Thursday 8 August 2013

சுதந்திரம் தானாக கிடைத்ததல்ல

     
 பள்ளி  வரலாற்றுப் பாடத்தில்  இந்திய சுதந்திர போராட்டத்தை பற்றிப் படிக்கும் போது ''கத்தியின்றி, ரத்தமின்றி, சத்தமின்றி, யுத்தமின்றி காந்தி நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார்'' என்கிற வரியை எல்லா வகுப்பிலும் நாம் படித்திருப்போம். அதை படிக்கும் போது, ஏதோ காந்தி மட்டுமே  வெள்ளைக்காரனிடம் கெஞ்சிக்கேட்டு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது போன்ற  ஒரு கருத்தை தான் படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்தும். இந்த நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள் - குறிப்பாக காங்கிரஸ்காரர்கள் பள்ளிப் பாடப்புத்தகத்தை தங்கள் கட்சிப் பிரச்சாரத்திற்காகவே பயன்படுத்திக்கொண்டார்கள். அதனால் தான், இந்த தேசத்திற்கு கிடைத்த சுதந்திரத்திற்கும், அதற்காக நடத்தப்பட்ட போராட்டத்திற்கும் சொந்தக்காரர்களாக காங்கிரஸ்கட்சியையும், காந்தியையும் மட்டுமே காட்டுகின்றனர். அதுவும் வடநாட்டு காங்கிரஸ் தலைவர்களைத் தான் குறிப்பிட்டிருப்பார்கள். தென்னிந்தியத் தலைவர்களை - குறிப்பாக காமராஜர், திருப்பூர் குமரன், பாரதியார், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன் போன்ற  தமிழகத்தலைவர்களை பற்றி ஒரு சிறு குறிப்புக்கூட காட்டியிருக்கமாட்டார்கள். 
                  நாம் வரலாற்றுப் பாடத்தில் படிப்பது போல் '' ஏதோ  கேட்டுப்பெற்றதல்ல சுதந்திரம்... தானாக வந்ததுமல்ல சுதந்திரம்...''


           ஜாலியன் வாலாபாக்கில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் உயிர்த்தியாகம் செய்து, ரத்தம் சிந்தி பெற்றச் சுதந்திரம் இது...


           பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், உத்தம்சிங் போன்ற இளைஞர்கள்  தூக்குமேடை   ஏறிப் பெற்றச் சுதந்திரம் இது...


           திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் போன்ற  இளைஞர்களும் உயிர்த்தியாகம் செய்துப் பெற்றச் சுதந்திரம் இது. 


            பாரதி தன்  பாட்டுத்திறத்தாலே விடுதலைத்தீயை மூட்டி இந்திய மக்களிடையே எழுச்சியை உண்டாக்கி பெற்றச் சுதந்திரம் இது. வ. உ. சி மற்றும் சுப்பிரமணிய சிவா போன்றவர்கள் சிறைகொடுமைகளை அனுபவித்து, செக்கிழுத்துப் பெற்றச் சுதந்திரம் இது. 
           நேதாஜி மற்றும் கேப்டன் லட்சுமி போன்றவர்கள் இந்திய தேசியப் படை அமைத்து வெள்ளையனுக்கு எதிராகப்போராடிப் பெற்றச் சுதந்திரம் இது. 


            தோழர். ஜீவானந்தம், தோழர். ஹர்கிஷன்சிங் சுர்ஜித் போன்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போராடி, சிறைக்கொடுமைகளை அனுபவித்து, தலைமறைவு வாழ்க்கையை நடத்தி பெற்றுத் தந்த சுதந்திரம் இது. 


         1806 - ஆம் ஆண்டு தொடக்கி 1947 - ஆம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கான  ஆண்களும், பெண்களும், முஸ்லிம்களும், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களும் போராடி - ரத்தம் சிந்தி - உயிர்த்தியாகம் செய்து நமக்கு பெற்றுத் தந்த சுதந்திரம் இது. 


          அனால் கடைசி இந்தியன் வரை அந்த சுதந்திரம் பொய் சேர்ந்ததா என்று கேட்டால்... அது கேள்விக்குறிதான். 


          உண்மையான சுதந்திரம் என்பது, இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே சொன்னானே மாவீரன் பகத்சிங் அது தான்.     
              
         ''பாலுக்கு அழும் குழந்தை, கல்விக்கு எங்கும் மாணவன், வேலைதேடும் இளைஞன், வறுமையில் வாடும் தாய் - இவர்கள் இல்லாத இந்தியாவே உண்மையான சுதந்திர இந்தியா'' 
இது தான் மாவீரன் பகத்சிங் கனவுகண்ட இந்தியா.


         அன்று வெள்ளையர் கையில் இருந்த இந்தியா... இன்று கொள்ளையர் கையில் சிக்கி மேலே சொன்ன அத்தனை பேரையும் கொண்ட ''வாடும் இந்தியா''வில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 


           இது மாறவேண்டுமென்றால், ''முப்பது கோடி ஜெனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை'' வேண்டினானே பாரதி, அந்த பொதுவுடைமை இந்த தேசத்தில் மலரவேண்டும். அதுதான் இந்தியாவில் உண்மையான சுதந்திரத்தை மணக்கச் செய்யும். 
அதற்காக போராடுவோம்.... 
பெற்ற சுதந்திரம் பேணிக்காப்போம்... 



மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!      


தேசத்தை காத்தல் செய்வோம்.

அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும் விரும்பினார். சுதந்திரப்போராட்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார். அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்காட்டுவார்.  

                  இப்படித்தான் இந்த தேசத்தின் விடுதலையை போராட்டத்தின் மூலமாகவும், புரட்சியின் மூலமாகவும் தான் பெறமுடியும் என்று பிரிட்டிஷாருடன் சினங்கொண்டு போராடிய பகத்சிங் என்ற மாவீரனை இழந்துவிட்டோம். காந்தி நினைத்திருந்தால் அன்றைக்கிருந்த பிரிட்டிஷ் அரசுடன் பேசி பகத்சிங்கை தூக்குமேடையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அதைத்தான் அன்றைக்கு நாட்டில் பலரும் எதிர்ப்பார்த்தார்கள். இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல தலைவர்களும் தொண்டர்களுமே எதிர்ப்பார்த்தார்கள். 

                  இதை புரிந்துகொண்ட காந்தி, 1931 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கராச்சியில் நடைபெறவிருக்கும்   காங்கிரஸ் மாநாட்டிலும் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்த்தார். மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று தன்னை நிர்பந்தம் செய்வார்கள் என்று முன் கூட்டியே அறிந்துகொண்டார். அப்படி நடக்கும் பட்சத்தில் அவர்கள் கட்டளைப்படி,  தான் பிரிட்டிஷ் அரசிடம் பேசி பகத்சிங்கை  தூக்கு தண்டனையிலிருந்து  காப்பாற்ற வேண்டி வரும் என்பதை உணர்ந்தார். அப்படியெல்லாம் ஒன்றும் நடந்துவிடக்கூடாது என்பதில் காந்தி தீவிரம் காட்டினார்.  
            அதனால்  அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் இர்வினை ( Irwin) சந்தித்து, கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன் பகத்சிங்கை தூக்கில் போடும்படி   கேட்டுக்கொண்டவர் தான் ''மகாத்மா'' என்று சொல்லக்கூடிய காந்தி என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அதனால் தான் பிரிட்டிஷ் அரசாங்கம் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே   பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களை தூக்கிலிட முடிவு செய்து, 1931  மார்ச் மாதம் 24  - ஆம் தேதியை தூக்கிடும் தேதியாக அறிவித்தது. 

              ஆனால் அந்த 24 - ஆம் தேதிவரைக் கூட காத்திருக்க முடியாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களை தூக்கிலிடுவதற்கு துடித்தார்கள். அதனால் 23 - ஆம் தேதியே இரவு 7.04 மணிக்கே வழக்கத்திற்கு மாறாக - மரபுக்கு மாறாக மூவரையும் தூக்கிலிட்டார்கள். 
வழக்கமாக தூக்கு தண்டனை என்பது விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவேற்றுவது தான் மரபு. ஆனால் அந்த மரபைக்கூட அன்றைய ஆட்சியாளர்கள் மீறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 24  - ஆம் தேதி விடியற்காலை தூக்கிலிட வேண்டியவர்களை 23 - ஆம் தேதி இரவே அவசர அவசரமாக தூக்கிலிட்டனர். பகத்சிங்கை கொல்வதில் காந்தியை விட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இன்னும் ஒரு மடங்கு  வேகம் காட்டினர்.
                 லாகூர் சிறையிலிருந்த பகத்சிங்கை தூக்கிலிடுவதற்கு தயார்படுத்துவதற்காக சிறைக்காவலர்கள் முன் கூட்டியே 23 - ஆம் தேதி மாலையே அழைத்தார்கள். மறுநாள் தான் தூக்கு தண்டனை என்று அறிந்திருந்த பகத்சிங், முன்கூட்டியே முதல் நாளே தூக்கிலிடப் போகிறார்கள் என்பதை அறிந்திருக்கவில்லை. அதனால் காவலர்கள் அழைத்த போது, '' நான் இங்கே ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன். அதனால் தொந்தரவு செய்யாதீர்கள்'' என்று சிறைக்குள்ளிருந்து குரல் கொடுக்கிறார். வேறு யாரோ போராளி சிறைக்குள்ளே புகுந்து இருவரும் ஏதோ திட்டம் தீட்டுகிறார்களோ என்று காவலர்கள் பயந்துவிட்டனர். சிறிது நேரம் கழித்து அவரே வெளியே வருகிறார். உள்ளே பார்த்தால் அவரோடு வேறு யாரும் இல்லை. ஆனால் அவர் கையில் ஒரு புத்தகம் இருந்தது.  மாமேதை லெனின் எழுதிய '' அரசும் புரட்சியும் '' ( STATE AND REVOLUTION ) என்ற புத்தகம் தான் அது. அதுவரையில் அந்த புத்தகத்தை படித்துக்கொண்டிருந்ததால், நான் ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன்  என்று சொன்னார். 
               அந்த புத்தகத்தை காவலர்கள் வாங்கிப்பார்த்த போது, அந்த புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் '' இந்த புத்தகத்தை இந்திய மக்கள் அனைவரும் படிக்கவேண்டும் '' என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார். இது தான் இந்திய மக்களுக்கு அவர் கடைசியாக விடுத்த வேண்டுகோள்......   இன்னும் எழுதுகிறேன்....



No comments:

Post a Comment