Saturday 24 March 2012

இன்று உலக காசநோய் தினம் -ஒரு பார்வை ...




டி.பி. என்றழைக்கப்படும் காச நோயால் நமது நாட்டில் 19,76,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நல்வாழ்வுத் துறை துணை அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறியுள்ளார்.


காச நோயை ஒழிக்க மறுசீரமைக்கப்பட்ட திட்டம் ஒன்று நாடு முழுவதும் வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ள அமைச்சர் தினேஷ் திரிவேதி, மருத்துவத்திற்கு கட்டுப்படாத காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 98,846 பேர் என்றும் கூறி அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.

எம்.டி.ஆர்.- டி.பி (Multi-drug resistant TB) என்றழைக்கப்படும் எந்த மருந்திற்கு கட்டுப்படாத காச நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற மருந்தேதும் இல்லாத நிலைதான் உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் இந்த நோய் தாக்காமல் நம்மை காத்துக்கொள்வது எப்படி? என்ற வினாவிற்கு விடை தேடும் கட்டாயம் உள்ளது.

மைக்கோ பாக்டீரியம் டியூபர்கிலோசிஸ் (Mycobacterium tuberculosis) எனும் கிருமியால் காச நோய் ஏற்படுகிறது. இந்த நோயை ஏற்படுத்தும் கிருமியின் வடிவத்தை வைத்து டியூபர்கிள் பாசில்லஸ் (tubercle bacillus) என்றும் அறிவியல் அழைக்கும் இந்த கிருமி, தாக்கும் போது உடலின் பல உறுப்புகள் பாதிப்பிற்குள்ளாகலாம் என்றும், ஆனால் இது நுரையீரலையே அதிகம் பாதிக்கிறது என்றும் மருத்துவம் கூறுகிறது.

நுரையீரலில் சென்று தங்கும் காச நோய் கிருமி, வேகமான பெருகுவதால் காய்ச்சலும், நெஞ்சு வலியும், இரத்தம் வெளிவரும் இருமலும், தொடர்ந்து இருமல் இருப்பதும் அறிகுறிகள் என்று கூறப்படுகிறது. ஆனால், இது அவ்வளவு சாதாரணமாக வலிமை பெறுவதில்லை என்று மருத்துவம் கூறுகிறது. ஒருவருடைய உடலின் எதிர்ப்பு சக்தியை (immune power) பொறுத்தே இந்நோய் வலிமை பெறுகிறது. காச நோய் கிருமி உடலிற்குள் வந்ததமும் பல்கிப் பெருகுவதில்லை. அது பல ஆண்டுகள் மறைவாகவே (latent), அதாவது எந்த அறிகுறியும் காட்டாமல் இருக்கும். உடல் எதிர்ப்பு சக்தி குறையும்போதுதான் அது தனது தாக்குதலை தீவிரப்படுத்துகிறது. அப்போதுதான் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஏற்படும்.

நுரையீரல் மட்டுமின்றி, காச நோய் முற்றும்போது அது எலும்பு, சிறுநீரங்கங்கள், முதுகுத் தண்டையும், முளையையும் இணைக்கும் நரம்பு மண்டலத்தையும் தாக்கவல்லது என்று மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது. சாதாரணமாக ஒருவர் காச நோய்க் கிருமியால் தாக்கப்பட்டிருந்தாலும், அது முற்றாத நிலையில் அது மற்றவரை பாதிப்பதில்லை. ஆனால் மேற்கண்ட அறிகுறிகள் வெளிப்படும் நிலையில் அது தொற்று நோயாகிறது. இதனை ஆக்டிவ் டிபி என்றழைக்கிறது மருத்துவம். இது உடலில் உள்ளிருந்தே உடற்பாகங்களை அழிக்க வல்லதாகையால் இதனை உடல் திண்ணும் நோய் என்றும் அயல் நாடுகளில் அழைக்கின்றனர். 

காச நோய் இந்தியாவில் சற்றேறக்குறைய 20 இலட்சம் பேரை பாதித்துள்ளது என்பது சாதாரணமானது அல்ல. உலகில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில்தான் உள்ளனர் என்று மற்றொரு புள்ளி விவரம் கூறுகிறது. அது மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் காச நோய்க்கு 20 இலட்சம் பேர் பலியாகின்றனர் என்கிற புள்ளி விவரம் நம்மை மிரட்டுவதாக உள்ளது.

காச நோயைக் குணப்படுத்துவதற்கு புதிய தடுப்பூசியொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காச நோய் ஏற்படுவதற்கு முன்னரும், காச நோய் ஏற்பட்டதன் பின்னரும் இந்த தடுப்பூசியைப் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க் விஞ்ஞானிகளினால் இந்த மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
 
 
காச உலகின் பிரதான நோய்களில் ஒன்றாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. புதிய தடுப்பூசி மிருகங்களுக்கு ஏற்றப்பட்டு வெற்றிகரமாக பரீட்சீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காச நோய்;த் தொற்றிய சிலருக்கு மட்டுமே நோய் அறிகுறி உடனடியாக வெளி;ப்படும் எனவும், அநேகருக்கு நீண்ட நாட்களின் பின்னரே உடலில் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 
மனிதர்களுக்கு இந்த தடுப்பூசி வெற்றிகரமாக பரீட்சீக்கப்பட்டால் எதிர்காலத்தில் காச நோயை கட்டுப்படுத்தக் கூடிய சூழ்நிலை உருவாகும் என குறிப்பிடப்படுகிறது.




நன்றி : தமிழ் வெப்துனியா .காம்

No comments:

Post a Comment