Friday 29 March 2013

அரபு நாடுகளில் பணிப்பெண்களுக்கு தொடரும் கொடூரங்கள்!!ஒரு சிறப்பு பார்வை...

அரபு நாடுகளில்  பணிப் பெண்கள் படும் பாட்டை பல முறை நேரிலேயே பார்த்துள்ளேன். ஆனால் சில வீடுகளில் நன்கு ருசியாக சமைக்கத்தெரிந்த பணிப் பெண்கள் ராஜ வாழ்க்கை வாழ்வதையும் பார்த்துள்ளேன்.எல்லா நாட்டிலும் எல்லா சமூகங்களிலும்   நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர்.

முதலில் கீழ்க்கண்ட செய்திகளைப் படித்து விடுங்கள்..
செய்தி ஒன்று: 13 ஆண்டுகளாக தன்னிடம் வேலை பார்க்கும் பெண்ணை அடைத்து வைத்து வேலை வாங்கியும், சம்பளமும் இந்த 13 ஆண்டுகளாக தராமல் கொடுமை செய்திருக்கிறார் ஒரு சவுதியைச் சேர்ந்த ஒரு அரபி. இந்த முறையும் ஒரு இலங்கைப் பெண்தான் இந்தக் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்.
Ariyawathi-nail-tortured-maid-saudi-arabiaசெய்தி இரண்டு: கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் ஒரு சவூதி குடும்பம் தன்னிடம் வேலை பார்க்கும் இலங்கை பணிப்பெண்ணை 24 ஆணிகளை உடல் முழுதும் அடித்து சித்திரவதை செய்திருக்கின்றனர், கணவனும், மனைவியுமாகச் சேர்ந்து. ஒரு சக மனிதனை / மனுஷியை சாதாரணமாக குடும்பம் நடத்தும் கணவனும், மனைவியும் சேர்ந்து உடலில் ஆணி அடிப்பதை நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? எல். பி. ஆரியவதி என்ற இலங்கைப் பெண்ணிற்கு இந்தக் கொடுமை நடந்திருக்கிறது.

செய்தி மூன்று
: ஒரு இந்தோனேஷியப் பெண்ணை முகம் எல்லாம் கத்தரிக்கோலால் அங்கங்கே வெட்டி எடுத்திருக்கின்றனர் இன்னொரு சவூதி தம்பதியினர். உடலெங்கும் ஆங்காங்கே சூடு போட்டிருக்கின்றனர். தலை முதல் கால் வரை அந்தப் பெண்ணை கொடுமை செய்திருக்கின்றனர்.
செய்தி நான்கு: இன்னொரு அன்பு மிக்க சவூதி தன்னிடம் வேலை செய்த பெண்ணை துன்புறுத்தி கொலை செய்ததுடன், உடலை ரோட்டில் வீசி எறிந்துவிட்டுச் சென்றிருக்கிறார். இந்தோனேசிய அரசு இதை மனிதத் தன்மையற்ற செயலுக்கும் அப்பாற்பட்டது இவர்கள் இழைத்திருக்கும் கொடுமைகள் என்கிறது. மனிதத் தன்மையற்ற செயலை விட மோசம் எனில் எவ்வளவு கொடூரர்களாய் இருக்க வேண்டும்?
செய்தி ஐந்து: முகத்தில் குத்தியே வீட்டு வேலைக்கு வந்தப் பெண்ணை கொலை செய்த அரபி.
மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளுதல் தொடரும் சம்பவம். அரபிகளின் உடல் ரீதியான கொடுமையையும், வெறியையும் தாங்க முடியாமல்.



இதெல்லாம் வெறும் சாம்பிள் தான். சவூதி, குவைத், கத்தார், எமன், போன்ற நாடுகளில் வேலைக்குச் செல்லும் பணிப்பெண்களில் கிட்டத்தட்ட 80 சதவித பெண்களின் வேலை அவர்களுக்குச் சொன்னது போல இருக்காது. குறைந்தது தினமும் 16 மணி நேர வேலை, அதுவும் சகிக்க முடியாத அளவு உடல்வேலை. மறந்தும் கருணை காட்டாத மேடம்கள். வாய்ப்புக் கிடைத்தால் கற்பழிக்கும் ஸ்பான்சர்கள் மற்றும் அவர்களின் வயதுக்கு வந்த தடிமாடு போன்ற மகன்களின் சில்மிஷங்கள் மற்றும் கற்பழிப்புகள். இவ்வளவு கொடுமையையும் தாண்டித்தான் அவர்கள் அங்கு வேலை பார்க்கின்றனர், தனது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு.

maid_in_arab_countriesவீட்டில் வேலைசெய்வோர் உரிமைகளைப் பற்றிப் பேசினால் மறுநாளே நடுத்தெருவில். வேலை பார்க்கும் பெண்களின் கடவுச் சீட்டு, அடையாள அட்டை எல்லாம் அரபிகளின் கைகளில் இருக்கும். வெளியே துரத்திய மறு நிமிடமே போலிசுக்கு இவர்களே தகவல் சொல்லி பிடித்துப் போக வைத்து அடையாள அட்டை இல்லாமலிருந்த குற்றத்திற்காகவும், வேலை செய்யும் வீட்டில் இருந்து ஓடி வந்ததற்காகவும் தண்டனை உண்டு.
இன்னும் சில கேவலமான மிருகங்கள் இருக்கின்றன. சம்பளம் பாக்கி இருந்து அதைத் தர விரும்பாமல் வீட்டில் வேலை செய்யும் பெண் திருடி விட்டதாக ஒரு குற்றச் சாட்டை போலிசில் வைப்பார்கள். அதிலிருந்து மீள வேண்டுமெனில் அரபி மன்னிக்க வேண்டும். அல்லது தொலைந்த பொருள் கிடைத்தது எனச் சொல்ல வேண்டும். சம்பளம் போனாலும் பரவாயில்லை, உயிரோடும், கைகால்கள் ஒச்சமின்றியும் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற பயத்தில் சம்பளத்தைக் கூட முழுதும் பெற்றுக் கொண்டதாய் கையொப்பம் இட்டு விடுவார்கள்.
கொஞ்சம் தைரியமாய் ஒரு பெண் போலிசுக்கு சென்று வேலைக்கு வைத்திருப்பவர் கற்பழித்து விட்டார் என செல்லப் போகிறார் எனத் தெரிந்துவிட்டால், இவர்களே காவல் நிலையம் சென்று சென்று அந்தப் பெண்ணை ஒரு விபச்சாரியைப் போல ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டு வந்து விடுவார்கள். அதன் பின்னர் அவள் என்ன சொன்னாலும் எடுபடப் போவதில்லை. பிற நாடு மற்றும் நமது இந்தியத் தூதரகங்களும் அதிக பட்சமாக நாட்டிற்கு திருப்பி அனுப்புவதையே மிக முக்கிய வேலையாக செய்து கொண்டிருக்கின்றனர். பாதிக்கப் பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க உதவுவதில்லை. அந்த அரபிக்கு இந்தப் பெண் போனால் வேறு ஒரு பெண் கிடைப்பாள்.
உலக மனித உரிமைகள் கழகம் 2004 ல் செய்த ஆய்வின்படி சவுதியில் பணிப்பெண்களை திட்டமிட்டு , மாட்டிக் கொள்ளாத வகையில், வஞ்சிக்கின்றனர், சிறை வைக்கின்றனர், நியாயமற்ற தண்டனைக்கு உள்ளாக்குகின்றனர் என்று சொல்கிறது. முறையற்ற கர்ப்பம் ஏற்பட்டு அதற்கும் பெண்களே பலிகடாவாக்கப் படுகிறார்கள். (குற்றம் நடந்ததைப் பார்த்த சாட்சிகள் வேண்டும்) பல நேரங்களில் மிக கேவலமாக நடத்தப்பட்டு செய்யாத குற்றத்திற்கு மிக மோசமாக தண்டிக்கப்பட்டு கொலைக் களத்திற்கு அனுப்பப் படுகின்றனர் எனச் சொல்கிறது அந்த ஆய்வு.

இதெல்லாம் நடப்பதற்கு முக்கிய காரணமாக அந்த ஆய்வு நினைப்பது, பாதிக்கப்படும் பெண்கள் / மக்கள் வாழும் நாடுகள் சவூதி அரேபியாவை தண்டிக்கும் அளவு பலம் வாய்ந்தது கிடையாது என்பது. பாதிக்கப்பட்ட நாடுகள் செய்யமுடிந்ததெல்லாம் நமது முன்னாள் முதல்வர் செய்ததுபோல கடிதம் எழுதுவதும், வன்மையாக கண்டிப்பதும்தான். மனசாட்சியற்ற அந்த மிருகங்களை இந்த கண்டிப்புகளும், கடிதங்களும் ஒன்றும் செய்வதில்லை.

மேலும் பாதிக்கப் பட்டவருக்கே அபராதம் விதிப்பதையும் செய்கின்றன அரபு நாடுகளின் அரசுகள். கொடுமை செய்தோருக்கு எந்த தண்டனையும் இல்லை என்பதும், சிக்கலில் மாட்டி கொடுமையை அனுபவிப்போர் காவல்துறைக்குச் சென்று புகாரளித்தால் அவர்களுக்கு முறையான உதவிகள் காவல் துறையிலிருந்து கிடைப்பதில்லை என்றும் குற்றம் சாட்டுகிறது அவ்வறிக்கை.
இவ்வளவு கேவலமாக நமது மக்களை நடத்தும் சவூதி நாட்டின் மன்னரை குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராய் அழைக்கும் நமது ஆட்சியாளர்களை என்ன சொல்வது? இத்தனைக்கும் அப்போது ஒரு இந்தியனின் தலையை வெட்ட ஆணை பிறப்பிந்திருந்தார் சவூதி மன்னர். இன்றைக்கும் தலையை வெட்டி தண்டனையை நிறைவேற்றுவதில் முதலில் இருப்பது சவுதி அரேபியாதான்.
maid - abuse - saudi - arabiaஇதே சவூதி மன்னர் ஒரு அமெரிக்கனையோ, அல்லது பிரிட்டிஷ்காரனையோ இப்படி கொல்ல முடியுமா? அல்லது கொடுமைப் படுத்தத்தான் முடியுமா? அமெரிக்காவின் அடிமைகள் இவர்கள். இவர்கள் தங்கள் நாட்டில் பிழைக்க வரும் ஆசிய மக்களை அடிமைகளைப் போல நடத்தி தங்களது மேட்டிமைத் தனத்தை காட்டிக்கொள்ள முயன்று உலகின் முன்னர் கேவலமாகவும், கொடூரர்களாகவும் தெரிகிறார்கள்.

பணிப்பெண்கள் வீட்டில் தனியே இருக்கும் நேரங்களில் வீட்டிலுள்ள மைனர் குஞ்சுகளையும் சமாளிக்க வேண்டும். அரபிகளின் முக்கிய பொழுதுபோக்கே, பெரிய பெரிய வண்டிகள், மொபைல் போன் மற்றும் பெண்கள். அதுவும் இப்படி அநாதரவாய் இருக்கும் பெண்கள்தான் இவர்களின் இலக்கு. கூட்டு வல்லுறவு செய்து சாலையில் தூக்கி வீசிச் செல்லுதல், கடலில் தூக்கி வீசுதல் எல்லாம் சாதாரணமாய் நடக்கும். அடையாளம் தெரியாத பிணமாகவே வழக்கம்போல சொல்லப்படும்.
சாலையில் ஒரு பெண் தனியாக நடந்து சென்றால் சாலையில் செல்லும் லேண்ட்க்ரூசரோ, வேறு பெரிய வண்டிகளோ அந்தப் பெண்ணை பயமுறுத்துவதுபோல ஓட்டி பக்கத்தில் வந்து வண்டியில் ஏறு என மிரட்டுவர். கண்ணுக்குத் தெரிந்து யாருமில்லை எனில் உடனே வண்டியில் தூக்கிச் சென்றுவிடுவர். இதெல்லாம் இட்டுக் கட்டிய கதைகள் இல்லை. மத்திய கிழக்கில் வெளிவரும் செய்தித் தாள்களை வாசித்தாலே போதும்.

வன்முறை அளவு மீறும் போது, கொடுமைகள் தாங்க முடியாமல் ஆகும்போது வேலை செய்யும் பெண்ணே எஜமானரான சவுதியையும், அவர்களது மனைவியரையும் கொலை செய்வதும் இப்போது கணிசமாக நடக்கிறது. அரபு நாட்டுக்குப் பஞ்சம் பிழைக்கப் போன ஒரு பெண் ஒரு அரபியை கொலை செய்கிறாள் எனில் அவளுக்கு எவ்வளவு கொடுமை இழைக்கப்பட்டிருக்கும்? அவளுக்குத் தெரியாதா கொலைக்குப் பின்னர் சிறையும், அதன் பின்னர் தலை வெட்டும்தான் என? இருப்பினும் அப்படிச் செய்கிறாள் எனில் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்திருப்பாள்?
உன் மதம் உனக்கு, என் மதம் எனக்கு என்று சொல்லிக்கொண்டே இதர மதத்தினரையும் பர்தா போட்டுத்தான் செல்ல வேண்டும் என கட்டாயப்படுத்துவார்கள். சாத்தான் வேதம் ஓதுவதுபோல.
இவ்வளவு தைரியம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? இதுவரை இப்படிப்பட்ட கொடுமைகளை இழைத்துவிட்டு தண்டனை அடையாமல் இருக்கும் சில நூறு பேர்களைப் பார்க்கும் பலர் தண்டனை இல்லை எனும்போது, கொடுமைகளைச் செய்கின்றனர்.
இஸ்லாமிய அரசாங்கத்தில் ஏற்றத்தாழ்வுகளே இல்லை என்று சொல்லும் “இஸ்லாமிய மாதிரி அரசாங்கமான” சவூதி அரசாங்கம். தனது உழைப்பால் கிடைக்காத, அனாமத்தாய்க் கிடைத்த வளத்தையும் செல்வத்தையும் வைத்துக் கொண்டு அவர்களிடம் வேலை செய்து பிழைக்க வரும் இதர நாட்டினரை குறைந்த பட்ச அடிப்படை மனித உணர்வுடன் மனிதர்களாக நடத்துமளவுக்கு மனிதத்தன்மையை  கடைபிடிக்க வேண்டும் .இது போன்ற கொடுமைகள எல்லாம் தடுக்க வேண்டுமானால் நமது அரசு பணிப்பெண் வேலைக்கு அரபு நாடுகளுக்கு எந்த வகையிலும் அனுப்ப ஒப்புதல் அளிக்கக் கூடாது. தற்போது அனுமதி தருவதில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் இலங்கை, இந்தோனேஷியா போன்ற நாடுகள் அவலங்களை தெரிந்தும் தங்களின் வருமானத்துக்காக அனுமதிக்கின்றனர். இது அந்த நாடுகள் செய்யும் தவறு.
இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுகையில் 2011ம் ஆண்டு வெளிவந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ”கதாமா” ( Gaddama, The House Maid) என்ற மலையாளத் திரைப் படத்தைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. கதாமா என்ற சொல்லுக்கு அரபி மொழியில் “வீட்டு வேலைக்காரி” என்று பொருள்.
பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் ஏற்பட்ட கடன்களுக்காகவும், எதிர்பாராத விதமாக கணவனைப் பறிகொடுத்து விட்டதாலும் தெரிந்தவர் மூலமாக சவுதிக்கு வீட்டு வேலைக்கு வருகிறாள் ஒரு பெண். அவளுக்கு அங்கு ஏற்படும் அனுபவங்களே கதாமா என்ற திரைப்படம்.
மத்திய கிழக்கில் வீட்டுவேலைக்குச் செல்லும் பெண்களின் வாழ்க்கையை இவ்வளவு தூரம் உண்மைக்கு அருகில் இதுவரை எந்தப் படமும் சொல்லியிருக்கிறதா எனத் தெரியவில்லை.
”கதாமா” விமான நிலையத்தில் இறங்கியதும் அங்கு இருக்கும் இதர நாட்டிலிருந்து வேலைக்கு வந்திருக்கும் பெண்களுடன் நடக்கும் உரையாடல்களிலேயே அவர்களின் நிலை சொல்லப்பட்டு விடுகிறது. (ஸ்பான்ஸர் இரண்டு நாள் கழித்தோ அல்லது நினைக்கும்போது வந்தோ அழைத்துச் செல்வான். பாஸ்போர்ட் எல்லாம் அவனது கைக்குச் சென்றுவிடும். இனி அடுத்த இரு ஆண்டுகள் கழிந்தபின்தான் நாம் வெளியுலகையே பார்போம் – இப்படியாக)

Gaddaama_malayalam_movieவேலைக்குச் சென்றபின்னர் அவளுக்கு நடக்கும் கொடுமைகள் பதற வைப்பவை. துணியை சரியாக அயர்ன் செய்யவில்லை என அயன்பாக்சாலாயே உடம்பில் சூடுவைக்கிறார்கள் அரபு எஜமானர்கள். வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரனுக்கும், வேலைக்காரிக்கும் ஏற்படும் கள்ளத் தொடர்பைக் குறித்து ஏன் சொல்லவில்லை என ஒரு நாள் இரவு முழுவதும் சாட்டையால் அடிக்கிறார்கள். இந்தக் கொடுமைகள் எல்லாம் சேர்ந்து அவளை வீட்டை விட்டு வெளியே ஓட வைக்கிறது. கையில் பாஸ்போர்ட், விசா ஏதுமின்றி தன்னை வேலைக்கு அழைத்து வந்த ஆளும் நிராதரவாய் கைவிட்ட பின்னர் வேலைக்காரி என்ன ஆகிறாள் என்பதே திரைப்படம். 
நம்மூரில் கைக்காசை செலவிட்டு பிறருக்கு உதவுபவர்கள் ”பிழைக்கத் தெரியாதவர்கள்”. அப்படி ஒரு பிழைக்கத் தெரியாதவராய் வருகிறாய் ஸ்ரீநிவாசன். கிட்டத்தட்ட அரபு நாடுகளில் வேலைக்கு வரும் நமது ஆட்களின் நிலையை சில சம்பவங்களில் சொல்லி விடுகின்றனர்.ஆடு மேய்ப்பவராக வருபவரும், பாலைவனத்தில் ஆடு மற்றும் ஒட்டகப் பண்ணைக்கு புல் சப்ளை செய்பவராக வருபவரும் அருமையாக நடித்திருக்கின்றனர்.அரபிகளின் குணம், அவர்களின் கண்ணில்லாத சட்டங்கள், புணர்வதற்காக மட்டுமே பெண்கள் என்ற அவர்களது மனநிலை, எல்லாம் மிக துல்லியமாக சொல்லப் பட்டுள்ளது. படத்தின் இசை படத்திற்கு மிக்க துணையாய் இருக்கிறது. அரபி இசையை மிகப்பொருத்தமாய் கையாண்டிருப்பது சிறப்பு. 
வேலைக்காரியாக ஒரு பாவமான முகத்திற்கு காவ்யா மாதவன் மிகக் கச்சிதமாக பொருந்துகிறார். எத்தனை விதமான மனிதர்கள்! தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தன்னை நம்பி வந்த பெண்ணை கைவிடுவதும், அதே ஊரில் தனது தாயின் இறுதிச் சடங்கிற்குக் கூட செல்ல முடியாமல் இருப்பினும் பிறருக்கு உதவும் ஸ்ரீநிவாசனும், அரபிகள் வேலைக்காரப் பெண்ணை வன்புணர்வு செய்துவிடாமல் காப்பாற்றி அரபியின் கையில் அடிவாங்கி இறந்துபோகும் ஆடுமேய்ப்பவரும் எல்லோரும் அவரவர் பகுதியை மிகச் சிறப்பாக செய்திருக்கின்றனர்.

வெளிநாட்டில் வேலைக்கு, அதுவும் இப்படியான வேலைகளுக்குச் சென்று நினைத்தே பார்க்க முடியாத அளவு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் சக இந்தியர்களூக்கு இந்தப் படம் சமர்ப்பனம்.  


ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான் .


No comments:

Post a Comment