Thursday 2 May 2013

இணையத்தில் மேயும் உங்கள் பிள்ளைகள் மேல் கண் வையுங்கள் பெற்றோர்களே!!


உண்மையில் உலக நாடுகளோடு ஒப்பிடும் போது இணையத்தில் அதிகளவாக வெளிவரும் REALITY SEX SCANDAL வீடியோக்களில் இந்திய- இலங்கை நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் முதன்மை பெறுகின்றார்கள். இந்திய இலங்கைப் பகுதிகளில் தான் பூங்காக்களிலும், பஸ்களிலும், ஏனைய விடுதிகளிலும் இடம் பெறும் உறவுகளைத் திருட்டுத் தனமாகப் படம் பிடித்து இணையத்தில் ஏற்றிக் காசு பார்க்கும் வேலை முனைப்புடன் இடம் பெற்று வருகின்றது.
நாம் எங்கே போகின்றோம்? ஆசிய நாட்டவர்களில் இலங்கை- இந்திய மக்கள் தமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தினைச் சமயோசிதமாகப் பயன்படுத்துவதில் வல்லவர்கள் என்பதனை பஸ்களிலும், கடைகளிலும், ஓட்டல்களிலும், பெண்கள் டாய்லெட் இருக்கப் போகும் இடங்களிலும் திருட்டுத் தனமாகக் கமெராவினைச் செருகி அதன் மூலம் பிறரின் அந்தரங்கங்களை அறிந்து படம் பிடித்து இணையத்தில் ஏற்றித் தமது வக்கிரத்தினைத் தீர்த்துக் கொள்கின்றார்கள் சில குறுகிய மனப் பாங்கு கொண்டோர்.
இன்றைய கால கட்டத்தில் சமூகத்தில் நிகழும் வேண்டத்தகாத சிறு வயதுக் கருத்தரிப்பிற்கும், பல துர்நடத்தைகளுக்கும் பேஸ்புக், மற்றும் இதர சமூக சாட்டிங் வலைத் தளங்களே காரணமாக அமைந்து கொள்கின்றன. உதாரணமாக இள வயதினர் அதிகளவாகத் தம் நேரத்தினை இச் சமூக வலைத் தளங்களில் செலவிடுவதன் மூலம் தம் பல காமுகர்களின் ஆசை வார்த்தைகளுக்கு நம்பி அவர்களுடன் நெருக்கமாகி, பின்னர் நேரடிச் சந்திப்புக்களில் ஈடுபட்டுத் தமது வாழ்க்கையினைக் குட்டிச் சுவராக்குகிறார்கள்.
பேஸ்புக்கில் தம் படங்களைப் போட்டு, அதற்கு ஆடவர்கள் கமெண்ட் போட வேண்டும் என்பதற்காக, ஆபாசமாக, படு தூக்கல் கவர்ச்சியாக தம் அங்கங்கள் வெளியே துருத்திக் கொண்டு நிற்கும் வண்ணம் படங்களை எடுத்துப் பகிருவதிலும் இன்றைய இளம் சமுதாயத்தில் ஒரு பகுதியினர் முனைப்புடன் செயற்படுகின்றார்கள். ஆண்களில் சிலர் தாம் காதலித்த பெண்ணுடன் மனக் கசப்பு உருவாகியதும் அப்பெண்ணை விட்டுப் பிரியும் சமயத்தில்; பேஸ்புக்கில் அவளது பெயரிலே ஒரு ஆபாசமான அக்கவுண்டினைத் திறந்து அதனூடாக, தாம் நெருக்கமாக இருந்த தருணங்களில் எடுத்த படங்களைப் போட்டுத் தம் வக்கிர மனப் பான்மையினைத் தீர்த்துக் கொள்கின்றார்கள்.
இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள் வளர்ந்து வரும் பருவத்திலே பாலியல் தொடர்பான விழிப்புணர்வு, ஆண் பெண் உறவு தொடர்பான விளக்கங்கள், பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் ஏற்படும் கருத்தரிப்பு தொடர்பான ஆலோசனைகளைத் தம் பிள்ளைகளுக்கு கூற வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களின் கையில் திணிக்கப்பட்டிருக்கின்றது. ஆணுறை பற்றிய விழிப்புணர்வுத் தகவல்களும் குழந்தைகள் பருவய வயதினை(டீன் ஏஜ்) எட்டுகின்ற பொழுதுகளில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டால் தான் எம் சமூகத்தில் நிகழும் இள வயதுக் கர்ப்பங்களைத் தடுத்து நிறுத்த முடியும்!
பெற்றோர்களே! சமூகம் இணைய வழியில் துஷ் பிரயோகமாகுவதையா நீங்கள் விரும்புகின்றீர்கள்? உங்கள் பிள்ளைகள் பருவ வயதினை எட்டுகின்ற சமயத்தில், பெற்றோராகிய நீங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தினை வளமாக்க விரும்பும் சமயத்தில் நிச்சயமாக உங்கள் பிள்ளைகளுக்கும் பாலியல் பற்றிய தெளிவினை எடுத்துரைக்க வேண்டிய கடப்பாடு உங்கள் கண் முன்னே இருப்பதனை நீங்கள் மறந்து விடக் கூடாது.
இணைய வழியில் உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுதுவதற்கும், அவர்களை நல்வழிப்படுத்துவதற்கும் ஏதுவான சில தகவல்கள்:
*உங்கள் பிள்ளை வளர்ந்து வரும் சமயத்தில் தனியான கணினியினைப் பயன்படுத்தக் கொடுக்க வேண்டாம். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் யூஸ் பண்ணக் கூடிய பொதுவான கம்பியூட்டரை வீட்டில் வைத்திருக்கவும்.
*கணியினை வரவேற்ப்பறையிலோ அல்லது வீட்டில் உள்ள பெற்றோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் உள்ள பகுதியிலோ வைத்திருங்கள்.
*உங்கள் பிள்ளைகள் கணினி முன் உட்காருவதற்கான நேரத்தினை நீங்களே திட்டமிடுங்கள். அதிகளவான நேரத்தினை உங்கள் பிள்ளைகள் கணினி முன் செலவளிக்க விட வேண்டாம்.
*பாலியல் தளங்களை, சாட்டிங் தளங்களை உங்கள் பிள்ளைகள் வீடுகளில் அக்செஸ் பண்ண முடியாதவாறு சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்து வைத்திருக்கலாம்.
இப் பதிவின் நோக்கம் சிறு பிள்ளைகள் மனதில் ஏற்படும் பாலியல் தொடர்பான துஷ்பிரயோகச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதேயாகும்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment