Sunday 25 December 2011

இஸ்லாம் காதல் திருமணத்தை அனுமதிக்கின்றதா? ஒரு இஸ்லாமிய பார்வை..

ஆண்களும் பெண்களும் இரண்டற கலந்து - அதிலும் பெண்கள் கவர்ச்சி மிகு ஆடைகளை உடுத்திக் கொண்டு உலவும் - சமூகங்களில் வாழக் கூடிய முஸ்லிம்கள் இறை நம்பிக்கையும் கட்டுப்பாடும் நிறைந்தவர்களாக வாழ வேண்டும். இதில் இடற்பாடோ குறைப்பாடோ ஏற்படும் போது 'இத்தகைய' காதலும்? வரும். காதலைக் கடந்த நிலைகளும் வரும்.

கால மாற்றங்களால் காதலும் மாறிப்போய் விட்டதை நாம் சொல்லி்த் தெரிய வேண்டியதில்லை. கணடதும் காதல் என்பதும், காதலின் அர்த்தம் கலவிக்கு இடம் தேடுவதுதான் என்பதும் இன்றைய பெரும்பாலான காதல்களின் பொதுவிதியாகி போய் விட்டது.

உலகெங்கும் அங்கீகரிக்க்ப்பட்டு விட்ட ஒரு திறந்த நிலை விபச்சார நாளுக்கு 'காதலர்தினம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த நாளுக்காக திரையரங்குகளும், ஹோட்டல் ரூம்களும், பார்க், கடற்கரையின் ஒதுங்குப்புறங்களும், பிறரின் தொந்தரவு இல்லாத ஒதுங்குப்புறங்களும் காதலரர்களால் 'புக்' பதிவு செய்யப்படுகின்றன.

டிஸ்கோதேக்கள், பார்கள், கிளப்கள் அன்றைய தினம் நிறைந்து வழியும். விடிய விடிய குடி கூத்து கும்மாளம் என்று பொழுது நகரும். அன்றய தினம் இங்கெல்லாம் சென்று தேடிப்பார்த்தால் வந்துள்ள அவ்வளவு பேருமே 'காதலர்களாக?ஸ இருப்பார்கள்.



அழகுப் பெண்ணின் தாயார் என்றால் அத்தையாக்கிக் கொள்ளும் காதலையும், பாவாடை தாவணி கிடைக்கலைன்னா சுடிதார் பொண்ணை லவ் பண்ண தூண்டும் காதலையும் திரைப்படங்கள் கற்றுக் கொடுக்கின்றன. திரைப்படங்கள் சொல்லும் காதல்கள்தான் உண்மையான காதல் இலக்கணம் என்றே இன்றையக் காதலர்கள் நம்புகிறார்கள். அதுவே அவர்களின் காதல் உணர்வாக இருக்கின்றது. அதன் விளைவுதான் யார் யாரை வேண்டுமானாலும் 'லவ்' பண்ணலாம் என்ற நிலைக்கு இளைஞர்களையும், இளைஞிகளையும் தள்ளுகின்றது.


இஸ்லாம் காதலுக்கு எதிரானதல்ல. காதல் என்றால் என்னவென்று தீர்மானிப்பதில் இஸ்லாம் வேறுபடுகின்றது.



திருமண வாழ்க்கை என்பது சந்தோஷ்ப்பதற்குதான். சந்தோஷம் வேண்டுமானால் மனதிற்கு பிடித்த துணை வேண்டும். அதனால் தான் 'மன விருப்பமான' திருமணங்களையே இஸ்லாம் அங்கீகரிக்கின்றது. فَانكِحُواْ مَا طَابَ لَكُم (உங்களுக்கு பிடித்தமானவர்களை திருமணம் செய்துக் கொள்ளுங்கள், அல்குர்ஆன் 4:3) என்ற உரிமையையே இஸ்லாம் வழங்குகின்றது.

பிடித்தமானவர்கள் என்று இறைவன் சொல்லி இருந்தாலும், பிடித்தமானவர்களாக யார் இருக்க வேண்டும் என்பதற்கும் வழிகாட்டுகிறான். திருமண வாழ்க்கை என்பது சந்தை வாழ்க்கையாக, கூடி களையக் கூடிய வாழ்க்கையாக ஆகிவிடக் கூடாது. அது பாரம்பரியத்தையும் பிறருக்கு நல்லப் பாடத்தையும் உணர்த்த வேண்டும். அதற்கு தேவையான, பிடித்தமான பெண் வேண்டுமானால் இறைவன் சொல்லும் இலக்கணத்துக்குரியவர்களே பொருத்தமாக அமைவார்கள்.
وَلاَ تَنكِحُواْ الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ (இறைவனுக்கு இணைத்துணை, மனைவி மக்கள் என்று நம்பி) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் ஓரிறை நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள், இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட இறை நம்பிக்கையுள்ள ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். (அல் குர்ஆன் 2:221)

இந்த வசனத்திலிருந்து பிற மதப்பெண்களால் நாம் கவரப்படுவோம் என்பது விளங்குகின்றது. (சகோதரர் ..... போன்றவர்களின் காதல் சொல்லும் பாடம்). ஆனாலும் ஒரு முஃமின் அந்தக் கவர்ச்சியில் மயங்கி தன்னை அந்த நிலைக்கு ஆட்படுத்திக் கொள்ளக் கூடாது.

அவர்கள் ஓரிறைக் கொள்கையால் கவரப்பட்டு மனமாற்றம் அடைந்தால் அப்போதுதான் அவர்களுடனான திருமண உடன்படிக்கையை இஸ்லாம் அங்கீகரிக்கும். அதுவரை அவர்கள் எத்துனைப் பேரழகியாக, படித்தவர்களாக, பணக்கார்களாக, பண்புள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் முஸ்லிம்களுடனான வாழ்க்கைத் துணைக்கு பொருந்தாதவர்கள் என்பதை முஸ்லிம் இளைஞர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

விழியில்விழுந்து இதயம் நுழையும் காதல்  உயிரில் கலந்த உறவாக ஆக வேண்டுமானால் அது உயர்வான இறைவனின் வழிகாட்டுதலில் வந்தால்தான் நடக்கும்!!


 சில இஸ்லாமிய  சகோதரர்ளுக்கு தனிப்பட்ட ஆலோசனை. 
நீங்கள் விரும்பும் பெண்களுக்கு இஸ்லாத்தைப் பற்றியும், ஓரிறைக் கொள்கைப் பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். அந்தக் கடமை நமக்கு உண்டு. இறைவன் நாடி அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் இஸ்லாம் சொல்லும் வரைமுறையில் நின்று பழகி திருமணம் செய்துக் கொள்ளுங்கள்.
காதல் - ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை நாம் காதல் என்கிறோம். அது உறவுமுறைக்கேற்ப பல பெயர்களில் காதல் அன்பு பாசம் என்று பலவாறு தமிழிலே அழைக்கப்படுகிறது. ஆனால் ஆங்கிலத்திலே அனைத்திற்குமே LOVE என்றே குறிப்பிடுகின்றோம்.காதல் என்றவுடன் நமக்கெல்லாம் ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு, ஷாஜகான் மும்தாஜ்தான் நினைவுக்கு வருவார்க்ள்.

காதலர்களைப் பற்றி சொல்லும்போது கண்ணதாசன் ஒரு கவிதயிலே மிக அழகாகச் சொல்லுவான் "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும். நான் கானும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காணும் பொருள்யாவும் நானாக வேண்டும்". ஆக காதல் என்பது ஒருவர் மற்றவருக்காக வாழ்வது காதலன் காதலிக்காக, கணவன் மனைவிக்காக ஆனால் இவ்வுலகைப் பொறுத்தவரையில் தாயின் அன்பே அனைத்தையும்விட சிறந்ததென்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இருக்கவே முடியாது.
ஆனால் இந்த காதல் அன்பு பாசம் எல்லாம் உண்மையா நிரந்தரமானதா? நிச்சயமாக இல்லை. தன்னைப்பற்றி யோசிக்காத எந்த காதலனும் காதலிக்கு சலித்துத்தான்போவான். பல வருடமாக சம்பாதிக்காத எந்த ஆசைக் கணவனும் மனைவிக்கு வெறுப்பாகித்தான்போவான். தன் பேச்சை கேட்காத எந்தப்பிள்ளையும் தாய்க்கு தூரமாகித்தான் போவான்.

மறைந்துபோன கணவனை நினைத்து நினைத்து உருகும் மனைவியிடம் அல்லது தனது பிள்ளை இறந்துபோன துக்கத்தில் இருக்கும் தாயிடம் மண்ணறையிலிருந்து உன் கணவனை உன் பிள்ளையை எழுந்து வர சொல்கிறேன் என்றால் ஒப்புக்கொள்வார்களா?நிச்சயமாக பயப்படவே செய்வார்கள்.இப்பொழுது சொல்லுங்கள் இது உண்மையான பாசமா அன்பா?

அல்லாஹ் தன் இறுதி நபியான முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீது அளவில்லாத காதல் கொண்டுள்ளான். அதன் காரணமகவே அவன் நபி அவர்களுக்கு முஹம்மது (புகழுக்குறியவர்) என்று பெயர் சூட்டி அழகு பார்த்தான். தனது திருமறையிலே எந்தயிடத்திலும் முஹம்மது என்று கூப்பிடாமல் நபியே ஹபீபே என்று தனது நபியை அழைக்கின்றான். இது பலருக்கு குழப்பமாகவும் இருக்கலாம். இறைவன் எத்தனையோ ஜீவராசிகளை படைத்தான் படைத்துக்கொண்டே இருக்கின்றான். அப்படி இருக்க முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது அப்படி என்ன காதல் என்று.


ஒரு தாய் தன் பிள்ளையை பெற்றெடுக்கிறாள் அதிலும் இது 5வது குழந்தை. தான் பெற்றெடுத்த குழந்தை அதுவும் 5வது குழந்தை. ஆனால் அந்த தாய்க்கு கடைசி குழந்தையின் மேல் ஒரு தனி பிரியம் பாசம். அது போல அல்லாஹ் எத்தனையோ நபிமார்களையும் மனிதர்களையும் படைத்திருந்தாலும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் படைத்து அவர்கள் மீது தனி அன்பு செலுத்துகின்றான் அருள் புரிகின்றான். இதனை பின்வரும் இறைவசனம் நமக்கு தெளிவாக்குகின்றது
.

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِي


இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.33:56.



மேலும் பல வரலாற்று சம்பவங்களின் மூலம் அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது வைத்திருக்கின்ற அன்பை நாம் புரிந்து கொள்ளலாம். ஆதம் (அலை) அவர்கள் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 200 ஆண்டுகள் உருண்டோடிய பிறகு யாஅல்லாஹ் முஹம்மதின் பொருட்டால் என் பாவங்களை மன்னித்த்ருள்வாயாக என்று கேட்க இறைவன் ஆதம் (அலை) அவர்களை மன்னித்தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.


மிஹ்ராஜ் பயணத்திலே நமக்கெல்லாம் 50 வக்து தொழுகையை கடமையாக்கியபொழுது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வேண்டுகோளுக்கினங்க இறைவன் அதை 5 வக்து தொழுகையாக்கியதை யாரேனும் மறுக்க முடியுமா.

முஹம்மது நபி (ஸல்) அவர்களை தாயிப் நகர மக்கள் கல்லால் அடித்தபொழுது மலக்குகள் இறைவா நீ ஆணையிடு உன் ஹபீபை துன்புறுத்தியவர்களை அழித்துவிடுகிறோம் என்று சொல்லியபொழுது. முஹம்மது நபி (ஸல்) அவர்களிடமே கேளுங்கள் என்று இறைவன் சொல்ல நபி அவர்கள் அதை மறுத்துவிட்டார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

சற்று சிந்தித்துப்பாருங்கள் உங்கள் தாயை ஒருவன் திட்டிவிடுகிறான் நீங்கள் உங்கள் தாயிடம் கேட்டுவிட்டா அவனை அடிப்பீர்கள். அப்படி செய்வது முறையா? ஆனால் நாம் நமது தாயின்மேல் வைத்திருக்கும் பாசத்தைவிட பலமடங்கு அதிக பாசம் கொண்டுள்ள இறைவன் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் கேட்கச்சொல்கின்றான். ஏனென்றால் அல்லாஹ்விற்கு தெரியும் அந்த தாயிப் நகர மக்களை அவன் அழித்துவிட்டால் தன்னுடைய ஹபீப் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அதிகம் அதிகம் துயரப்படுவார்கள் என்று.

இந்த உலகையெல்லாம் படைத்து பரிபாலிக்கின்ற வல்ல அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது அருள் புரிய நமது நாயகம் (ஸல்) அவர்களோ உம்மத்துக்களாகிய நம்மீது அன்பு செலுத்தக்கூடியவர்களாய் இருக்கிறார்கள்.

ஒருமுறை ஸஹாபி ஒருவர் மரண தருவாயிலே இருக்கிறார். தனது வாயால் திருக்கலிமா மொழியமுடியவில்லை. நம்மைப்போன்ற சாதாரண மனிதரல்ல அவர். என் தோழர்களில் எவரேனும் ஒருவரை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் நீங்கள் நேர்வழி பெற்றுவிடுவீர்கள் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களால் சொல்லப்பட்ட ஸஹாபிக்கு ம்ரண தருவாயிலே கலிமா வரவில்லை. நபிகள் நாயகம் விசாரிக்கிறார்கள் அந்த ஸஹாபியின் தாயார் அவர் மீது கோபமாயிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. அந்த தாயிடத்திலே மன்னிக்க வேண்டுகிறார்கள் ஆனால் அவர்களோ மறுத்துவிடுகிறார்கள்.


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சிறு நாடகம் நடத்துகிறார்கள் எப்படியும் நரக நெருப்பிலே எரியப்போகிற உடம்புதான் இது. மரக்கட்டைகளைக் கொண்டு வாருங்கள் இப்பொழுதே எரித்துவிடலாம் என்று சொல்ல அந்த தாய் வேண்டாமென்று பதறி தனது மகனை மன்னிக்க அந்த ஸஹாபி கலிமா சொல்லியவாறு மரணமடைகிறார்கள்.சற்று சிந்தித்துப்பாருங்கள் பெற்ற தாய்க்கு தன் மகன் நரக நெருப்பிலே எரியப்படுவதிலே வருத்தமில்லை ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அன்பு ஸஹாபியை நரகத்தைவிட்டும் காப்பாற்றுகிறது.

இதுபோலத்தான் நாளை மறுமையிலே நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் மறந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலையில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நமக்காக நாளை மன்றாடி நம்மை நரகத்தைவிட்டு காப்பாற்றுவார்களே. யாஅல்லாஹ் என்னுடைய உம்மத்திலே கடைசி நபர் நரகத்தைவிட்டு வெளியேறாதவரை நான் சுவர்க்கம் செல்ல மாட்டேன் என்று சொல்லி மன்றாடுவார்களே அந்த அன்பை நாம் என்றாவது நினைத்துப்பார்திருக்கிறோமா?

மூஸா (அலை) அவர்களின் உயிர் வாங்கப்படுகிறது. மூஸா (அலை) பின்பு இறைவனிடத்திலே முறையிடுகிறார்கள் யாஅல்லாஹ் உனது மலக்கு உயிர் வாங்கும்போது என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கிவிட்டார் என்று. ஒரு சிட்டுக்குருவி வெந்நீரிலே விழுந்து அதனால் வெந்நீரைவிட்டு வெளியே வரவும் முடியவில்லை வெந்நீரிலே உயிர் பிரியவும் மறுக்கிறது அப்படி ஒரு துன்பத்தை மரண தருவாயிலே அனுபவித்ததாக சொல்கிறார்கள்.

அதே மரண தருவாயிலே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இதுபோல துன்பத்தை அனுபவிக்க இறைவனிடத்திலே இறைவா மரணம் இவ்வளவு துன்பத்தை தருமா. எனது உம்மத்திற்கு இந்த வேதனையைத் தந்துவிடாதே அவர்கள் அத்தனைபேரின் வேதனையையும் எனக்கு தந்துவிடு அவர்களுக்கு தந்துவிடாதே என்று இறைவனிடத்திலே கேட்டார்களே அந்த அன்பை என்னவென்று சொல்வது.

இறைவா உனது ஹபீப் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு வைக்கும் பாக்கியத்தை எங்களுக்கு தருவாயாக. முஹம்மது நபி (ஸல்) அவர்களை பின்பற்றி வாழக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தருவாயாக. நாளை மறுமையிலே முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சிபாரிசு எங்களுக்கு கிடைக்க அருள் புரிவாயாக.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ .தையுபா  அஜ்மல்.

No comments:

Post a Comment