Wednesday 7 September 2011

தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டே போகிறது...



தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளாகவே ஏறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பலருடைய மனதில் இது இறங்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்துக் கொண்டுதானிருக்கிறது. தங்கத்தைப் பற்றிய சில கட்டுரைகளை அவ்வபோது பதிவிட்டுள்ளேன்.
இந்த கேள்வி பல மக்களிடையே தோன்றிக்கொண்டிருக்கிறது தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டே போகிறது இதன் போக்கு எப்படி இருக்கும் எங்கு முடியும் என்று யாருக்குமே தெரியாமல் மக்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். தங்க மார்கெட்டில் பணிப்புரிவதால் எனக்கு கிடைத்த தகவலின்படி சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் உங்களுக்கு பிரயோஜமாக இருக்கலாம்.

சென்ற ஆண்டு தங்கத்தில் முதலீடு சம்பந்தப்பட்ட தொடர் கட்டுரை எழுதியிருந்தேன் அந்த சமயம் தங்கத்தின் போக்கை சுட்டிக்காட்டி அதில் முதலீடு செய்யலாம் என பரிந்துரையும் செய்திருந்தேன் அதில் யாரேனும் முதலீடு செய்திருந்தார்களேயானால் இன்று அவர்கள் நூறு சதவீதம் லாபத்தை ஈட்டி இருப்பார்கள்.

2008 நவம்பரில் அவுன்ஸ்(31.10 கிராம்) 715 டாலராக விலை குறைந்திருந்தது (இந்திய ரூபாய் 1 கிராம் 1015 சுத்தமான் 24 கேரட் தங்கம்)அச்சமயத்தில் துபாய் தங்கமார்க்கெட்டில் தங்ககட்டிகள் (டிடி பார் 116.64 கிராம்) 24கேரட் தங்கம் ஸ்டாக் இல்லாமல் இருந்தது. பலர் என்னைத் தொடர்புக் கொண்டு வாங்கி கேட்டார்கள் அப்படி கேட்டவர்களுக்கு வாங்கிக் கொடுத்துள்ளேன். இன்று அதை விற்காமல் வைத்திருப்பவர்கள் இன்னும் ஏறுமா? என்று கேட்கிறார்கள்.

முதலீடு என்ற பெயரில் தங்கத்தை வாங்கி வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு பணம் எப்பொழுது தேவைப்படுகிறதோ அதுவரையில் வைத்திருக்கலாம் தங்கத்தின் தேவை அதிகமாகவே இருக்கிறது ஆனால் தங்கசுரங்கத்தில் தேவைக்கேற்ற தங்கம் கிடைக்கவில்லை. ஆப்பிரிக்காவில் சில சுரங்கங்களை மூடிவிட்டதாக செய்திகள் சொல்கின்றன.

இன்னும் இத்தனை ஆண்டுகளாக சீனா தங்கத்தை ஆன்லைனில் வர்த்தகம் புரியாமல் வைத்திருந்தது ஆனால் சென்ற இரு மாதங்களுக்கு முன் ஆன்லைன் தங்க வர்த்தகத்தை சீனா ஆரம்பித்துள்ளது அதனால் தங்கத்தின் விலை இன்னும் கூடும் என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.

பெரிய பணமுதலைகள் தங்களின் முதலீடுகளை அவ்வபோது டாலருக்கும் தங்கத்திற்கும் ஈரோவிற்குமாக மாற்றி மாற்றி சந்தையின் போக்கை அவர்களின் இஸ்டத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது தங்கத்தின் முதலீடுதான் பாதுகாப்பானது என்று பெரிய முதலைகள் முதலீடுகள் செய்துக்கொண்டே செல்வதால் இன்னும் சில நாட்களுக்கு தங்கம் மேலே ஏறிக்கொண்டே இருக்கும்.

சென்ற பிப்ரவரி மாதத்தில் தங்கசப்ளையர் கூறினார் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் அவுன்ஸ் விலை 2000 டாலரைத் தொடும் என்றார். எனது நிறுவனத்தில் பலர் அவருடைய வாதத்தை ஏற்கவில்லை ஆனால் இன்று கிட்டத்தட்ட அவர் சொன்னது போலவே 1500 டாலரைத் தொட்டுவிடும் தூரத்தில் தான் இருக்கிறது.

தங்க சந்தையை பொருத்தவரையில் கிட்டதட்ட பங்குசந்தையை போலவே இயங்கிறது இந்த சந்தையும் அவ்வபோது ஏறுவதும் இறங்குவதும்மாகவே இருக்கிறது இது சர்கில்முறைதான்.

ஏழு ஆண்டுக்கு ஒருமுறை தங்கத்தின் விலை கடுமையாக சரியும் என்று ஒரு நிபுணர் கூறுகிறார்.அப்படி பார்த்தால் 2003 –ல் ஒரு அவுன்சின் விலை 323 டாலராக இருந்தது இன்று 1370 டாலராக இருக்கிறது சரிவு என்பது பெரிய அளவில் இல்லை என்றாலும் 2008 நவம்பரில் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டது உண்மையே.

இன்று காலை எனது நண்பர் தங்கத்தில் மூன்று ஆண்டுக்கு முதலீடு செய்யப்போவதாக என்னிடம் ஆலோசனைக் கேட்டார்.ஓ...தராளமாக முதலீடு செய்யுங்கள் என்றேன். 2007- ல் தங்கத்தின் விலை அவுன்ஸ் 650 டாலர் அன்று மூன்று ஆண்டுக்கு முதலீடு செய்தவர்களுக்கு இன்று 110 சதவீதம் லாபத்தை தங்கம் தந்திருக்கிறது.

ஒரு சிறிய சரிவு வரும் சமயத்தில் தங்கம் வாங்கக்கூடியவர்கள் உள்ளே நுழையலாம். துபாயில் ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 155 திரஹம் இன்று விற்பனை ஆகிறது இது தீபாவளிக்குள் 160 திரஹம் வரையில் செல்லலாம் என நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

தங்கத்தில் முதலீடாக செய்யக்கூடியவர்கள் எப்போதுமே ஆபரண நகைகளை வாங்கி முதலீடு செய்யவேண்டாம் அப்படி செய்தால் நஷ்டம் ஏற்படும் அதாவது நகைகள் வாங்கும்போது அதற்கு செய்கூலி சேதாரம் சேர்க்கப்படும் அதை மீண்டும் விற்கும்போது செய்கூலி சேதாரம் கழிக்கப்படும் அதனால் உங்கள் முதலீட்டில் கிடைக்ககூடிய லாபம் செய்கூலியிலும் சேதாரத்திலும் போய்விடும் ஆதலால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் 24 கேரட் பிஸ்கட் என்று சொல்லப்படிகின்ற டிடிபார்(டென் தோலா பார் 116.64 கிராம் ) அதை வாங்கி வைத்துக்கொள்ளலாம் தற்போது இந்திய ரூபாயில் அதன் மதிப்பு இரண்டு லட்சத்திற்கும் அதிகம் என்பதினால் இவ்வளவு முடியாதவர்கள் 4 கிராம் அல்லது 8 கிராம் தங்க நாணயங்களை வாங்கி சேமிக்கலாம்.

ஆதலால் தங்கத்தின் விலை ஏறுமா? இறங்குமா? என்று யோசிப்பதைவிட தேவை உடையவர்கள் வாங்குவதே நலன்.!

தங்கத்தின் ஏற்றத்தைப் பற்றியும், தேவை உள்ளவர்கள், சேமிப்பவர்கள், யோசிக்காமல் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று நிபுணர்களின் ஆலோசனையும் குறிப்பிட்டிருந்தேன். அதன்படி யாராவது வாங்கி வைத்திருந்தால் இன்று அவர்களுக்கு 30% லாபத்தை தங்கம் தந்திருக்கும்.



இந்த ஒரு வாரக்காலத்தில் தங்கத்தின் போக்கு வரலாறு காணத அளவில் தாறுமாறாக விலை ஏறிக் கொண்டிருக்கிறது. இப்படி தாறுமாறாக விலை ஏறுவதின் காரணம் என்ன? என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம்.

எஸ் அண்டு பி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனம் அமெரிக்காவின் கடன் தகுதிக்கான ஏஏஏ குறியீட்டை ஏஏ+ ஆக குறைத்தது. அமெரிக்காவின் கடன் பெறும் தகுதி குறைந்ததால் அதன் தாக்கம் தங்கத்தின் மீது பாய்ந்துள்ளது.

டாலரை நம்பிக்கொண்டிருந்த நாடுகள், தங்களை காப்பாற்றிக் கொள்ள தங்கத்தை நம்புகிறார்கள். இதில் சீனா தங்கம் சேமிப்பில் கடந்த சில ஆண்டுகளாக அதிதீவிரம் காட்டிவருகிறது, தற்போது சீனாவிடம் தங்கத்தின் கையிருப்பு 1051.10 டன்னாக இருக்கிறது.

எத்தனை இடருகள் அமெரிக்காவிற்கு வந்தாலும் அதைப் பற்றி அது கவலைப்பட போவதில்லை; காரணம் உலகில் அதிகமாக தங்கம் வைத்திருக்கும் நாடு அமெரிக்கா என பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பதே காரணம். இறுதி ஆயுதமாக அமெரிக்கா நாட்டை காப்பாற்ற தங்கத்தில் கை வைக்கலாம் அமெரிக்காவிடம் உள்ள தங்கத்தின் இருப்பு 8133.5 டன்.

இரண்டாவது இடத்தில் ஜெர்மனியும் 3406.8 டன், மூன்றாவது இடத்தில் இத்தாலி 3005.3 டன், நான்காவது இடத்தில் பிரான்ஸ் 2435.4 டன் தங்கம் வைத்திருக்கிறது.

கடந்த 2009ம் ஆண்டு நவம்பரில் 200 டன் தங்கத்தை நம் பாரத இந்தியா வாங்கியது. இதையடுத்து ரிசர்வ் வங்கி வசமுள்ள தங்கம் கையிருப்பு 558 டன்னாக உயர்ந்து நம்இந்தியா உலக தங்கம் தர வரிசையில் பத்தாவது இடத்தில் இருக்கிறது.

இந்தியாவை பொறுத்த வரை தனது அன்னிய பரிமாற்ற இருப்பை, பிற நாடுகளில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளிலிருந்து பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது.

முதலாவதாக தனது அன்னிய செலாவணி இருப்பில் தங்கத்தின் அளவை கூட்டுதல், டாலர் தவிர யுரோ, ஏன் போன்ற பிற நாடு செலாவணிகளையும் தேவையான அளவிற்கு பரந்துபட்ட அளவில் வைத்திருத்தல் போன்றவைகளை
செய்து தனது அந்நிய செலாவணியின் மதிப்பை பாதுகாத்து கொள்கிறது

அமெரிக்கா டாலரை உலக கரன்சியாக அனைத்து நாடுகளும் பயன்பாட்டில் வைத்திருக்கிறது. முதல்முறையாக அமரிக்காவின் கடன் பெறும் தகுதி தரம் குறைந்ததால் டாலரின் மதிப்பும் குறைந்து விட்டது வெகுவிரைவில் உலக கரன்சியிலிருந்து டாலர் நீக்கப்படலாம் அதன் முதல் குரலை சீனாவும் அதற்கு ஆதரவாக பிலிப்பைனும் கொடுத்திருக்கிறது.

இந்த இறுக்கமான சூழலில் கரன்சியிலிருந்து தங்கத்திற்கு நாடுகள் மட்டுமல்ல நாட்டின் கடைநிலை மக்களும் தங்கள் சேமிப்பு பாதுகாப்பனது தங்கமே எனக் கருதி தங்கத்தின் மீது செலுத்த தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக தங்கம் கடந்த ஒருவாரத்தில் மட்டும் ஒருநாளில் 50 டாலரிலிருந்து 80 டாலர் வரை விலை ஏறிக்கொண்டிருக்கிறது.

உலக பங்குசந்தைகள் சரிந்துக் கொண்டிருக்கும் நிலையில் தங்கம் மட்டும் ராக்கெட் வேகத்தில் மேலே சென்றுக் கொண்டிருக்கிறது. இது 2013 வரையில் செல்லும் என்பது பல நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது.

இந்திய பங்குசந்தையில் கோல்டு ஈடிஎப் என்ற பெயரில் ஆன்லைன் தங்கம் வர்த்தகமாகிறது. டிமேட் அக்கோண்ட் வைத்திருப்பவர்கள் தங்கத்தை தங்கமாக அல்ல அதன் ஒருகிராம் விலையில் வாங்கி டிமேட் அக்கவுண்டில் வைத்துக்கொள்ளலாம்.

அவ்வபோது தங்கத்தின் விலையில் சிறு சிறு வீழ்ச்சியும் நிகழும் அந்த தருணங்களில் முதலீடு செய்ய எண்ணக்கூடியவர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம்…நம் நாட்டில் தங்கத்திற்கானதேவை, அடுத்த பத்தாண்டுகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து 1,200 டன்னாக அதிகரிக்கும் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ)தெரிவித்துள்ளது ஆதலால் தற்போதைக்கு தடையில்லாமல் தாறுமாறாக தங்கம் ஏறிக் கொண்டுதானிருக்கும்.

No comments:

Post a Comment