Tuesday 21 August 2012

தப்லீக்கின் அடிப்படை விதிமுறை -ஒரு இஸ்லாமிய பார்வை....


அல்லாஹ்வின்  பாதையில்  வெளிக்கிளம்புவது என்பது இன்றைய காலத்தில் வெளிக்கிளம்புவது மாதிரி கருதுவது போன்றது அல்ல . இது சலபுகள் யாரும் அறிவிக்காத ஒரு பித்அத் ஆன செயலாகும். அல்லாஹ்வுக்காக வெளிக்கிளம்புவது என்பது ஜிஹாதுக்காக வெளிக்கிளம்புவதாகும்.  அல்லாஹ்வுக்காக வெளிக்கிளம்பி செல்வது என்பதை ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் மட்டிடாது, இன்னும் ஒரு கூட்டத்தோடு மற்றும் நாற்பது நாட்கள் என்றோ அதற்க்கு கூடுதலாகவோ குறைவாகவோ என்றெல்லாம் மட்டுப்படுத்தாமல் தனது சக்த்திக்கு உட்பட்ட வகையில் இருக்க வேண்டும். அத்தோடு அழைப்பாளர் இல்மை சுமந்தவராக இருக்க வேண்டும். இல்ம் இல்லாத அறிவீனர்கள் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.   

அல்லாஹ் சுபானஹுதாலா கூறுகிறான்:  சொல்லுங்கள் ( நபியே ) இது எனது வழி. நான் தெளிவான இல்முடன் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். (12:108) 

அதாவது இல்முடன் என்பது , எதன் பக்கம் மக்களை அழைக்கிறான் என்பதையும் , எவைகள் வாஜிபானது , முஸ்தஹாபானது , ஹராமானது, மக்ருஹ் போன்றவைகளை அழைப்பாளன் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். இன்னும் அவன் எவைகள் ஷிர்க் , பாவம் , குப்ர் , ஒழுக்கக்கேடானது , கீழ்படிதலின்மை என்பவற்றை அறிந்திருக்க
வேண்டும். 



தப்லீக்கின் அடிப்படைகளை உருவான விதம் பற்றி இல்யாஸ் மௌலான கூறுகின்றார்

"இந்த தப்லீக்கின் அடிப்படை விதிமுறைகளை நான் எனது விருப்பப்படி உருவாக்க வில்லை. அது எனக்குக் கொடுக்கப்பட்டது. அவ்வாறு செய்யுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டது" என்று .

இவர் தனக்கு வஹி வந்தது என்று மறைமுகமாக சொல்லுகிறார். அல்லது தனக்கு அல்லாஹ் உதிப்பின் மூலம் அறிவித்தான் என்று சொல்லுகிறார். நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களுக்கு பின் மார்க்கத்தில் ஒரு காரியத்தை உருவாக்கி அது அல்லாஹ் ஏவினான், சொன்னான் , அவனின் புறத்தில் இருந்து எனக்கு தெரிய வந்தது என்று சொல்வது தெட்டத் தெளிவான ஷிர்க்காகும்.

இன்னொரு இடத்தில் தனது ஷிர்க்கை பின்வருமாறு வெளிக்காட்டுகிறார்கள் .

மிகப்பெரிய தப்லீக் பெரியார் ஒருவர் இருந்தார்கள். அவர்களிடம் கஷ்புடைய ஞானம் இருந்தது. அதன்மூலமாக அவர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்னிலையில் பிரசன்னமாகி உரையாடி மகிழ்வது வழக்கம். அவர்களிடத்தில் ஸக்கரிய்யா மௌலானா அவர்கள் ஒருமுறை வருகை தந்து, தான் ஒரு பயணம் செய்ய இருப்பதாகவும் அதற்காகத் தங்களிடத்தில் இஸ்திகாராத் தேடுவதற்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தார்கள். இதனைக் கேட்ட ஷேக் அவர்கள் 'ஜக்கரிய்யாவுடைய இதயத்தில் உதிப்பாகும் அனைத்து விடயங்களுமே மேலிடத்திலிருந்தே கிடைக்கின்றன. எனவே இந்தப் பயணத்தை விடவும் சிறந்த ஒரு காரியம் கிடையாது' என்றார்கள். (மஹ்பூபுல் ஆரிபீன் பக்கம் 52). 

தப்லீக் ஜமாஅத்தின் அடிப்படை அம்சங்களில் அவர்கள் ஆறு விடயங்களை அமைத்திருக்கின்றார்கள் . இந்த ஆறு நம்பரிலுள்ள மார்க்க அம்சங்களுக்கு விரிவுரையோ விளக்கமோ அவர்களது தஃலீம் நூல்களிலிருந்து மாத்திரம்தான் பெறப்பட வேண்டும். ஆறு நம்பரை விட்டு வெளியேறினால் தீனை விட்டே வெளியேறி விட்டதாக ஆகி விடும் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றார்கள். 

சஹாரன்பூரைச் சேர்ந்த ஸகரிய்யா சாஹிப் என்பவர் தனக்கும் அப்போதைய ஹஜ்ரத்ஜீக்கும் மத்தியில் நிலவிய மாமன் மருமகன் என்ற உறவைப் பயன்படுத்தி தான் எழுதிய நூல்களை தப்லீகின் தஃலீம்களில் படிக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார். குர்ஆனை விட அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பள்ளிவாயில்கள் தோறும் படிக்கப்படுகின்ற தஃலீம் தொகுப்பு தப்லீக் ஜமாஅத்தினருக்குக் கிடைத்த புதியவேதமாக ஆகிவிட்டது.

தப்லீக் ஜமாஅத்தின் ஆறு நம்பர் என்று சொல்லப்படும் ஆறு அடிப்படை அம்சங்களும் வருமாறு :
  1. கலிமா -லாயிலாஹ இல்லல்லாஹ் .
  2. தொழுகை.
  3. இல்மு – திக்ரு .
  4. இக்ராம் -(பிற சகோதரர்களைக் கண்ணியப்படுத்தல் )
  5. இக்லாஸ் - ( மனத்தூய்மை )
  6. தப்லீக் . - (வக்தில் வெளிக்கிளம்பிச் செல்லல் )

முதலாம் நம்பர் கலிமா -லாயிலாஹ இல்லல்லாஹ்

வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை எனும் கலிமாவுக்கு தப்லீக் ஜமாஅத்தின் விளக்கம் >> வஸ்த்துக்களுக்கு எவ்வித சக்தியுமில்லை.  அல்லாஹ்வுக்குக்தான் அனைத்து சக்திகளும் உண்டு. 
அன்றைய குறைஷிக் காபிர்களிடம் கூட அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்தவன் .  ஆக்குபவன் அழிப்பவன்,காப்பவன் ,உணவளிப்பவன் , நோயைக் குணப்படுத்துபவனெல்லாம் அவன்தான் எனும் நம்பிக்கை இருக்கத தான் செய்தது . 
அல்லாஹ் கூறுகின்றான். . . 

நபியே(அவர்களிடம் ) சொல்லுங்கள் . .  உங்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார் ? உங்களது பார்வை கேள்வி 
(அனைத்துக்கும் ) சொந்தக்காரன் யார் . ? செத்ததிலிருந்து உயிருள்ளதையும் உயிருள்ளதிலிருந்து செத்ததையும் வெளிப்படுத்துபவன் யார் ? எனக் கேளுங்கள் அல்லாஹ்தான் என்று அவர்கள் கூறுவார்கள் அப்படியானால் அவர்கள் (அவனைப்) பயப்பட வேண்டாமா ? (ஸூரத்துல் யூனுஸ் : 37)

எனவே அன்றைய குறைஷிக் காபிர்களிடம் கூட அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்தவன் .  ஆக்குபவன் அழிப்பவன்,காப்பவன் ,உணவளிப்பவன் , நோயைக் குணப்படுத்துபவனெல்லாம் அவன்தான் எனும் நம்பிக்கை இருக்கத தான் செய்தது . 

இதிலிருந்து அல்லாஹ்தான் எமக்கு அனைத்துக்கும் பொறுப்பாளன், அவனே உணவளிப்பவன், குணமளிப்பவன் எனும் நம்பிக்கை காபிர்களிடம் இருந்ததென்பது தெளிவாகின்றது .  எனினும் இத்தகைய மக்களைத்தான் அல்லாஹ் 'குல் யா அய்யுஹல் காபிரூன் - காபிர்களே! என்று அழைக்கின்றான் .  

இந்த அடிப்படையில் கலிமாவின் உண்மையான கருத்தாக சொல்லப்படும் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை
தவிர வேறு யாருமில்லை என்ற தவ்ஹீதுள் உழுஹிய்யா வை விட்டு விட்டு தவ்ஹீதுள் ருபுபியாவை கலிமாவின் பொருளாக
தனது ஜமாத்தின் கொள்கைக்கு ஏற்ப மாற்றி கூறுகிறார்கள். இவ்வாறு ஷஹாததுள் இஸ்லாமிலேயே கையை வைத்து விட்டார்கள். பின்னர் ஏனையவற்றை பற்றி சொல்லவும் வேண்டுமா ? தப்லிக் ஜமாஅத்
சொல்லும் கருத்தான , இந்த தவ்ஹீதுள் ருபுபியாவை குறைஷி காபிர்களும் ஏற்றுக் கொண்டு தான் இருந்தனர். 


இரண்டாம் நம்பர் தொழுகை 

தொழுகையின் முக்கியத்துவம் சிறப்பு அதனை விடுவதால் ஏற்படும் இன்னல்கள் பற்றியெல்லாம் அல்குர்ஆனிலும் நபிமொழியிலும் அதிக இடங்களில் விபரித்துக் கூறப்பட்டுள்ளன . 'நான் எவ்வாறு தொழுவதை நீங்கள் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள் . ஆதாரம் (புகாரி 595 )

தப்லீக் ஜமாஅத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்களின் தஃலீம் தொகுப்பான அமல்களின் சிறப்பில் தொழுகைக்காக ஒரு பகுதியே ஒதுக்கப்பட்டுள்ளது .தஃலீம் தொகுப்பு புத்தகத்தின் அதிக இடங்களில்பலவீனமான ஹதீஸ்களின் விளக்கங்கங்கள் வரும். பின்னர் புனையப்பட்ட முகவரியில்லாத சில விடயங்கள் 'ஒரு ஹதீஸில் வருவதாவது, ஒரு அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளதாவது ' எனும் பெயரில் இடம் பெறும் . அதன்பின்னர் பெரியார்களின் வரலாறு எனும் பெயரில் பல்வேறு விதமான போலிக்கதைகளும் நடக்காத கற்பனைச் சம்பவங்களும் சாகசச் செயல்களாகச் சித்தரிக்கப்பட்டு மக்களுக்கு உற்சாகம் ஊட்டப்படும்.  இது தான் தஃலீம் இரண்டாம் நம்பர் தொழுகைபற்றிய சுருக்கம்.

இன்னும் யாரெல்லாம் நபி வழியை அறிந்து நபி வழியின் அடிப்படையில் தொழுகிறார்களோ அவர்களை தாக்குவதும், மஸ்ஜிதை விட்டு துரத்துவதும், மஸ்ஜிதுக்கு வர வேண்டாம் என அச்சுறுத்துவதும் இவர்களது தப்லிக் செயற்பாடுகளில் ஒன்று. ஆனால் கோஷமோ தொழுகையின் பக்கம் அழைக்கிறோம் என்பதாகும். 

இவைகள் தொழுகையின் பக்கம் அழைப்பவர்கள் செய்யும் செயல்களா? இப்படியான  இவர்களது அடாவடித்தனங்களை தப்லிக்கின் மேலிடத்துக்கு முறைப்பாடு செய்தால் , அந்த ஏரியா ( மஹல்லா ) தப்லிக் உறுப்பினர்களின் தலையில் பழியை சுமத்தி தப்பித்து விடுவார்கள். அவர்களை கட்டுப்படுத்த முடியாது ஏனெனில் அவர்கள் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பார்கள். ஆனால் எல்லா மஸ்ஜிதுகளும் தப்லிக்கின் தலைமைபீடமான மர்கசுடன் நேரடி கண்காணிப்பில் செயல்படுகிறார்கள். இவ்வாறு தொழுகைக்கும் தொளுகையாளிக்கும் தப்லிக்கின் பெயரில் செய்யும் அட்டகாசம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.  

3. இல்மு – திக்ரு 

இல்மு திக்ரின் போர்வையில் பல்வேறு காலை மாலை திக்ர்கள் , ஹதீஸில் வந்த திக்ரு முறைக்கு மாற்றமாகவும் , இவர்களின் பெரியார்கள் சொல்லிக் கொடுத்த பித்அத்தான முறையிலும் திக்ர் செய்வார்கள்.
இல்மு – மார்க்க அறிவு எனும் பெயரில் பலவீனமான ,இட்டுக் கட்டப்பட்ட செய்திகள் போதிக்கும் பாடங்களும் , இஸ்லாத்திலில்லாத பித்அத்தான மௌட்டீக விடயங்களும், ஏன் ஷிர்க்கான விடயங்களும் தாராளமாகப் போதிக்கப்படுகின்றன. சகரிய்யா மௌலான எழுதிய மன்ஸில் என்ற கிதாபில் இருந்து பெரியார்களின் கட்டுக்கதைகளில் வந்த துஆக்களை காலையிலும் மாலையிலும் ஓதி வருகிறார்கள்.   


4. இக்ராம் -(பிற சகோதரர்களைக் கண்ணியப்படுத்தல் )

இவர்களது உதவியை, உபசரிப்பை, இக்ராமை ஒருவர் பெற வேண்டுமானால் அவர் தப்லீக் ஜமாஅத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவராக இருக்க வேண்டும்,  அல்லது அதற்கு ஆதரவாக இருக்க வேண்டும் . குறைந்த பட்சம் எதிலும் சம்பந்தப்படாதவராக ஒரு அப்பாவி மகனாக இருக்க வேண்டும். 

இதற்கு மாற்றமாக அவர் தப்லீக்கில் செல்லாதவராக அதனை விமர்சிப்பவராக,  அல்லது வேறு ஒரு அமைப்பில் இருப்பவராயின் அவர்களுக்கு தப்லீக் அமைப்பினர் இக்ராம் செய்வது ஒரு புறமிருக்க அவர்களை எதிரிகளை,  காபிர்களைப் பார்ப்பது போல் ஒருவித விரோதக் கண்ணோட்டத்தில் பார்ப்பதை சாதாரணமாக நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது .
அது மாத்திரமல்ல தப்லீக் அமைப்பினரிடம் உள்ள இஸ்லாமிய முரண்பாடுகளை சுட்டிக்காட்டிய சமயம் அதனை ஏற்று கொள்ளாது,  அல்லது அவர்களிடம் அறிவு ரீதியாக தம் அமைப்பின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு மறுப்புமளிக்காது அவர்களை அச்சுறுத்தல்,  ஆள்வைத்துத் தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதையும் மேலிடம் இதைக் கண்டும் காணாமல் இருப்பதையும் அறிந்து கொள்ள முடிகின்றது .

5. இக்லாஸ் - ( மனத்தூய்மை )

மனத்தூய்மைக்கு எதிரானது இணைவைப்பு, முகஸ்துதி போன்றவைகளாகும். ஆனால் இவ்விரண்டையும் என்ன வென்று அறியாமல் தடுமாறும் கூட்டம் தான் இவர்கள்.  

தூய்மையான எண்ணம் இருந்தால் போதும் என்று ஷிர்க்காக இருந்தாலும் , நபி வழிக்கு மாற்றமான எந்தச் செயலாக இருந்தாலும் மக்களின் திருப்திக்காக , பிரச்சினைகள் வேண்டாம் என்று செய்வார்கள். தமது ஜமா அத் வேலைகளுக்கு இடைஞ்சல் வரக்கூடாது என்பதற்காக , அது கப்ரு ஸ்தானங்களில் நடை பெரும் துஆ பிரார்த்தனைகளாக இருந்தாலும் என்ன ! , அவ்லியாக்களுக்காக அறுத்துப் பலியிடுதலாக இருந்தாலும் என்ன !, கத்தம் பாத்திஹா என்றாலும் என்ன ! இந்த  அணைத்து ஷிர்க் குப்ரான பித் அத் ஆன எல்லா காரியங்களையும் சேர்ந்து கலந்து ஒத்துழைப்பு கொடுப்பார்கள், பின்னர் செய்துவிட்டு இக்லாஸ் சரியாக தூய்மையாக இருந்தால் போதும் என்பார்கள் . 

இவர்களது தேவ் பந்த் உலமாக்களிடம் தூய்மையான நிய்யத் என்பதற்கு பதிலாக நிய்யத்தை சரிகட்டுதல் என்ற பிரயோகமே காணப்படுகிறது. அதாவது எந்தச் செயலையும் அவர்களது இயக்கத்தின் வழிமுறையில் செய்யலாம். நிய்யத்தை அதற்கொப்ப சரிகட்டி விட்டால் போதுமானது.  இது தான் இவர்களது இக்லாஸ்.  

6,தப்லீக் (வக்தில் வெளிக்கிளம்பிச் செல்லல் )


இந்த நம்பருக்கு , இவர்களிடம் பத்து உசூல்கள் இருக்கின்றன. 

01. ஒரு கூட்டமாக சென்று எத்தி வைத்தல்.

02. எந்த விதமான கேள்விகள் இன்றி மௌனமாக அமீருக்கு கட்டுப்படுதல், தக்லீத் செய்தலும். 

03. மார்கத்திற்கு முரணான எந்த செயல்களையோ , குப்ர்களையோ, ஷிர்க்களையோ அடையாளம் காட்டி வெளிப்படுத்தாமல் இருத்தல். 

04. ஆலோசனைகளும் பத்வாக்களும் போன்ற அனைத்து விடயங்களும் தப்லிக் ஜமா அத்தின் குறிப்பிட்ட புத்தகங்களில் இருந்து மட்டுமே பெறப்படல் வேண்டும். 

05. தமது ஜமாஅத் பயன்படுத்தும் குறிப்பிட்ட புத்தகங்களில் இருந்து சில குறிப்பிட்ட திக்ருகளையும் அவ்ராதுகளையும் வக்தில் இருக்கும் போது பயன்படுத்துவதும் அதன் பால் ஆர்வம் ஊட்டுவதும். 

06. என்ன ஏது என்ற கேள்விகள் இல்லாமல், ஆராயாமல் 
 மௌனமாக விடயங்களை செவிமடுத்தலும், தக்லீத் செய்தலும். 

07. ஷரியத்தின்  சட்ட விடயங்களை பேசுவதில் இருந்து முடியுமான அளவு தூரமாயிருத்தல்.

08. மார்க்க விடயங்களை ஏனைய கிதாபுகளில் இருந்து சுட்டிக்காட்டி பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. அல் குர்ஆன் இன் ஆயத்துகலாக இருந்தாலும் , நபி மொழிகளாக இருந்தாலும் ஜமாஅத்தின் குறிப்பிட்ட கிதாபுகளில் இருந்து மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டும். 

09. எல்லா விதமான நன்மைகளும் இந்த உழைப்பில் / வேலையில் மட்டுமே உள்ளது என்ற நம்பிக்கையை ஊட்டி வளர்த்தல். 

10. முடியுமான அளவு மக்களை வக்தில் தக்க வைத்துக் கொள்ளல்.

நன்றி : ஷேக் ஸைத் இப்னு ஹாதி அல் மத்ஹலி,ஷேக் அபு அப்துர் ரஹ்மான் யஹ்யா சில்மி அஸ் சைலாணி. இலங்கை.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment