Thursday 31 May 2012

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா. ?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தொழுகையாளிகள் மட்டுமே மறுமையில் சுவனத்தை அடைய முடியும், தங்களுடைய இறைவனை கண்குளிர கண்டு மகிழ முடியும் தொழாதவர்களால் அது அறவே சாத்தியமில்லை என்பதையும் தொழுகை எனும் இறைவணக்கம் தான் மனிதனை தீய வழியிலிருந்துத் தடுத்து நேர்வழியில் செலுத்தும் என்பதையும் பார்த்தோம்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதால் தீயவழிக்கு இழுத்துச் செல்லும் கேடுகெட்ட கலாச்சாரம் மிகுந்த காலத்தில் வாழ்ந்து வருவதால் குழந்தைகளின் சிறுப் பிராயத்திலேயே நேர்வழியில் செலுத்தும் தொழுகையைப் புகுத்தி விட வேண்டும் தாமதித்தால் தீய கலாச்சாரம் உள்ளத்தில் புகுந்து விட்டால் முற்றியப் பிறகு மாற்றுவதுக் கடினமாகி விடலாம்.

ஐம்பதிலும் வளையுமா ?

ஐம்பதில் வளைந்தவர்களும் இருக்கத் தானே செய்கிறார்கள் என்று ஒரு சிலரைப் பார்த்து தங்கள் குழந்தைகளுக்குத் தொழுகையை ஏவும் விஷயத்தில் பெற்றோர்கள் நாட்களை தள்ளிப் போடுகின்றனர். அவர்கள் பார்க்கும் ஐம்பதில் வளைந்தவர்கள் எல்லாம் அல்லாஹ்வால் வளைக்கப்பட்டவர்கள் என்பதைக் காணத் தவறி விடுகின்றனர்.

மனிதர்களின் உள்ளங்களை அல்லாஹ் தனது இரு விரல்களுக்கு மத்தியில் வைத்திருப்பதால் அவன் நாடும்பொழுது தனது வல்லமையை நிலைநாட்டுவதற்காக இனித் தேராது என்று கைவிடப்பட்டவருடைய உள்ளத்தையும் புரட்டி நேர்வழியில் செலுத்தி அவரை தனது தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களில் ஒருவராகவும் ஆக்கி விடுவான்.

படித்ததினால் அறிவுப் பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம் படிக்காத மேதைகளும் பூமியில் உண்டு என்றுக் கூறுவதைப் போல் படிக்காதவர்களில் ஆயிரத்தில் சிலரை படித்தப் பண்டிதர்களுக்கு நிகரானவர்களாக உருவாக்குவது இறைவனின் வல்லமையில் உள்ளது.

சர்வ வல்லமைப் படைத்த உலக அதிபதியாகிய அல்லாஹ் தனது வல்லமையிலிருந்து சிறிதளவை கூட உலகில் உள்ள எவருக்கும் வழங்கவில்லை என்பதால் நம்முடையப் பிள்ளைகள் வளர்ந்து தீமையை உள்ளத்தில் புகுத்திக்கொண்டு வழிகெட்டப் பின் அவர்களை நேர்வழியில் செலுத்த நினைப்பது நமக்கு முடியாதக் காரியமாகி விடும். அல்லாஹ் அவனை தட்டழிந்து கெட்டலைய விட்டு விட்டால் நம் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்காருவதைத் தவிற வேறெதுவும் செய்ய இயலாது.

அதனால் நமக்கு விதியாக்கப்பட்ட உள்ளத்தில் பதியும் சிறுப் பிராயத்தில் குழந்தைகளுக்கு தொழுகையைப் புகுத்தி விடவேண்டும்.

தொழுகையைப் புகுத்தி விடுவதுடன் நமது கடமை முடிந்தது என்றில்லாமல் குழந்தைகள் தொழுகையாளிகளாக ஆவதற்கு வல்லோன் அல்லாஹ்விடம் பெற்றோர்களாகிய நாமும் பிரார்த்திக்க வேண்டும்.

இப்ராஹீம் நபி(அலை)அவர்கள் இறைவனின் உத்தரவின்படி தன் மனைவி, பிள்ளையை வனாந்திரத்தில் விட்டுத் திரும்பும் பொழுது அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவதற்காக இறைவனினிடம் பிரார்த்தித்தது சான்றாகும்.

இன்ன இடத்தில் விட்டுத் திரும்பி விட வேண்டும் என்பது இறைவனின் உத்தரவாக இருந்ததால் அவர் அங்கிருந்து திரும்பியதும் அவர்களுக்கு இறைவன் பொறுப்பாளியாகி விடுகிறான்.

அவர்களுக்கு இப்பொழுது என்னத் தேவைப்படும் ? எதிர் காலத்தில் என்ன தேவைப்படும் ? என்பதை தனக்கு உத்தரவிட்ட இறைவனுக்கு நன்குத்தெரியும் என்பதை இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் நன்றாக அறிந்துகொண்டே அங்கிருந்து வெளியாகி சற்று மறைந்தப் பின்னர் தனது மனைவிப் பிள்ளைக்கு நிகழ்கால, எதிர்காலத் தேவைகளை தன்னுடைய அறிவுக்கு எட்டும்வரை இறைவனிடம் பட்டியலிட்டார்கள்.


14:37. எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில் இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக! என்று உள்ளம் உருகப் பிரார்த்தித்து விட்டுத் திரும்பினார்கள்.


இந்தப் பிரார்த்தனையை செவியுற்ற அல்லாஹ் இதை அதிகப் பிரசங்கித்தனம் என்றுக்கூறவில்லை என்னுடையப் பொறுப்பில் விட்டவர்களுக்கு என்ன தேவைப்படும் என்று எனக்குத் தெரியாதா ? நீ பட்டியிலிட்டால் தான் எனக்குத் தெரியுமா ? உனக்குத் தெரியாததெல்லாம் எனக்குத் தெரியும் என்று கோபப்பட்டு பதிலளிக்கவில்லை மாறாக அவர்கள் பட்டியலிட்ட இறைவணக்கம், சகோரத்துவம், உணவுப் போன்ற மூன்று அம்சங்களையும் குறைவின்றியே நிறைவேற்றிக் கொடுத்தான்.

இதன் மூலமாக நம் உள்ளம் நாடும் நமக்குத் தேவையான நல்ல விஷயங்களை நமது நாவு; வெளிப்படுத்தி அதற்கான அங்கீகாரத்தை இறைவனிடம் பெறவேண்டும்.


நம்முடைய குழந்தைகள் ஸாலிஹான குழந்தைகளாக வளரவேண்டும் என்று நினைத்தால் தொழுகையை குழந்தைப் பருவத்தில் புகுத்தவதுடன் புகுத்தியத் தொழுகை உள்ளத்திலிருந்து வெளியேறாமல் நிலை கொள்வதற்காகவும் அவர்களின் எதிர்கால தேவைகளாகிய உணவும், பிற மனிதர்களின் உள்ளங்கள் ஈர்க்கப்பட்டு சகோதர வாஞ்சையுடன் வாழ்வதற்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.


தொழுவார், சகோதரத்துவம் இருக்காது, தொழுகையும் சகோதரத்தவமும் இருக்கும், பொருளாதாரம் இருக்காது பொருளாதாரத்தைத் தேடும் பொழுது சறுக்கிடுவார். இப்படி எதாவது ஒன்று அமைந்தால் மற்றொன்று அமையாததைப் பார்க்கிறோம்.


மூன்றும் ஒருங்கே அமையப் பெறவேண்டும் என்றால் குழந்தைகளை சிறுப்பிராயமாக இருக்கும் பொழுது மூன்றுக்கும் முதன்மையானதான தொழுகையைப் புகுத்துவதுடன் அவர்களது இதரத் தேவைகளை இறைவனினடம் பெற்றோர் கேட்க வேண்டும். மூன்றும் ஒருவருக்கு ஒருங்கே அமையப் பெற்று விட்டால் அவரின் சுவனத்தை தடை செய்ய எவராலும், எந்த சக்தியாலும் முடியாது.



இஸ்லாம் வந்தது மனித சமுதாயத்தை வழிகேட்டிலிருந்து நேர்வழியில் செலுத்துவதற்காகத் தான் என்பதற்கு ஏராளமான சான்றுகள் திருக்குர்ஆன் - நபிமொழி நெடுகிலும் காணப்படுவதைப் பார்க்கிறோம் அதில் ஒன்று தாம்பத்தியத்தில் ஈடுபடுபவர்கள் ஷைத்தானின் தீமையிலிருந்து பாதுகாவல் தேடும் பிரார்த்;தனை மிகப் பெரிய சான்றாகும்.



ஏன் என்றால் ? அந்த தாம்பத்தியத்தின் மூலமாகவே குழந்தைப் பாக்கியம் அருளப்படுவதால் அங்கு ஷைத்தான் வந்து விடக்கூடாது என்பதற்காக அந்த நேரத்திலும் இறைவனின் பாதுகாவல் கொண்டு ஷைத்தானை விரட்டுவதற்காக


بِسْمِ اللَّهِ , اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ , وَجَنِّبِ الْشّيْطَانَ مَا رَزَقْتَنَا

பிஸ்மில்லாஹி, அல்லாஹூம்ம ஜன்னிப்னாஷ் ஷைத்தான, வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஜக்தனா



உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்யத்தில் ஈடுபடச் செல்வதற்கு முன் 'அல்லாஹ்வின் திருப்பெயரைக் கூறி நெருங்குகிறேன். 'இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானைத் தூரமாக்கு ! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப்போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்து' என்று சொல்லிவிட்டு உறவு கொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்த தீங்கும் விளைவிப்பதில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். நூல் புகாரி : 141ஃ138.



நல்லதை தெரிந்துக் கொள்வதில் இஸ்லாம் நாணத்தைப் பேணச் சொல்லவில்லை, தீமையைத் தெரிந்து கொள்வதில் இஸ்லாம் வெட்கப் படச்சொன்னது.



ஷைத்தான் ஒருவரை நெருங்குவதால் அவரது பொருளாதாரத்தை சரித்திடுவதில்லை, அல்லது அவரது பொருளாதாரத்தை மேம்படுத்திடுவதில்லை ஒழுக்கங்கெட்ட செயல்கள் புரிவோரை இறைவன் வெறுக்கிறான் என்பதை அறிந்திருந்த ஷைத்தான் ஒழுக்கக்கேட்டைத் தூண்டி இறைவளை வணங்கும் சிந்தனையை மாற்றி விடுவதைத் தவிற வேறெதுவும் அவனால் செய்ய இயலாது.



ஒழுக்கங்கெட்ட செயல்கள் புரிவோரை இறைவன் கோபம் கொள்கிறான் என்பதற்கு நூஹ் (அலை) அவர்களின் மகனை அவர்களின் கண் முன்னே அலை ஒன்றை அனுப்பி அடித்து சென்றப் பிறகு அதைக் கண்ணுற்ற நூஹ்(அலை)அவர்கள் மனம் உடைந்து இறைவா ! இவன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனல்லவா ? என்று ஆதங்கத்துடன் கேட்டதற்கு அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவனல்ல என்றுக்கூறி விட்டு அவன் ஒழுக்கங்கெட்டவன் என்ற பதிலை அல்லாஹ் அளித்தான்.


ஏகஇறைவனை மறுத்த மகனை, ஒழுக்கங்கெட்ட செயல்களில் மூழ்கித் திளைத்த மகனை கண்முன்னே நிகழ்ந்த இறைவனின் கோபத்திலிருந்து நபியாக இருந்தும் காப்பாற்ற முடியவில்லை. உலகில் இப்படி என்றால் ? மறுமையில் இதை விட கடுமையானதாக இருக்கும். தந்தையின் கண் முன்னே மகனும், மகனின் கண் முன்னே தந்தையும் சித்ரவதை செய்யப் படுவார்கள்.


ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவரை அங்கு தெளிவாக அறிந்து கொள்வார்கள் என்பதற்கு இப்ராஹீம் நபி(அலை)அவர்கள் தன் தந்தையின் நிலையைக் ண்டு தவித்து இறைவனிடம் இறைவா ! மறுமையில் என்னை கண்ணியப்படுத்துவதாக வாக்குறி அளித்திருந்தாய் ! இங்கு நான் மட்டும் கண்ணியமடைந்து என் தந்தை சித்ரவதைப் படுவதை என்னால் சகிக்க முடிய வில்லை அதனால் என் தந்தையை மன்னித்து அவருக்கு கண்ணியத்தை வழங்கு என்றுக் கேட்க ? அதை இறைவன் மறுத்து அவருடைய கண் முன்பாகவே அவரின் உருவத்தை மாற்றி நரகில் வீசப் பட்டது தெளிவான ஆதரமாகும்.



உலகில் மகனுக்குத் தலைவலி என்றாலே தாங்கிக் கொள்ள முடியாத தாய்,தந்தையால் மறுமையில் மகனை நெருப்பால் பொசுக்கப்படுவதை தாங்கிக் கொள்ள முடியுமா ? இறுதித் தீர்ப்பு நாளின் மீது உறுதியான நம்பிக்கை இருந்தால் பிள்ளைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளருவதற்காக தொழுகையைப் புகுத்தி விடுவதுடன் இறைவனிடம் அவர்களின் உலக – மறுமைத் தேவைகளைப் பிரார்த்திக்க வேண்டும்.



பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்த்தெடுத்தால் அது இம்மை- மறுமையில் அவர்களுக்கு மட்டும் நலவாக அமையாது, மாறாக வளர்த்தெடுக்கும் பெற்றோருக்கும் நலவாக அமைந்துவிடும் வயதான காலத்தில் அன்புடனும், பரிவுடனும் பராமரிப்பார்கள், மரணித்தப் பின்னரும் கப்ரு வாழ்க்கைக்காகவும், மறுமை வாழ்க்கைக்காகவும் இறைவனிடம் உள்ளம் உருகப் பிரார்த்திப்பார்கள்.



உலகில் நற்செயல்கள் புரிந்து ஒரு மலை அளவு நன்மைகளை குவித்திருந்தாலும் மரணித்தப் பின்னர் அவர்களின் ஒழுக்கமுள்ளப் பிள்ளைகள் அவர்களுக்காக கேட்கும் துஆ மேற்கு மலைத் தொடர்ச்சி மலைகளைப் போல் குவியக் கூடியதாக அமைந்து விடும்.


மரணத்திற்குப் பின் தன்னை ஈன்ற தாய் தந்தையரின் மறுமை வாழ்வுக்காக பிள்ளைகள் பிரார்த்திக்க வேண்டும் என்பதை அறியாமலே இன்றும் எத்தனையோப் பிள்ளைகள் இருக்கின்றனர் அதற்கும் தாய், தந்தையர் தான் காரணம் தொழுகையை சிறுப் பிராயத்தில் அவர்களுக்குப் புகுத்தி விட்டால் மார்க்கத்தில் ஏவப்பட்டுள்ள நற்செயல்களை சிறிது,சிறிதாக கற்றறிந்து கொள்வார்கள்.


தாய், தந்தையார் குழந்தைகளுக்கு ஏவுவது கடமை நூஹ் நபி(அலை) அவர்களின் மகனைப்போல் ஏற்றுக் கொள்ளத் தவறி வழிக்கெட்டால் அதற்கு தாய், தந்தை பொறுப்பாகி விடமுடியாது.


தொழுகையை ஏவ வேண்டும், அந்தத் தொழுகை உள்ளத்தில் பதிய இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment