Monday 21 March 2011

மாமல்லபுரம் (Mamallapuram )- ஒரு பார்வை...


என்னை நீங்க டூரிஸ்ட் கைடாக நினைத்து கொள்ளுங்கள் .....

வணக்கம்! மாமல்லபுரத்தை எங்களுக்குச் சுற்றிக் காமிக்க முடியுமா?


நிச்சயமாக.  அதுதான் எனது வேலையே.  வாங்க போகலாம்.
நீங்க எங்கிருந்து வர்றீங்க?


மதுரைலேந்து.  பசங்களுக்கெல்லாம் லீவு விட்டதால ஊரைச் சுத்தலாமுன்னு கெளம்பிட்டோம்.


சரி மாமல்லபுரத்தைப் பற்றி தெரிஞ்சுக்குவோம். காஞ்சிபுரம் மாவட்டத்துல இருக்கிற மாமல்லபுரத்துக்கு மகாபலிபுரமுன்னு இன்னொரு பேரும் இருக்கு. மாமல்லபுரம் ஏழாம் நூற்றாண்டில் பல்லவ நாட்டோட முக்கியமான துறைமுகமாக இருந்தது. இந்த இடத்துக்கு பல்லவ மன்னன் மாமல்லாவின் பெயரைக்கொண்டு பெயர் வைக்கப்பட்டதாக இன்று வரை நம்பப் படுகிறது. இந்த இடத்துல இருக்கிற பல சிற்பங்கள் ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை நிறுவப்பட்டது.


இந்த இடத்துக்கு வேற என்ன சிறப்பெல்லாம் இருக்கு?


இந்த இடத்தை ஐ.நா சபையோட UNESCO உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிச்சிருக்கு. மேலும் இந்த இடம் தமிழகத்தோட மிக பிரபலமான சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது. இந்த இடத்தின் மூலம் தமிழகத்தின் வரலாற்றையும் சிற்பக்கலையையும் பாரம்பரியத்தையும் தெரிஞ்சுக்கிறதுக்காக பல வெளிநாட்டுப் பயணிகளும் வர்ராங்க.


மாமல்லபுரத்தில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க.


மாமல்லபுரத்தின் கடற்கரை கோயில்,  குகைக் கோவில்கள், அர்சுணன் தபசு செய்யும் சிற்பம், ஐந்து ரதம், புலிக் குகை மற்றும் ஏராளமான சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றை பார்க்க போகலாம் வாங்க.


இவைதான் ஐந்து ரதம். இயற்கையான பாறையை செதுக்கி ஒரே கல்லால் ஆன கோவில்கள் தேர் போல இருப்பதால் இதற்கு ரதம் எனும் பேர் வைக்கப்பட்டது.  முதலாம் நரசிம்மவர்மன்தான் இதை உருவாக்கியவர். இந்த ஐந்து கற்கோவில்களும் பஞ்சபாண்டவ இரதங்கள் என்றும் சொல்லலாம்.


எல்லாமே ஒற்றைக் கற்களால் ஆனவையா?


இதில் நான்கு ரதங்கள் ஒரே கல்லால் செய்யப்பட்டவை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒன்று மட்டும் சில கற்களால் இணைத்து செய்யப்பட்டதுள்ளது.


அடுத்து எங்கு செல்லப் போகிறோம்?


வாங்க அர்ச்சுணன் தபசு பற்றி தெரிந்துகொள்ளலாம். பெரிய பாறையில் பல சிற்பங்களை செதுக்கி வடிவமைக்கப்பட்டதுதான் இந்த அருச்சுணன் தபசு.  முப்பது மீட்டர் உயரமும், அறுபது மீட்டர் நீளமும் இருக்கிறது. 


நல்லா பாத்தீங்கனா இதுல நாலு நிலைகள் இருப்பது தெரியும். முதல் நிலை விண்ணுலகத்தை குறிக்கிறது. இரண்டாவது விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் இடைப்பட்ட நிலையை குறிக்குது. மூண்றாவது மண்ணுலகம், நான்காவது பாதாள உலகத்தையும் உணர்த்துவதாக ஆராய்ந்தவர்கள் கூறுகிறார்கள்.


இதற்கு எப்படி அர்ச்சுணன் தபசுன்னு பேர் வைத்தார்கள்?


இதில் உள்ள ஒரு சிற்பம் ஒரு மனிதன் தவம் செய்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.  இது அர்ச்சுணன் பாசுபத அஸ்திரம் வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்ததால் இதனால் இதற்கு அருச்சுணன் தபசு என அழைக்கிறோம். சில பேர் பகீரதன் சிவனை நோக்கி தவம் இருப்பது போல் தோன்றுவதால் இதனை பகீரதன் தபசுன்னு குறிக்கிறார்க

கடற்கரைக் கோயிலுக்கு போலாம், வாங்க!

இந்த கடற்கரைக் கோயில் திராவிடக் கட்டடக் கலையை பின்பற்றி கட்டப்பட்டிருக்கு. பாருங்க கடல் அலை எவ்ளோ சீற்றத்தோட இருக்கு. இந்தக் கோயிலைச் சுற்றி கற்களால் ஆன காளை மாடுகள் கோயிலுக்கு அரண் போல இருக்கு.

சரி! இந்தக் கோயிலை யார் கட்டியது?

ஏழாம் நூற்றாண்டில் ராஜசிம்மன் என்ற மன்னன் தான் இந்தக் கோயிலைக் கட்டினார்.

மேல சொல்லுங்க!

இந்தக் கோயிலின் விமானம் மட்டும் 60 அடி உயரம் இருக்குது.

கிரேன் போன்ற இயந்திரங்களின் உதவியே இல்லாத காலத்தில எப்படிதான் கல்ல அவ்வளவு உயரத்துல தூக்கி வச்சாங்களோ!!!

ஆமா! அது பெரிய ஆச்சரியம்தான். கற்களை சாரம் கட்டி தூக்கி வச்சதா சொல்றாங்க. இந்தக் கோவில்ல சிவனும் விஷ்ணுவும் நமக்கு காட்சிதர்ராங்க. சுவர் முழுவதும் நந்தி உருவத்தை செதுக்கி இருக்காங்க. இந்தக் கோவிலோட சிறப்பே இங்கு செதுக்கப்பட்ட சிற்பங்கள்தான். சாமி கும்பிட்டது போதும்! வாங்க அடுத்த இடத்துக்கு போலாம்..

சரி, சரி அடுத்து எங்க?

வராக குகைக் கோயிலுக்கு போலாம். குகை போன்று இருப்பதால இதுக்கு குகைகோயில்னு பேர் வச்சிருக்காங்க. இந்தக் கோவிலின் உள்ளே விஷ்ணுவின் வராக அவதாரத்தை சித்தரிக்கும் வகையில் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.

மகாபலிபுரத்தில் ஒரே ஒரு குகைக்கோவில்தான் இருக்கா?

மொத்தம் 13 குகைக்கோயில்கள் இருக்கு. இந்தக் கோவில் காலத்தால் சிறப்பு வாய்ந்தது. கோனேரி மண்டபம், மஹிசாசுரமர்த்தினி குகை, வராக மண்டபம், ஆதிவராஹ திருமுர்த்தி குகை மற்றும் கிருஷ்ண மண்டபம் போன்ற பல குகைக் கோயில்கள் இருக்குது.

வாங்க மஹிசாசுர மர்த்தினி குகைக்கோயிலுக்கு போகலாம்.

இந்தக் கோயிலில் மஹிசாசுர மர்த்தினி மகிஷனை வதம் செய்யும் காட்சி ஒரு பக்கமும் பகவான் விஷ்ணு பள்ளி கொண்டிருக்கும் காட்சி இன்னொரு பக்கமும் செதுக்கப்பட்டிருக்கு. பாத்துட்டீங்களா?

நடந்து நடந்து கால் வலிக்குதுப்பா! சரி அடுத்த இடத்துக்கு போலாம்.

உங்களுக்கு வெண்ணெய்னா பிடிக்குமா?

ஏதோ கொஞ்சம் சாப்பிடுவேன்.

இதோ பாருங்க இதுதான் கிருஷ்ணரின் வெண்ணெய் உருண்டை. தள்ளுனா உருண்டுடும்னு பயப்படாதீங்க. உங்களால ஒரு துளி கூட தள்ளமுடியாது. இந்தப் கல் பாறை எந்த பிடிப்பும் இல்லாமல் நிற்கிறது. இந்த வெண்ணெயையும் கொஞ்சம் சாப்பிடுங்க.

இருங்க சார்! உருண்டையை தள்ளுற மாதிரி போட்டோ எடுத்துக்குறேன்.

எடுத்தாச்சா? வாங்க புலிக்குகைக்கு போலாம். 


புலிக்குகையா! புலினா எனக்கு பயம். நா வல்லப்பா. ஆள விடுங்க..

புலியெல்லாம் இருக்காது.. பேருதான் புலிக்குகை.

அப்படியா? அப்படின்னா போலாம். வாங்க.

இந்தக் குகை பல்லவர் கால கலாச்சார நிகழ்வுகள் நடப்பதற்காக் திறந்தவெளி அரங்கமா உருவாக்கியிருக்காங்க.  பல பழைமையான சிற்பங்களும் இங்கு இருக்கு. போய் பாத்துட்டு வாங்க.

சரி, மகாபலிபுரத்தோட பிரபலமான சுற்றுலாத் தளங்களையெல்லாம் சுத்திக் காண்பிச்சாச்சு. மகாபலிபுரம் எப்படி இருக்கு.

அருமையா இருக்கு, கற்களில் கலை நயத்தை கண்டது என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறது. எப்படியோ ஒரு வழியா பல்லவர்களோட சிற்பக்கலையையும், ரசனையையும் அறிஞ்சுக்கிட்டேன்.சுத்திக் காமிச்சதுக்கு ரொம்ப நன்றி. உங்களுக்கு எவ்ளோ பணம் குடுக்கணும்.

பணம் எல்லாம் வேண்டாம். என் நண்பன் தமிழக சுற்றுலான்னு வலைப்பதிவு எழுதுறான், 
முடிஞ்சா வலைப்பதிவை போய் பாருங்க. பிடிச்சுருந்தா அதுல பின்னூட்டம் போடுங்க.. அதுவே போதும்.

ரொம்ப நன்றி தம்பி. போயிட்டுவர்ரேன்.

என்ன மாமல்லபுரத்தைப் பற்றி தெரிந்துகொண்டீர்களா. அவர் சொன்னது போல மறக்காமல் பின்னூட்டம் போடுங்க..


குறிப்பு :  இந்த இடங்கள் அனைத்தும் மாமல்லபுரத்தில் உள்ளது. ஒவ்வொரு இடமும் மற்ற இடங்களில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது. 


எப்படி செல்வது என்றுதானே கேட்கீறீர்கள்?
1)மகாபலிபுரத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி போன்ற பல இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)அருகில் உள்ள ரயில் நிலையம் :  செங்கல்பட்டு 29 கி.மீ தொலைவில்


3)அருகில் உள்ள விமான நிலையம் : சென்னை 58 கி.மீ தொலைவில்

Tourist Office in Mamallapuram:
Kancheepuram District,
Mamallapuram - 603 104.
Ph: 04114 - 242232
.



திசம்பர் - ஜனவரி மாதங்களில் இங்கு நாட்டியத் திருவிழாவும் நடைபெறும். கிளம்புங்க மாமல்லபுரத்துக்கு...

No comments:

Post a Comment