Sunday 14 July 2013

நகைச்சுவை பவர்ஸ்டார் கலாய்த்தவர்களின் முகத்தில் கரியைப் பூசினார் !!

நம்மளுக்கு தான் ஒரு போட்டோ கிடைச்சாலே அத வச்சு ஒரு மாசம் பதிவு எழுதிடுவமே. கூகிளுக்கு போய் பவர்ஸ்டார் படங்கள் என அடித்து தேடிப்பிடித்து சில நல்ல படங்களை ஃபிளாக்கில் பதிவிட்டேன்.. ஸ்ப்பா அப்ப தான் சூப்பர்ஸ்டார் என்ற பெயருக்கு இருக்கும் மார்க்கெட் பவர்ஸ்டாருக்கும் இருக்குது எண்ட விசயம் தெரிஞ்சுது. ஆகா நம்மளுக்கு ஒரு அடிமை சிக்கிட்டான் என்ற பீலிங்கில் அவர வச்சே சில காலம் ஃபிளாக் நடத்தினான்.

75 ஆண்டு கால தமிழ்  சினிமா வரலாற்றில் சில கோடிகளை செலவழித்து தமிழ்த்திரையுலகில் பிரபலமான நடிகர் என்றால் பவர்ஸ்டார் சீனிவாசனை தவிர வேறு யாரும் இருக்க முடியாது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட டாக்டர் சீனிவாசன் என்ற தொழிலதிபர் தனக்கு தெரிந்த சில சினிமா தயாரிப்பாளர்களுக்கு பண உதவி செய்ததன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார்.ஐம்பது வயதிற்கும் மேலாகி தலையெல்லாம் முடிவிழுந்து, ஒரு வில்லன் கதாபாத்திரத்தைப் போல தோற்றமளித்த சீனிவாசனை சில இயக்குனர்கள் வில்லனாக நடிக்க அழைக்க,சினிமா ஆசையை நிவர்த்தி செய்யும் பொருட்டு வழக்கறிஞர் தமிழழகன் இயக்கிய படமான ''மண்டபம்'' பாபு கணேஷ் இயக்கிய ''நானே வருவேன்''  சண்டை இயக்குனர் பஞ்ச் பரத் இயக்கிய ''இந்திரசேனா'' போன்ற படங்களில் வில்லனாக நடித்தார்.

60 வயதைத் தாண்டிய பல நடிகர்கள் இன்னும் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும்போது எனக்கென்ன குறை என தீர்க்கமாய் யோசித்த சீனிவாசன் 'மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி' என்பதைபோல நடித்தால் இனி ஹீரோவாகத்தான் இல்லையென்றால் சினிமாவே வேண்டாம் என்று சபதம் பூண்டு அதிரடியாக தான் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு பூஜை போட்டார்.ஒன்றல்ல ரெண்டல்ல.. நான்கைந்து படங்களுக்கு பூசை போட்டு கோடம்பாக்கத்தையே திரும்பி பார்க்க வைத்ததோடு அல்லாமல் திக்குமுக்காட வைத்தார்.அதில் முக்கியமான படம்தான் லத்திகா.இவரே இயக்கி ஹீரோவாக நடித்த படம்.இதில் இவருக்கு இவராக சூட்டிக்கொண்ட பட்டமே பவர்ஸ்டார்.இன்று இவரது பெயர் டாக்டர் சீனிவாசன் என்பது மறந்துபோய் பவர்ஸ்டார் என்றே மாறிவிட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.யாரையும் எதிர்பார்க்காமல் தன் சொந்தக் காசை செலவு செய்து சுமாரான அந்தப் படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓட்டிக்காட்டி தமிழ் சினிமாவையும் ரசிகர்களையும் திரும்பி பார்த்து வாய்விட்டு சிரிக்க வைத்தார்.பல சினிமா வித்தகர்களெல்லாம் இவருக்கு என்னாச்சு இப்படி பணத்தை கரியாக்குகிறாரே..எந்த நம்பிக்கையில் ஹீரோவாக நடிக்கிறார்.பணம் இவரது தோட்டத்தில் காய்க்கிறதா? என குழம்பிப்போய் பார்த்துக்கொண்டிருந்தனர்.


 திரையுலக பெருமக்கள் வேலையில்லாமல் முடங்கியிருந்த சமயம் பவர்ஸ்டார் நான்கைந்து படங்களை ஆரம்பித்து பல தொழில்நுட்ப கலைஞர்களின் வீட்டில் அடுப்பேற்றினார் என்றால் அது மிகையாகாது.இந்த வேளையில் படம் தயாரிக்க தயாரிப்பாளரைத் தேடிக்கொண்டிருந்த அசோசியேட் இயக்குனரான எனது நண்பர் "அப்பா மகன் சம்பந்தப்பட்ட நல்ல கதையிருக்கிறது.பவர் ஸ்டாரை அப்பாவாக போட்டு கரணை பையனாகப் போட்டால் படம் ரகளையாக வரும் பவர்ஸ்டாரிடம் சொல்லி ஓகே வாங்கலாம் வாங்க" என்று என்னையும் இன்னொரு நண்பரான ஒரு உதவி இயக்குனரையும் அழைத்துக்கொண்டு அண்ணா நகரில் இருந்த பவர்ஸ்டாரின் அலுவலகத்திற்கு சென்றார்.பவர்ஸ்டாரை சந்தித்து அந்த அப்பா மகன் கதையை விலாவரியாக சொன்னார். ஆர்வமாக கதை கேட்ட பவர்ஸ்டார் 'தம்பி கதை ரொம்ப நல்லாயிருக்கு கட்டாயம் பண்ணலாம் எனக்கு அப்பாவா யாரைப் போடலாமுன்னு இருக்கீங்க என கேட்க, சிரிக்கவும் முடியாமல் கோபப்படவும் முடியாமல், அந்த அப்பா கேரக்டர் நீங்கதான் சார் என்று சொல்ல, பட்டென பற்களைக் காட்டி இல்லங்க இனிமே நான் ஹீரோவாத்தான் பண்ணப்போறேன்.வேணா எனக்குத் தகுந்த மாதிரி ஒரு கதை பண்ணுங்க செய்யலாம் என்று சொல்ல எதுவும் பேசாமல் தலையாட்டிவிட்டு வெளியேறினார் எனது நண்பர்.இன்று நாங்கள் சந்தித்தால் கூட பவர்ஸ்டாரைப் பற்றிதான் பேசிக்கொண்டிருப்போம்.

நன்றாக நடித்து மார்க்கெட்டில் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களையே சமூகதளங்களில் போட்டு கலாய்க்கும்போது பவர்ஸ்டாரை விட்டு வைப்பார்களா சமூகத்தள தோழர்கள்.அதுவரையிலும் சமூகத்தளங்களில் பிரபலமாயிருந்த சாம் ஆண்டர்சனை ஓரங்கட்டிய நம்மாட்கள் பவர்ஸ்டாரை கையில் எடுத்துக்கொண்டு அவரை பாடாய்படுத்தினார்.அவரது படங்களைப் போட்டு கிண்டலடித்து மகிழ்ந்தார்கள்.அவர் நடித்த  காட்சியை வைத்து கலாய்த்தார்கள்.நாக்கு வறண்டு போனவனுக்கு மினரல் வாட்டர் கிடைத்தது போல கலாய்க்க ஆளில்லாமல் கிடந்த சமூக வலைத்தள தோழர்களுக்கு பவர்ஸ்டார் கிடைத்தார்.


ஒரு கட்டத்தில் பவர்ஸ்டாரை கலாய்ப்பதில் போட்டாபோட்டி ஏற்பபட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கலாய்ப்பதற்கும் ஒரு அளவுகோல் உண்டு என்பதையும் தாண்டி கேவலமான சில ஆபாசமான கமெண்டுக்களையும் அள்ளி எறிந்தார்கள் என்பதையும் அவரது புகைப்படத்தை பலவேறாக சித்தரித்து கேவலப்படுத்தியதையும் யாராலும் மறுக்க  முடியாது. ஆனாலும் பவர்ஸ்டார் அதைப் பற்றி பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
கலாய்த்தலின் உச்சக்கட்டமாக தொலைக்காட்சிகள் அவரை அழைத்து அசிங்கப்படுத்தி பிரபலம் தேடிக்கொண்டன.பவர்ஸ்டாரைப் பார்க்கும் அனைவருக்கும் வடிவேலு ஒரு படத்தில் பேசிய ''எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்ப்பா" என்ற வசனம் தான் ஞாபகத்திற்கு வந்தது.ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் தனது வழியிலேயே பயணித்த பவர்ஸ்டார்க்கு கிடைத்தப் படம்தான் ''கண்ணா லட்டு தின்ன ஆசையா?''. அந்தப்படம் சந்தானத்தின் காமெடிக்காக ஓடும் என்று எதிர்பார்த்த நிலையில் பவர்ஸ்டாருக்காக அரங்கு நிறைந்துகொண்டிருக்கிறது.பவர்ஸ்டார் தோன்றும் இடத்திலெல்லாம் கைதட்டல் காதைப் பிளக்கிறது.


பவர்ஸ்டாரை கிண்டல் செய்கிறேன் பேர்வழி என்று சமூக வலைத்தளங்களில் அவரைப் பதிந்து பதிந்து அவரை பிரபலமாக்கிவிட்டனர் நம்மவர்கள். அந்தப் பிரபலத்தை வைத்து அவரையும் நடிக்க வைத்து படத்தை வெற்றிப்படமாக்கிவிடலாம் என நினைத்த சந்தானத்தின் திட்டம் மிகச்சரியாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஆனால் அவருக்கு ஒரு வருத்தம் தன்னை விட பவஸ்டாருக்கே கைதட்டல் அதிகம் விழுகிறதென்று. பல அவமானங்களையும் அசிங்கங்களையும் தாண்டி புகழ்பெற்ற பவர்ஸ்டார் இந்தியாவின் முக்கிய இயக்குனரான ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்தில் நடிக்கிறார். அவரை ஏளனமாகப் பார்த்து  கலாய்க்க மட்டுமே பயன்படுத்திய ரசிகர்களுக்கு இது பெரும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது உண்மை. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' பட ஆடியோ வெளியீட்டில் ஷங்கர் எனது அன்பு தம்பி என்றும் எனது ரசிகர் அவர் என்று சொல்லும் அளவிற்கும் சமீபத்தில் நடந்த ஒருவிழாவில் விஜய் எனது இளைய தம்பி என அவர் சொல்லும் அளவிற்கும் அவரை பிரபலபடுத்தியிருக்கிறார்கள் நமது சமூகத்தள நண்பர்கள்.

இதைத்தொடர்ந்து சிவா சந்தானத்துடன் பவர்ஸ்டார் நடிக்கும் 'யா யா' படம் ஆரம்பிக்கப்பட்டது. தினமும் பல இயக்குனர்கள் அவரைத் தேடி கதை சொல்லி வருகிறார்கள்.இப்போது தினமும் பத்து லட்சம் சம்பளம் கேட்கிறார்.' இந்த இடத்தை அடைய நான் இழந்திருப்பது அதிகம்' எனவே இப்போது இந்த சம்பளம் ஆனால் இன்னும் உயரும் என்கிறார்.


அதுவரைக்கும் பவர்ஸ்டார ஒரு டம்மி பீஸ் எண்டுதான் நினைச்சன். ஆனால் அவருக்குள் இருக்கும் மிகப்பெரிய திறமையை லத்திகா டிரெயிலரில் பார்த்தேன். எந்திரன் படத்துக்கான டிரெயிலர் எவ்வளவு ஆர்வத்தை கிளப்பி விட்டதோ அதே அளவு ஏன் அதை விட அதிகமாகவே படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை லத்திகா டிரெயிலர் கிளப்பி விட்டது.

அந்த அளவு கச்சிதமான டிரெயிலராக தோன்றியது. பாத்த உடனயே படம் கட்டாயம் 500 நாள் ஓடும் என்றும் நினைத்தேன். ஆனா பவர்ஸ்டாருக்கு என்ன பிரச்சினையோ தெரியல 1 தியேட்டரில மட்டுமே படத்த ரிலீஸ் பண்ணி ஒரு வருசம் ஓட்டியதாக கேள்விப்பட்டேன். பேசாமல் பவர்ஸ்டார் இலங்கையில ஒரு 5 தியேட்டரில ரிலீஸ் பண்ணியிருந்தா படம் கட்டாயம் 1000 நாள் ஓடியிருக்கும் என்று நான் நினைக்கிறேன். அந்த அளவுக்கு ரசிகர்கள் இருப்பதை நான் அறிந்துள்ளேன். 

பவர்ஸ்டாரில் எனக்கு பிடித்த இரு விடயங்கள்..

  • தன்னம்பிக்கை.. தோற்றத்தை பற்றி கவலைப்படாமல் நடித்து ஒரு படத்திலேயே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். இனி அவர் நடித்தாலென்ன நடிக்காவிட்டாலென்ன பவர்ஸ்டார் என்ற ஒருவர் தமிழ் சினிமாவில் படித்து பல சாதனைகள் செய்தவர் என்று வரலாறு சொல்லும்..

  • நகைச்சுவை.. நன் படங்களை பற்றி தானே நக்கல் அடிக்கவும், தன்னைப்பற்றி நகைச்சுவை பேட்டி கொடுக்கவும் யார் இணங்குவார்கள். ஆனால் தன்னைப்பற்றியும் தன் படங்களை பற்றியும் இவர் கொடுக்கும் பேட்டிகள் இருக்கின்றனவே.. கடவுளே.. இதை விட ட்வீட்டரில் இவர் மிகவும் பிரபலமாகி வரும் ஒருவராகவும் காணப்படுகிறார்.
சரி இந்தளவும் பறவாயில்லை எண்டு பாத்தா பவர்ஸ்டார பேட்டி எடுத்து பிரபல தொலைக்காட்சி யூரியூப்பில் வெளிவிட தமிழர்கள் அனைவரும் ஏன் சில ஆங்கிலேயர்கள் கூட பவர்ஸ்டாரின் ரசிகர் ஆகினார்கள். அதைவிட பிரபல தமிழ் புத்தகத்திலும் (குமுதம் என்று நினைக்கிறேன்.) பேட்டிபோட்டு கலக்கிட்டாங்க..

அரை டஜன் படங்களில் கமிட்டாகியிருப்பவர், கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டு படாதிபதிகளை மூடுஅவுட் செய்கிறார். அதோடு, பவர்ஸ்டாரெல்லாம் ஒரு நடிகரா. அவருடன் நடித்து எனது இமேஜை கெடுத்துக்கொள்ள மாட்டேன் என்று எகத்தாளமாக பேசிய லட்சுமிராயை 'ஒன்பதுல குரு' படத்தில் தன்னுடன் குத்தாட்டம் ஆட வைத்திருக்கிறார் பவர்.இப்படி எதையும் சொல்லியடிக்கிற அளவுக்கு மாஸ் நடிகராகியிருக்கிறார். மேலும், ரஜினிதான் எனது மானசீக குருநாதர் என்றும் சொல்லிக்கொள்ளும் பவர்ஸ்டார், இப்போது ரஜினியின் கோச்சடையான் படம் ரிலீசாகிற அன்றே தனது ஆனந்த தொல்லை படத்தையும் வெளியிடப்போவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார். அப்படியென்றால் ரஜினிதான் உங்களுக்கு போட்டி நடிகரா? என்று அவரைக்கேட்டால், எனக்கு யாரும் போட்டியில்லை. எனக்கே நானேதான் போட்டி என்றும் பல்டி அடிக்கிறார் பவர்.

கமர்சியல் இயக்குனரான ஏ.வெங்கடேஷ் இயக்கும் 'சும்மா நச்சுன்னு இருக்கு' படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ்த்திரையுலகில் எத்தனை வருடம் தாக்குப்பிடிப்பார் எனத் தெரியாது ஆனால் 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வார்' என எதிர்பார்க்கலாம். தான் இந்த உயரத்திற்கு வருவேன் என நினைத்துதான் தன்னை மிகவும் கேவலமாக இணையத்தில் சித்தரித்தபோதும் அமைதியாய் சிரித்துக்கொண்டே இருந்திருக்கிறார் பவர்ஸ்டார். இப்போது பெற்றிருக்கும் புகழின் மூலம்  தன்னை கேலி செய்தவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டார் என்றே சொல்லலாம். 

பவர்ஸ்டார் சீனிவாசன் வாழ்நாள் லட்சியம்!!
வாழ்நாளில் ஒருமுறையாவது நடிகை ஐஸ்வர்யாராயுடன் நடித்து விட வேண்டும் என்பதே தனது வாழ்நாள் லட்சியம் என்பதை மீண்டும் பதிவு செய்துள்ளார் பவர்ஸ்டார் சீனிவாசன். சன்டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘சூப்பர் குடும்பம்’. அத்தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிப்போர் தங்களது தனித்திறமைகளை நிரூபிக்கும் நிகழ்ச்சியான இதில் நடுவர்களாக நடிகைகள் மீனா மற்றும் சங்கீதா, மற்றும் விஜய டி.ராஜேந்தர் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் சில வாரங்களில் சிறப்பு விருந்தினர்கள் பங்கெடுத்துக் கொள்வதுண்டு. அந்தவகையில் இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பவர்ஸ்டார் கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட சில சுவாரஸ்யமான கேள்விகளும், அதற்கு அவரது டிரேட்மார்க் பதில்களும் உங்களுக்காக….
இப்பவும் ‘பெட்ரோமாஸ்’லைட் தானா…? முன்பொரு முறை அளித்த பேட்டியில் ஐஸ்வர்யாராயுடன் நடிக்க வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார் பவர்ஸ்டார். அதனை நிகழ்ச்சித் தொகுப்பாளரான தீபக் மீண்டும் நினைவு படுத்தி, தற்போது யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் எனக் கேட்டார்.
ஐஸ் தான் வேணும்…. அதற்குப் பவர்ஸ்டார், ‘தன் விருப்பத்தில் மாற்றமேயில்லை. ஐஸ்வர்யாவுடன் தான் நடிக்க வேண்டும். அதற்காகக் காத்திருக்கிறேன்’ எனத் தெரிவித்தார்.
யாரோடு ஜோடி போட ஆசை….? நிகழ்ச்சியில் இரண்டு நடிகைகள் நடுவர்களாக அமர்ந்துள்ளனரே, அவர்களில் யாருடன் ஹீரோவாக நடிக்க ஆசை என மீண்டும் தொகுப்பாளர் கேட்டார்.
நா சின்னப் பையன் மேடம்… அக்கேள்விக்கு டக்கென பதிலளித்த பவர், ‘அவர்கள் இருவரும் நான் பள்ளி மாணவராக இருந்த போது ஹீரோயின்களாக அறிமுகமானவர்கள். எனவே, அவர்களுடன் நடிக்கும் எண்ணமில்லை’ எனத் தெரிவித்தார்.
நகைச்சுவை நடிகன்:
நாயகனாக நடிப்பதிலிருந்து விலகி இனி நகைச்சுவை நடிகனாக அவர் மாறிப்போனதால் இணையம் இனி இவரை கண்டுகொள்ளாது என எதிர்பார்க்கலாம்.ஆனாலும் அவரை இந்தளவிற்கு உயர்த்திவிட்ட இணைய மற்றும் ஊடக கலாய்ப்பாளர்களை என்றும் அவர் மறக்கமாட்டார்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment