Thursday 31 May 2012

இந்தியாவின் ஜனாதிபதி : ஓர் கண்ணோட்டம்...



File:Rashtrapati Bhavan-1.jpgஇந்தியாவில் ஜனாதிபதி தேர்தல் வந்தாலும் வந்தது, நாட்டின் பல்வேறு கட்சிகளின் உட்கட்சி விவகாரங்களும் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. தேர்தல் முடியும் காலத்தில், அவர்களுடைய உட்கட்சி அழுக்குகள் எல்லாம் வெளியே அலசப்படும் என்றல்ல. ஆனால், அந்த உட்கட்சி விவகாரங்கள் ஒருசில கட்சிகளின் கட்டுக்கோப்பான 'இமேஜை' உடைத்து விடுமோ என்ற எண்ணம் உருவாகி வருகிறது. அப்படியே, நாட்டின் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியையும் அவை பதம் பார்த்து விடுமோ என்ற பயமும் எழுகிறது.

இந்தியாவின் ஜனாதிபதியாக ஆவதற்கு, முப்பத்தைந்து வயது நிரம்பிய நாட்டின் பிரஜை யாருக்கும் தகுதி உண்டு. ஆனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாட்டின் அனைத்து மாநிலங்களின் சட்டப் பேரவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் பங்கெடுக்கும் தேர்தலில் வெற்றிபெற்றவரே ஜனாதிபதியாக முடியும். இது ஜனநாயக விதி, தேர்தல் விதிமுறை. அவ்வாறு ஜனாதிபதியாக பதவி ஏற்பவர் தன்னையோ, தான் சார்ந்திருந்த அரசியல் கட்சியையோ அல்லது தனது மாநிலத்தையோ மட்டும் பிரதிநிதித்துவப் படுத்துவது இல்லை. அவர் இந்திய திருநாட்டிற்கும், அதன் இறையாண்மைக்கும். மாட்சிமைக்கும்  உயிரோட்டமுள்ள சின்னம், அடையாளம்.

ஆனால், ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தல் நேரத்திலும் நடப்பது என்ன? பெருமைக்கும் பெருமதிப்பிற்கும் உள்ள அந்த பதவியை அரசியல் கட்சிகள் கூறு போட்டு விற்கும் அளவிற்கு நிலைமை போய்விட்டது. அதுவும். கூட்டணி ஆட்சி என்று வந்த பிறகு, அனைத்து தரப்பினரையும் அனுசரித்து போகவேண்டும் என்ற பெயரில் அந்த அரும்பெரும் பதவி அரசியல் பேரத்திற்கான ஒரு கருவியாக மாறிவிட்டது. தற்போதைய சூழ்நிலையில், மத்தியில் ஆளும் கூட்டணியின் காங்கிரஸ் தலைமை, அதே அணியில் அங்கம் வகிக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனார்ஜியை எப்படி சரி கட்டி, ஜனாதிபதி தேர்தலில் அவரது ஆதரவை பெறுவது என்ற குழப்பத்தில் இருக்கிறது. மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்த போதும் இதே நிலைமை தான் நிலவியது.

இதை விட தவறானது, தங்களது கூட்டணி கட்சிகளை புறம் தள்ளி விட்டு, தேசிய அளவில் கூட்டணிகளின் தலைமை ஏற்கும் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா தலைமைகள் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு - ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகிய இரண்டு பதவிகளையும் தங்களது குடும்ப சொத்து என்ற கணக்கில் பங்கு போட்டுக் கொள்வது. இந்த முறையும் இது நடக்க வாய்ப்பு உள்ளது. காரணம், இரண்டு பதவிகளுக்கான தேர்தலும் அடுத்தடுத்கு நடக்க இருப்பது தான். அவர்களுக்குள் உடன்பாடு எட்டப்பட்டு விட்டால், அதுவே தங்களுக்கு கிடைத்த வெற்றியாக கூட்டணி கட்சிகள் கொண்டாடுகின்றன. அல்லது, நல்ல காலம், யாருக்கு ஆதரவு அளிப்பது என்ற குழப்பம் தங்களுக்கு ஏற்பட்டு விடவில்லையே என்ற நிம்மதி பெருமூச்சாவது அவர்களில் பல கட்சிகளும் விடுவதும் நிதர்சனமானது.

ஆனால். இதனை எல்லாம் தாண்டி, உள்கட்சி பிரச்சினைகளிலும் இந்த உயர் பதவிகள் சிக்கிக் கொண்டு அல்லாடுவது வேதனை தரும் விடயம். தற்போது, காங்கிரஸ் கட்சியின் உள்ளே, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி பதவிக்கு முன் நிறுத்த வேண்டுமா? என்ற கேள்வி அலசப்பட்டு வருகிறது. ஜனாதிபதி வேட்பாளர் குறித்த ஒருமித்த கருத்து உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் பாரதிய ஜனதா போன்ற எதிர்கட்சிகள் அவரை ஆதரிக்காது என்று கூறுவர் கட்சியில் உள்ளனர். ஆனால். பல்வேறு காரணங்களுக்காக அவரை பிடிக்காதவர்கள், அதனையே காரணம் காட்டி, தங்களது துவேஷத்திற்கு பிரணாப் முகர்ஜியை மட்டுமல்ல, மாட்சிமை பொருந்திய ஜனாதிபதி பதவியையும் இலக்கு ஆக்கி விடுவது வேதனைக்குரிய விடயம்.

இதேமுறை ஒரு காலத்தில் கட்டுக்கோப்பாக இருந்த பாரதிய ஜனதா கட்சியையும் தற்போது ஆட்டிப்படைக்கிறது என்பதே உண்மை. அண்மையில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி சந்தித்து, முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் தனியாக பேசியதாக பத்திரிகை செய்திகள் தெரிவித்தன. இருவருமே பத்திரிகையாளர்களிடம் வேட்பாளர் குறித்து எந்த செய்தியையும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால். அடுத்த நாளே, தேசிய ஊடகங்களில் அவர்கள் இருவரும் ஜனாதிபதி பதவிக்கு, பிரணாப் முகர்ஜி மற்றும் தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி ஆகிய இருவரில் ஒருவரை மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்து கலந்தாலோசித்ததாக கூறின.

இந்த செய்தியில் எத்தனை தூரம் உண்மை இருந்தது என்று தெரியவில்லை. ஆனால், உடனடியாகவே இந்த இருவரையுமே பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக் கொள்ளாது என்று அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அந்த கட்சியை பொறுத்த வரை அவர் ஒரு மூத்த தலைவர். நாடாளுமன்ற அகராதியில் அதற்கும் அப்பால் சென்று, மக்களவையின் பெரு மதிப்பிற்குரிய எதிர்கட்சி தலைவர். ஆனால், இவற்றால் மட்டுமே அவர் சார்ந்த கட்சியையும், அந்த கட்சி தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியையும் பிரதிநிதித்துவப் படுத்தி கொள்கை முடிவுகளை அவரால் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை.

சுஷ்;மா சுவராஜ் கருத்து தெரிவித்த பின்னரும் அவருக்கு ஆதரவாக கட்சியின் மூத்த தலைவர்கள் பேசாதது, அது அவரது சொந்த கருத்து மட்டும் தானோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. இதன் பொருள் என்ன? பாரதிய ஜனதா கட்சியில் தற்போது அரங்கேறி வரும் தலைமைக்கான குடும்பி பிடி சண்டையில் ஜனாதிபதி பதவியையும் சுஷ்மா சுவராஜ் போன்றவர்கள் பகடை காயாக உருட்டி விளையாடுகிறார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அதுவும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 'தொங்கு நாடாளுமன்றம்' ஏற்பட்டால், தனது கட்சிக்கு மட்டுமல்ல, தான் பிரதமர் ஆவதற்கு துணை நிற்பார் என்று சுஷ்மா போன்றவர்கள் நினைப்பவரையே அவர் போன்றவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க விரும்புவதாகவே தெரிகிறது.

இது இப்படி என்றால், பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும், அகாலி தளமும் சுஷ்மாவின் கருத்து அவர் சார்ந்த கட்சியின் கருத்தாக மட்டுமே கொள்ளப்பட வேண்டும் என்று உடனடியாகவே கூறினர். தேசிய ஜனநாயக கூட்டணி, ஜனாதிபதி தேர்தல் குறித்து எந்த பேச்சுவார்த்தைகளும் நடத்தி இருக்கவில்லை என்று சுட்டிக்காட்டியதன் மூலம், அவர்கள் இருவரும் சுஷ்மாவின் தன்னிச்சையான பேச்சையும், பாரதீய ஜனதா கட்சியின் போக்கையுமே விரும்பவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளனர்.

ஜனாதிபதி பதவியை அலங்கரிக்கும் 'மாட்சிமை' ஹமீது அன்சாரிக்கு இல்லை என்று சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த உயர் பதவியில், மீண்டும் தமிழ் நாட்டை சேர்ந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களை வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி நினைப்பது குறித்து எந்தவிதமான இரு கருத்துக்களும் இருக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால், இதுவே பாரதீய ஜனதா கட்சியின் கருத்து என்று 'நவீன ஆதித்யன்' பல மாதங்களுக்கு முன்னரே கோடிட்டுக் காட்டியது. ஆனால், அதனால் மட்டுமே, அன்சாரிக்கு அந்த பதவியை அலங்கரிக்கும் மாட்சிமை இல்லை என்று சுஷ்மா கூறுவது, அப்துல் கலாம் அவர்களது பெயருக்கே பெருமை சேர்க்காது.

சுதந்திர போராட்ட காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக இருந்த எம்.ஏ.அன்சாரின் குடும்பத்தை சேர்ந்த ஹமீது அன்சாரி, இந்தியாவின் தூதுவராக பல்வேறு நாடுகளில் பணியாற்றியவர். பின்னர். அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தின் துணை வேந்தராக பணியாற்றி, சிறந்த கல்வி பணியாளர் என்று பெயர் பெற்றவர். கடந்த ஐந்து ஆண்டுகளாக, துணை ஜனாதிபதி பதவியில் இருந்து, மாநிலங்களவையை அவர் வழி நடத்திய விதத்தை, பாரதிய ஜனதா கட்சி உட்பட்ட எந்த ஒரு கட்சியும் ஒருமுறை கூட குறை கூற இடம் கொடுக்காதவர்.

நாளையே, சுஷ்மாவின் எதிர்ப்பையும் மீறி, அன்சாரி ஜனாதிபதியாகவும், ஒரு வாதத்திற்கேனும் சுஷ்மாவே பிரதமராகவும் தேர்ந்தெடுக்க படும் சூழல்நிலை உருவானால், அவர் எப்படி அன்சாரியின் முகத்தை ஏறெடுத்தும் பார்ப்பார் என்பதை எல்லாம் அவர் நினைத்து கூட பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது. இதுபோன்று தான், கடந்த 2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின் சோனியா காந்தி பிரதமரானால், தான் மொட்டை போட்டு அதனை துக்க தினமாக அனுஷ்டிப்பேன் என்று சுஷ்மா கூறியதையும் நாடு ரசிக்கவில்லை. அந்த சம்பவத்தை நினைவு வைத்திருந்தால், அவர் இப்போது இவ்வாறு பேசியிருக்கமாட்டார்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ஜனாதிபதி பதவியே, ஆட்சி மாற்றத்தின் போது தங்களது கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார் என்று கருதுபவர்களையே முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும் முறையாக மாறிவிட்டது. அதாவது, முறை தவறி தனக்கு ஆதரவளித்த கட்சிக்கு அவர்களுக்கு தேவைப்படும் வேளைகளில் ஜனாதிபதி துணை நிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுதப்படாத சட்டமாக ஆகிவிட்டது. இது குறித்து கட்சி தலைமைகளும் வேதனைப்படுவதில்லை. அவர்களால் முன்னிறுத்தப் படுபவர்களும் வெட்கப்படுவதில்லை. மக்களாகிய நாமோ, இவை எதைப் பற்றியுமே கவலைப் படாமல், 'அரசியலில் இதுவெல்லாம் சகஜம்' என்று வாறாகவிருக்க நன்றாகவே கற்றுக் கொண்டிருக்கிறோம்.
தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment