Tuesday 27 March 2012

ஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!



 
சென்னை: தமிழ்நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து, இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு பெற்றுக் கொள்ள விருக்கிறது.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் மற்றும் விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.

பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், பன்னாட்டு பாஸ் போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். மனுதாரர்களின் பாஸ்போர்ட்டுகள் 31.3.2013 வரையில் செல்லத்தக்கதாக இருக்கவேண்டும். ஹஜ் பயணம் தொடர்பான முழுமையான விவரங்களுக்கு வழிமுறைகள் மற்றும் கையேட்டைப் படித்தும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழு விற்கான நடப்புக்கணக்கு எண்.32175017712-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் சுய கையொப்பமிட்ட பாஸ்போர்ட் நகலினை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 16.04.2012-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


ஹஜ் பயணம் செல்பவர்கள் வசதிக்காக, சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி செந்தில் பாண்டியன் ஏற்பாட்டில், சிறப்பு பாஸ்போர்ட் முகாம் சென்னையில் நேற்று நடந்தது.

தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஹஜ் பயணம் செல்பவர்களின் வசதிக்காக, ஒரே இடத்தில் பாஸ்போர்ட் எடுப்பதற்கு வசதியாக, சென்னையில் சிறப்பு பாஸ்போர்ட் முகாம், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி செந்தில் பாண்டியன் செய்திருந்தார். இந்த முகாமை தொடங்கிவைத்து, பாஸ்போர்ட் அதிகாரி செந்தில் பாண்டியன் பேசும்போது கூறியதாவது:

ஹஜ் பயணம் செல்பவர்களின் வசதிக்காக, இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக சனிக்கிழமை பாஸ்போர்ட் அலுவலகம் விடுமுறை என்றபோதிலும், ஹஜ் புனித பயணம் செல்பவர்களின் வசதிக்காக, இன்று இந்த முகாம் நடத்தப்படுகிறது. ஹஜ் பயணம் செல்வோர் அதிக ஆர்வத்துடன் வந்துள்ளதால், 
31ந் தேதி(சனிக்கிழமை)யும் இதுபோன்று சிறப்பு முகாம் நடைபெறும். இது அல்லாமல், சாலிகிராமம் பாஸ்போர்ட் அலுவலகத்தில், 31ந் தேதி வரையில், தினசரி மிகக்குறைந்த அளவில் பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்ப மனுக்கள் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு செந்தில் பாண்டியன் கூறினார்.

நன்றி : தினத்தந்தி.

No comments:

Post a Comment