Friday 1 March 2013

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா...

சென்னையின் தெற்கில் 30 கீ.மீ தொலைவில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது. இப்பூங்கா வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. சென்னையில் 1855ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விலங்கியல் பூங்காவாகும்.

வண்டலூர் பூங்கா, தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பு பெற்றது. 1,265 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில், 1,500க்கும் அதிகமான விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.

தினமும் 5,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் 10,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.லயன் சபாரி,மான் சபாரி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் பரவசப்படுத்தி வருகிறது.

இப்பூங்காவுக்கு இன்னும் சிறப்பு செய்யும் விதத்தில் .3 கோடியே 25 லட்சம் செலவில் இப்பூங்கா புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள நவீன முறையில் அறிவியல் அடிப்படையில் பராமரிக்கப்படும் மிகச்சில உயிரியல் பூங்காக்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா முதன்மையாக சிறந்து விளங்குகிறது.

பூங்காவின் முக்கியமான நோக்கங்களுள் ஒன்றான வன விலங்கு பாதுகாப்பு குறித்த கல்வியை பொது மக்களும், பள்ளி மாணவ,மாணவியரும் பெறும் வகையில் பூங்கா நிர்வாகத்தினர் கற்பித்து வருகின்றனர்.பார்வையாளர்களுக்கு வனவிலங்குகளின் முக்கியத்துவம்,வனவிலங்குகளின் பாதுகாப்பு பற்றி வகுப்புகள் நடத்துகின்றனர்.மாணவ மாணவிகளுக்கு வனவிலங்குகளைப்பற்றிய விழிப்புணர்வு அதிகம் வேண்டும் என்ற கொள்கையினால் சாதாரணமாக 30 ரூபாய் நுழைவு கட்டணத்தை 12 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியருக்கு வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறுகின்றனர்.செவ்வாய் அன்று இப்பூங்காவுக்கு விடுமுறை தினமாகும்.

வனவிலங்கு பூங்காவுக்கு சென்று இருந்த பொழுது கேமராவில் சிறைபிடித்த சில விலங்குகளும் பறவைகளும்.





நீருக்குள் நிற்கும் நீர்யானை.அது நடந்தாலே நீருக்குள் ஒரு பிரளயமே நடந்தது போல் நீர் தளும்புவதைப்பார்க்க பிரமிப்பாக இருக்கும்.




நீருக்கு வெளியில் நீர் யானை.கம்பீர நடை போட்டு உலா வரும் காட்சி.




குட்டி யானைகள் இரண்டு கும்மி கூத்தாடுகின்றன.அதன் விளையாட்டை படிப்படியாக காட்சிகளாக பதிவு செய்து வைத்துள்ளேன்.


சிங்கவால் குரங்குக்கு என்ன கோபமோ?முகத்தை காட்ட மாட்டேன் என்று போயே போய் விட்டது.


நீள வால் கருங்குரங்குகள் மரத்தின் மேல் கும்பலாக ஏறி குரங்கு சேட்டை பண்ணிக்கொண்டுள்ளன.நீண்ட வாலைப்பார்க்கும் பொழுது  சிறு வயதில் படித்த சித்திரக்கதையில் வரும் சுட்டிக்குரங்கு கபீஷின் நினைவு வந்தது

 வங்கபுலி எனும் வெள்ளைப்புலிகள் இந்தியாவில் சுமார் 100 என்ற அளவிலேயே உள்ளன.இவற்றில் இப்பூங்காவில் மட்டும் ஒன்பது புலிகள் உள்ளன.2006 ஆம் ஆண்டில் டில்லியில் உள்ள தேசியப்பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்ற முறையில் இப்பூங்காவுக்கு இவ்வெள்ளைப்புலிகள்  கொண்டு வரப்பட்டன.

மேலே உள்ள படத்தில் கம்பீர நடை போடும்  புலியார்.ஆக்ரோஷமாக சீறிக்கொண்டே உலா வருகின்றார்

.வீரா சிங்கத்தை பவ்யமாக படம் பிடித்து வந்தேன் .அந்த படத்தை என் கேமராவில் இருந்து காக்கா தூக்கிகொண்டு போய்விட்டது போலும் .காணவே காணோம்.

அப்படி என்னதான் உள்ளதோ.கீழ் படத்தில் உள்ள மான் கூட்டம் பாரவையாளர்கள் நிற்பதை பொருட்படுத்தாமல் கும்பலாக என்னதான் செய்கின்றதோ??


ஒட்டகை சிவிங்கி தன் ஜோடியுடன் குஷாலாக  வாக்கிங் போவதைப்பாருங்கள்.




இந்த குரங்குக்குட்டி என்ன சமர்த்தாக செயற்கை குகையினுள் உட்கார்ந்து கொண்டுள்ளது பாருங்கள்.பார்வையாளர்கள் வாழைப்பழத்தினை  காண்பித்தும் அது வெளியில் வரவே இல்லை.
வாரே வாஹ்..கோபித்துக்கொண்டு சிங்கவால் குரங்கு முதுகைக்காட்டிக்கொண்டு போனது இப்பொழுது கோபம் தணிந்து என்னைப்பார்,என் அழகைப்பார் என்று தள்ளாட்டம் போட்டு நடந்து வருகிறது.

அம்மா குருவியும் அப்பா குருவியும் தன் வாரிசின் வரவுக்காக என்னஒரு எதிபார்ப்புடன் இருக்கிறதை பாருங்கள்.அப்பாக்குருவி ஒற்றைக்காலில் தவம் இருக்க,அம்மா குருவி, குஞ்சுக்குருவியின் சப்தம் முட்டைக்குள் கேட்கின்றதா என்ரு ஆராய்ச்சி பண்ணிக்கொண்டுள்ளது போலும்.



இது ஒரு நாரைவகை.என் மகன் படிக்கும் கல்லூரி இந்தப்பூங்காவின் அருகில் உள்ளதால் பிளான் பண்ணாமலேயே அவ்வப்பொழுது சென்று வருவேன்.ஆதலால் குறிப்புகள் எடுக்கவில்லை.



இது ஒரு கோழி இனம் பார்க்க நெருப்புக்கோழி போன்ற பயமுறுத்தும்  தோற்றம்.



இதுவும் ஒரு வகை கொக்கினம்தான் என்னவோ சோகம் கவ்விக்கொண்டது போல் உள்ளதே இந்த கொக்கு!கொக்கம்மா அப்படி என்னதான் உன் சோகம்?



பயணத்தின் போது வழியில் முட்டை இடுமாம் ஆமை.இதோ அவசர கதியில் செல்கின்ற வணடலூர் ஆமையார் வழியில் முட்டை இடுவாரா?முட்டைக்கு காத்திருந்து முட்டை(பூஜ்ஜியம் )தான்  ரிஸல்ட்.


முதலைக்கண்ணீர் என்று சொல்லுவார்கள்.முதலை சிரிப்பைப்பார்த்து இருக்கின்றீர்களா?இந்த முதலை சிரிக்கின்றதுதானே?(மெட்ராஸ் முதலைகள் எல்லாம் நை நை என்று அழுது கண்ணீர் விடாது போலும்.)




ஆகாசத்தில் பறக்கும் ஒற்றைப்பறவையைப்பாருங்கள்.பூங்காவுக்கு சொந்தமான பறவை பத்திரமாக பூங்காவுக்கு திரும்பி விடுமா என்று கவலையுடன் மேங்கோ ஐஸை சுவைத்து கொண்டே ஏக்கமாக பார்த்துக்கொண்டே  இருந்தேன்.

தொகுப்பு : மு. அஜ்மல் கான் .

No comments:

Post a Comment