Monday 23 September 2013

சென்னையில் கருமுட்டை தானம் செய்யும் வாடகைத் தாய்மார்கள் அதிகரிப்பு !! ஒரு சிறப்பு பார்வை....


undefined திருமணம் செய்து கொள்ளும் ஒவ்வொரு ஜோடியின் கனவுகளும் தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றியதாகவே இருப்பது இயல்பு, திருமணம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை பல இணையர்களுக்கு உள்ளது. ஆண்களின் உயிரணுக்கள் போதிய அளவில் இருந்தபோதும், சில பெண்களின் உடலமைப்பில் கருத்தரிக்க முடியாத நிலை உள்ளதால், இவர்களுக்கு வாரிசு இல்லாமல் போகும் நிலை ஏற்படுகிறது.இதைப் போக்க நவீன மருத்துவ வளர்ச்சியில் கணவனின் உயிரணுக்களை, ஒரு வாடகைத் தாயின் கருப்பையில் செலுத்தி வாரிசு உருவாக்கும் முறை தற்போது உலகின் பல நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இதற்காக வெளிநாடுகளில் வாழும் இணையர்கள் அதிக அளவில் சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளனர். 

இந்தியாவில் 1986-ம் ஆண்டுக்கு பிறகுதான் பெண்கள் கருமுட்டை தானம் செய்வது பிரபலம் ஆனது. கருமுட்டை தானம் செய்வது தொடர்பாக சட்ட விதிமுறைகள் எதுவும் இல்லை என்றாலும் கூட ஒரு பெண் 6 தடவைக்கு மேல் கருமுட்டை தானம் செய்வது அவரது உடலுக்கு நல்லது அல்ல என்றும், ஒரு முறை தானம் செய்வதற்கும், அடுத்த முறைக்கும் குறைந்த பட்சம் 6 மாதங்களாவது இடைவெளி இருக்க வேண்டும்.

ஆண்கள் தங்கள் உயிர் அணுக்களை எத்தனை முறை வேண்டுமானாலும் தானம் செய்யலாம். அதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் கருமுட்டை தானம் செய்யும் பெண்ணுக்கு நிறைய மருந்துகளும், கரு முட்டையை எடுக்க மேற்கொள்ளப்படும் ஆபரேஷனின் போது மயக்க மருந்தும் கொடுக்கப் படுவதால் அது அவரது உடல்நலனுக்கு நல்லது அல்ல. முத்தாய்ப்பாக, அடிக்கடி கருமுட்டை தானம் செய்யும் பெண்களுக்கு கருப்பை புற்று நோய் வர வாய்ப்பும் உள்ளது.

ஒவ்வொரு பெண் குழந்தையும் பிறக்கும் போதே 4 முதல் 5 லட்சம் கரு முட்டைகளோடு பிறக்கின்றன. அப்போது அவை வளர்ச்சியடையாத நிலையில் இருக்கும். பெண்கள் வயதுக்கு வந்த பின்பு அவை முதிர்ந்து மாத்திற்கு ஒன்று மட்டும் வெடித்து வெளியேறி, கர்ப்பையை நோக்கி நகரும். திருமணமாகி கணவரோடு உறவில் ஈடுபட்டால் கருமுட்டையும், உயிரணுவும் இணைந்து கரு உருவாகும். கருவாக்கம் நிகழாவிட்டால் கரு முட்டை வீணாகி உதிரத்தோடு வெளியாகிவிடும். இதைத்தான் மாதவிலக்கு எனகிறோம்.

கருமுட்டைகள் பெண் உடலில் இருந்து எடுக்கப்படும் போது +37 டிகிரி சென்டிகிரேடில் இருக்கும். இதை 0 டிகிரிக்கும் கீழே கொண்டுவந்து -194 சென்டிகிரேடுக்கு ஆக்கி திரவ நைட்ரஜனில் உறைய வைத்து கிரையோலாஜிக் என்ற நவீன கருவியில் வைத்து எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் பாதுகாத்து, பயன்படுத்தலாம். 

ஒரு பெண் வயதுக்கு வந்து - தாம்பத்ய வாழ்க்கை நடத்தி வயதாகி மனோபஸ் காலத்தை அடையும் வரை அவளால் பயன்படுத்தப்படுவது 300 முதல் 400 கருமுட்டைகள்தான். ஆனால் அவள் நாலைந்து லட்சம் கருமுட்டைகளோடு பிறக்கிறாள். மனைவியின் கருப்பை, இன்னொரு பெண்ணின் கருமுட்டை, கணவரின் உயிரணு போன்றவை செயலாக்கம் பெறும் போது தாய்மையடைவது நிகழ்கிறது.

கருமுட்டையை ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைப் பெற்ற இளந் தாய்மார்கள் தானமாக கொடுக்கலாம். அவர்கள் ஏற்கனவே கருத்தரித்திருப் பதால், அவர்கள் கருமுட்டை வளமாக இருக்கும். அவர்கள் உடலில் மரபு நோய், பால்வினை நோய், காச நோய் போன்றவை இருக்கக் கூடாது. இந்த நோய்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை கண்டறிய முழுமையான உடல் பரிசோதனை செய்யப்பட வேண்டும். 

கருமுட்டை தானம் செய்யும் பெண்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும், வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுக் கொடுக்க முன்வரும் பெண்களுக்கு ரூ.31/2 லட்சம் வரையும் பணம் கிடைக்கிறது. . குழந்தையை பெற்றுக் கொடுக்கும் வரை வாடகைத் தாய் பெரும்பாலும் மருத்துவ மனையிலோ அல்லது வாடகைக்கு அமர்த்தும் அந்த தம்பதியின் கண் காணிப்பில் அவர்களது வீட்டிலோ இருப்பார். கரு குழந்தையை உருவாகும் காலகட்டத்தில் குறைந்தபட்சம் 12 நாட்களாவது மருத்துவமனையில் வாடகைத்தாய் இருக்க வேண்டும்.குழந்தையில்லா தம்பதிகளுக்கு அவர்கள் குழந்தையை பெற்றுத்தரும் வரை அவர்களுக்கு போஷாக்கான உணவுகள் தரப்படும். குழந்தை பெற்று தந்ததும், அவர்களின் பணி முடிந்துவிடுகிறது.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் அனுமதித்துள்ளன என்பதால், இந்நாடுகளில் இருந்து இதற்காக இந்தியா குறிப்பாக சென்னைக்கு   வரும் இணையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்திய வாடகைத் தாய்களைத் தேடிவரும் அமெரிக்கத் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக  ஒரு  குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கத்திய நாடுகளில் குழந்தை பெறமுடியாமல் உள்ள தம்பதிகளுக்கு அவர்களின் கருவை சுமந்து குழந்தை பெற்றுத்தரும் வாடகைத் தாய் முறை பல ஆண்டாக நடைமுறையில் உள்ளது. 


இதனால், அமெரிக்காவில் குழந்தையில்லா தம்பதிகள், அதிக அளவில் இந்தியாவில் உள்ள வாடகைத்தாய்களை தேடி வருகின்றனர். அமெரிக்க மருத்துவமனைகள், சுகாதார அமைப்புகள், காப்புறுதி நிறுவனங்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்து தருகின்றன. குழந்தையில்லா இந்திய தம்பதிகளுக்கு குழந்தை பெற்றுத்தருவதை விட, வெளிநாட்டு தம்பதிகளுக்கு குழந்தை பெற்றுத்தருவதில் தான் இவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. அதுபோல, அமெரிக்கா உட்பட பல நாடுகளை சேர்ந்த குழந்தையில்லா தம்பதிகள், இந்திய வாடகைத்தாய் மூலம் தங்களின் குழந்தையை பெற்றுக்கொள்ளும் செலவு பலமடங்கு குறைகிறது. அமெரிக்காவில், வாடகைத்தாய் அமர்த்தினால் செலவு 35 இலட்சம் ரூபா. இந்தியாவில் 10 இலட்சம் ரூபா. 

இணையம் மூலம் இந்தியாவில் உள்ள வாடகைத்தாயை தேர்வு செய்து, கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்துகின்றனர். பத்து மாதம் சுமந்து, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று நாடு திரும்புகின்றனர்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment