிடித்தலோ, அடித்து கொன்றாலோ அல்லது ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றாலோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏனெனில் பாம்புகள் தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கது. அவைகள் மனிதர்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகின்றன. 


பாம்பு விஷம் மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு கிராம் நல்லபாம்பு விஷம் 28 ஆயிரம் ரூபாய்; கட்டுவிரியன் விஷம் 30 ஆயிரம் ரூபாய்; கண்ணாடி விரியன் விஷம் 40 ஆயிரம் ரூபாய், சுருட்டை விரியன் 45 ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்படுகின்றன.விஷமற்ற பாம்புகள்: சென்னை மற்றும் புறநகரில் விஷமற்ற பாம்புகளான சாரைப்பாம்பு, நீர்சாரை அதிகம் காணப்படுகின்றன. இது தவிர வெள்ளிக்கோல் வரையன், பச்சை பாம்பு, கொம்பேறி மூக்கன், மண்ணுளி பாம்பு, பவழப்பாம்பு, அழகு பாம்பு, பிரைடல் பாம்பு, நீர்காத்தான்குட்டி, பசுஞ்சாம்பல் நிற தண்ணீர் பாம்பு, சிறு பாம்பு போன்றவை சென்னை நகரில் சிறிதளவே காணப்படுகின்றன.பாம்புகள் பற்றிய தகவல்கள்: மனித இனத்திற்கு முன்பே தோன்றியவை பாம்புகள். இவைகள் பெரும்பாலும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். ஆனால், கண்ணாடிவிரியன், பச்சை பாம்பு போன்ற சில வகைகள் குட்டி போடும். நல்ல பாம்பு முட்டையிட்டு குட்டிகள் வெளி வரும் வரை பாதுகாக்கிறது. பாம்புகள் சுற்றுப்புறத்தில் உள்ள வாசனைகளை உணரவே நாக்கை அடிக்கடி வெளியில் நீட்டும். பாம்புகளால் ஒலி அலை உணர இயலாது. அதற்கு வெளிக்காது மற்றும் நடுக்காது அமைப்புகள் இல்லை. அதன் உடல் வளர்ச்சி காரணமாகவே அதன் மேற்தோல்களை உரித்துக் கொள்கின்றன.


விஷமுள்ள, விஷமற்ற பாம்புகள் கண்டறிவது எப்படி:
                                                                                                                  பாம்பின் வால் குறுக்கு வாக்கில் தட்டையாக அமைந்து இறுதியில் அகன்று இருந்தால் அது விஷமுள்ள கடற்பாம்பு வகையாகும்.* பாம்பின் வால் பகுதி உருளை வடிவில் அமைந்து, வயிற்று புற செதில்கள் விரிந்து காணப்பட்டு, தலையில் சிறு சிறு செதில்கள் இருந்தால் அது விஷமுள்ள விரியன் பாம்பு வகைகள்.* கண்ணுக்கும், மூக்கு துவாரத்திற்கும் இடையே சிறு குழி காணப்பட்டால் அது விஷமுள்ள குழிவிரியன் வகையாகும்.* பாம்பின் முதுகின் நடுவில் உள்ள செதில்கள் அறுங்கோண வடிவில் அமைந்து, பிற செதில்களை விட பெரியதாக இருந்து, கீழ் உதட்டு செதில் பெரியதாக இருந்தால் விஷமுள்ள கட்டுவிரியன் வகையை சேர்ந்ததாகும்.* வயிற்றுபுறம் விரிந்து காணப்படாமல் இருந்தால் அது விஷமற்ற பாம்புகளாகும்.* தலைப் பகுதியில் பெரிய கவசத்தால் தகடுகள் அமைந்து சாதாரணமாக காணப்பட்டால் அவைகள் விஷமற்றவைகள்.பாம்புகள் பற்றிய மூட நம்பிக்கை:* நல்ல பாம்பு மகுடியின் இசைக்கேற்ப படம் எடுத்து ஆடும்.* நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் ஒரே இனத்தை சேர்ந்த ஆண், பெண் பாம்புகள்.* நல்ல பாம்பு மிகவும் வயதானவுடன் தன் தலையில் மாணிக்ககல் வைத்திருக்கும்.* நல்ல பாம்பையோ அல்லது வேறு வகை பாம்பையோ கொன்றுவிட்டால் அதன் ஜோடி கொன்றவரை பழி வாங்கும் என்பது.* பாம்புகள் வழவழப்பாக இருக்கும்.* பாம்புகள் பாலை விரும்பி குடிக்கும்.* மண்ணுளிப் பாம்புகளுக்கு இரண்டு தலைகள் உண்டு. அவைகள் கடித்தால் தொழுநோய் வரும்.* பச்சைப் பாம்பு கண்களை கொத்தும்.* கொம்பேறி மூக்கன் மனிதனை கடித்து கொன்று விட்டு, மரத்தில் ஏறி அந்த மனிதன் உடல் எரிப்பதை பார்க்கும். இவ்வாறு கூறப்படும் அனைத்தும் கட்டுக் கதைகள். சிலரால் பரப்பப்பட்ட மூட நம்பிக்கைகள்.இரை தேடி செல்லும் இந்த வகை பாம்பு மேல்புறம் பளபளக்கும் கறுமை நிறத்துடன் வால் வரை தொடரும் மெல்லிய வெள்ளைக் குறுக்கு கோடுகளும் காணப்படும். பாம்பின் கீழ்புறம் வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் கொண்டதாக காணப்படும். இதன் நாக்கு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது 1.75 மீட்டர் நீளம் வரை வளரும். கரையான் புற்று, எலி வலை, கற்குவியலில் இவைகள் வாழ்ந்தாலும் நிலத்தில் வாழும் பாம்புகளுக்கு மட்டுமே வீரியம் அதிகம். இந்த பாம்பின் விஷம் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது.

பாம்
பின்பண்புகள் :
                                   பாம்புகள் அந்த இனங்களிலேயே தங்களுக்கு இணைகளைத் தேடிக் கொள்கின்றன. பாம்புகள் முட்டையிட்டு அடைகாக்கும் தன்மை கொண்டன. பெரும்பாலும் ஆண் பாம்புகளே அடை காக்கின்றன. இடத்திற்கும், தட்ப வெப்ப நிலைக்கும் ஏற்ப பாம்புகள் வெண்மை, மஞ்சள், கருமை, நீலம், பச்சை, சிவப்பு, பழுப்பு மற்றும் பல வண்ணங்களில் மணமும் பல வகையாக உள்ளன.


பாம்புகளுக்கு காதுகள் கிடையாது பாம்பின் கால் பாம்பறியும், கட்செவி போன்றவை பாம்பைப் பற்றி ஆராய்ச்சி அறிவு இல்லாத காலத்தில் கூறப்பட்டவையாகும். பாம்பாட்டி மகுடியை அப்படியும் இப்படியும் அசைத்து ஆட்டும் போது பாம்பும் தன் பார்வையை மகுடி மீது செலுத்தி அதற்கேற்றவாறு அசைவதைத்தான் “மகுடியின் இசையில் தான் பாம்பு ஆடுகிறது” என்று தவறாகக் கூறுகிறார்கள்.


பாம்பு தன் அடி வயிற்றிலுள்ள செதில்கள் போன்ற அமைப்பு மூலம் தரையைப் பற்றி (மண்புழு போன்றே) முன்னுக்கு நகர்கிறது. மண்புழுவிற்கு முன் பக்கம் மட்டுமே அந்த அமைப்பு உள்ளது. ஆனால், பாம்புக்கோ கழுத்திலிருந்து வால் வரை செதில் அமைப்பு உண்டு. இதனால் தான் மிக வேகமாக நகர முடிகிறது.


பாம்புகளுக்கு அதிர்வுகளை உணரும் திறன் உண்டு. மனிதனோ, விலங்கோ, நெருங்கும் போது, நிலத்தில் ஏற்படும் அதிர்வலைகளைப் பாம்புகள் தங்கள் வயிற்றுப்புறச் செதில்கள் மூலம் உணர்ந்து அதற்கேற்றவாறு தன் திசையை மாற்றி எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளும்.


பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்டு கம்பிகள் போல் இருக்கும். எனவே, பாம்பு பாலையோ நீரையோ நக்கிக் குடித்திட முடியாது. கிண்ணத்தில் பாலை வைத்தால் பாம்பு உறிஞ்சிக் குடிக்கிறது என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இது மிகவும் அறியாமையாகும். பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும்போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத்திணறிச் செத்து விடும். இதை அறியாதோர்தான் பாம்பு பால் குடிக்கிறது என்று தவறாகச் சொல்லி வருகின்றனர்.


மேலும் முட்டையைக் கூட உடைத்து உறிஞ்சிக் குடிப்பதாகவும் பக்தர்கள் சரடு விடுகிறார்கள். பாம்பு இரையை (எலி, தவளை போன்றவற்றை) அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு கிடையாது. எனவே முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சிக் குடிக்காது.


பாம்புகள் அதன் இனத்திலேயே இணைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், நல்ல பாம்பும், சாரைப்பாம்பும் தான் இணைகின்றன என்ற தவறான கருத்தினைக் கூறி வருகிறார்கள். பறக்கக் கூடிய பறவைகள் எல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்திருப்பதால் கோழி, கொக்குடன் இணையுமா? கழுகு, வவ்வாலுடன் இணையுமா? காக்கை குயிலுடன் இணை யுமா? குருவி, கரிச்சானோடு இணையுமா? வாத்து வான்கோழியுடன் இணையுமா? இவை எப்படிச் சாத்தியமில்லையோ அப்படித் தான் பாம்பின் சேர்க்கையும் ஆகும்.



பாம்பு கடித்துவிட்டால், பாம்புக்கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

"பாம்புக்கடி" பற்றிய சில தகவல்கள்:

கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதென்றால், இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல.

கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதிந்த்து காணப்படுகிறதென்றால், கடித்த இடம் சற்று தடித்து (வீங்கி) கடுமையான வலி உண்டானால், இந்த அறிகுறி விஷப்பாம்பு கடியாகத்தான் இருக்கும்.

பாம்பு கடிக்கு முதலுதவி :
                                              பாம்புகளில் நச்சு சுரப்பி, உமிழ்நீர் சுரப்பியிலிருந்து தோன்றியதாகும். விஷமுள்ள பாம்புகளின் கடி அனைத்துமே உயிரிழக்க செய்வதில்லை. விஷப் பாம்பு கடியின் பாதிப்பு உடலில் செல்லும் விஷத்தின் அளவைப் பொருத்தே அமையும். பாம்புக் கடியால் ஏற்படும் பல மரணங்கள் விஷத்தினால் ஏற்படுவதில்லை. அதிர்ச்சியினால் ஏற்படுவதாகும். எனவே, பாம்பு கடி பட்டவரை அதிர்ச்சியடையாமல் பார்த்து கொள்ள வேண்டும். கடிபட்ட இடத்திற்கு மேல் ரத்த ஓட்டம் தடைபடாத வகையில் கட்டு போட வேண்டும். பாம்பு கடிபட்டவரை விஷமுறிவு சிகிச்சையளிக்கு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்.

இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.

காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.

பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது

இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டி எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ அந்த அளவிற்கு அவரைக் காப்பாற்றும் வாய்ப்புள்ளது.

பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல் அரசு 
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.

பாம்பு கடித்து உடலில் விஷம் பரவிவிட்டால் கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்.


நன்றி : பாம்புகளை பற்றிய எண்ணற்ற செய்திகளையும், தகவல்களையும் கூறி, பாம்புகளை பற்றிய நேர்மறை கருத்துக்களை மனதில் ஏற்படுத்திய நூலாசிரியர் தோழர்.ச.முகமது அலி. 

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment