Wednesday 23 January 2013

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா !!! ஒரு பார்வை...


Kerala Mapஇந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் இருக்கிறது. தேசிய அளவில்  2 சதவீதம் பேர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் கேரளாவில் 5.86 சதவீதம் பேர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கேரளாவில் 3 அரசு மனநல மருத்துவமனைகளும், 3 அரசு மருத்துவ கல்லூரிகளில் உளவியல் துறைகளும், அவற்றில் 1,800 உளவியல் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளும் இருக்கின்றன. இது தவிர 143 தனியார் மனநல மருத்துவமனைகளும் செயல்படுகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மனநல மருத்துவமனைகள் போதிய அளவில் இருந்தும் பிரச்சினைகளும் ஏராளமாகவே இருக்கின்றன.

மாநில மனநல ஆணையத்தின் புள்ளி விவரத்தின் படி கேரள மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு உளவியல் பிரச்சினைகள் இருக்கிறது. இதில் 2 சதவீதம் பேருக்கு மனச்சிதைவு மற்றும் மனச்சோர்வு பிரச்சினைகள் உள்ளன. 2-3 சதவீதம் பேருக்கு உடல் பிரச்சினையால் ஏற்படும் கடும் உளவியல் குறைபாடுகள் உள்ளன. 6 வயதுக்குட்பட்டவர்களில் நூற்றில் ஒரு குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டதாக உள்ளது.

மனநல பாதிப்புகள் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் சுகாதார நிதி முழுமையாக பயன்படுத்தப்படாதது.
மாநில அரசு மனநல பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தாதது, கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஊழியர் பற்றாக்குறை தீர்க்கப்படாதது போன்றவை முக்கிய காரணங்களாகும். தனியார் மனநல மருத்துவமனைகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவதும் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படாததற்கு காரணமாக இருக்கின்றன.


இந்திய அளவில் தனிநபர் மது அருந்தும் அளவு 0.75 லிட்டர் ஆகும். ஆனால் கேரளாவில் தனிநபர் ஒருவர் சராசரியாக 8.3 லிட்டர் மது அருந்துகிறாராம். அதேபோல கேரளாவில் லட்சம் பேருக்கு 25.3 பேர் தற்கொலை செய்கிறார்கள். இது இந்திய அளவில் 10.5 பேராக உள்ளது.

இந்திய அளவில் விவாகரத்து அளவு 1.1 சதவீதமாக இருக்கும்போது கேரளாவில் இந்த அளவு 3.3. சதவீதமாக உள்ளது. கேரளாவில் மொத்தம் பதிவாகும் குற்றங்களில் 11.8 சதவீதம் குடும்ப வன்முறை வழக்குகளாக உள்ளன. ஆனால் இந்திய அளவில் 5.3 சதவீதம் வழக்குகள்தான் குடும்ப வன்முறை வழக்காகும்.

மேற்கண்ட புள்ளி விவரங்கள் மனநல பிரச்சினைகளோடு நேரடியாக சம்பந்தப்பட்டவை என்பது நிபுணர்களின் கருத்து. ‘மது, தற்கொலை, விவாகரத்துகள், குடும்ப வன்முறை போன்றவற்றில் மாநிலம் முன்னிலை வகிப்பது நிலைமை மோசமடைவதற்கான காரணங்கள். இது முன்னேறிய சமூகத்தை பாதிக்கும் பிரச்சினை’ என்கிறார்கள் நிபுணர்கள்.

கேரளாவில் ஆண்களைவிட 1.5 முதல் 2 சதவீத பெண்கள் கூடுதலாக மனநல பாதிப்புக்கு உள்ளாகிறார்களாம். அங்கு பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும் அவர்கள் தங்களின் பாதிப்பை வெளியில் காட்டிக் கொள்ளாததும் அதிகமாக மனநலம் பாதிக்க காரணமாகிறது.

வளைகுடா நாடுகளில் இருக்கும் 25 லட்சம் கேரளவாசிகளில் 90 சதவீதம் பேர் ஆண்கள். அவர்களின் பணி குடும்பத்திற்கு அதிக வருவாயைத் தந்திருந்தாலும் வேறுவகையில் பிரச்சினைகளையும் தருகிறது. வளைகுடா நாடுகளில் இருப்பவர்களின் மனைவிகளை வளைகுடா விதவை என்று அழைக்கிறார்கள். இவர்கள் உணர்வு ரீதியான பிரச்சினைகளுக்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கேரளாவில் நடக்கும் தற்கொலைகளில் 19 சதவீதத்திற்கு மனநல பாதிப்புதான் காரணம் என்ற மாநில குற்ற ஆவணங்கள் பிரிவு அறிக்கைகள் சொல்கிறது.




நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்

No comments:

Post a Comment