Thursday 3 March 2011

கடலை ஏழைகளின் முந்திரியா!! ஒரு மருத்துவ பார்வை...


கடலை. பெண்பிள்ளைகளிடம் பேசும் பேச்சுக்கு கடலை என்ற பெயரை எவன் வைத்தானோ தெரியவில்லை. எங்கே சொன்னாலும் அந்த பேச்சைத் தான் நினைக்கிறார்கள். மகத்துவமான உணவான நிலக்கடலை பற்றிய நினைவு பெரும்பாலானோருக்கு வருவதில்லை. 


நிலக்கடலை என்று பொதுவாய் அழைக்கப்படும் இந்த பருப்பு வகை வேர்க்கடலை, மணிலாக்கடலை, மணிலாக்கொட்டை என்றும் அழைக்கப்படுகிறது. பராகுவே நாட்டில் முதன்முதலில் விளைவிக்கப்பட்ட இந்த தாவரம் இன்று உலக நாடுகள் அனைத்திலும் உண்ணும் உணவில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.

போர்த்துகீசியாவில் இருந்து இந்தியா வந்த வாஸ்கோ டி காமாவுடன் வந்த ஏசு சங்க பாதிரியார்கள் மூலம் இந்தப்பயிர் இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கலாம் என்று லேய்பேர்கர் (1928) குறிப்பிடுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தென் ஆற்காட்டில் இந்த பயிர் அதிகம் விளைவிக்கப்பட்டதால் அது கிழக்கு கடற்கரை வழியாய் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வந்திருக்கலாம் என்று சுப்பா ராவ் (1909) கருதுகிறார். மணிலாக்கொட்டை என்ற பெயரை இதற்கு சான்றாக வைக்கிறார் சேஷாத்ரி (1962).
இன்று உலகஅளவில் வேர்க்கடலை உற்பத்தியில் முன்னனி நாடாக உள்ளது இந்தியா. ஏறத்தாழ எட்டு மில்லியன் ஹெக்டேர்களில் கடலை சாகுபடி செய்யப்படுகிறது.  முக்கியமாய், ஆந்திரம், தமிழகம், குஜராத், கர்நாடகம், மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கடலை சாகுபடி பிரதானமாய் இருக்கிறது.

கடலை சாகுபடியில் மிக முக்கியமானது விதைக்கும் நேரம். ஒரு வாரம் தள்ளிப்போனாலும் சாகுபடி பாதிக்கும் கம்மியாய் குறைந்து போகும். ஜூன் மாத முதல் வாரத்தில் இருந்து ஜூலை மாத இறுதி வாரத்திற்குள் கடலை விதைத்து விட வேண்டும். மேலும் இந்த நேரத்தில் செய்யும் விதைப்பினால் இலைத்துளைப்பான் (Leaf miner) மற்றும் Spodopteraa ஆகிய நோய் தாக்குதகளை குறைக்கலாம். கடலைச்செடிகளுக்கு ஊடுபயிராய் ஆமணக்கு, காராமணி மற்றும் சோயா பயிரிடுவதன் மூலமும் நோய் தாக்குதலை தவிர்க்கலாம்.இதெல்லாம் சரிதான். ஆனால் கடலை சாப்பிடும் முறை இருக்கிறதே… அது எப்படியெல்லாம் சாப்பிடப்படுகிறது என்று பார்ப்பதுதானே நம் ஆசை. முதலில் நம் நாட்டுக்கு வருவோம். இந்தியாவில் கடலை கொண்டு பெரும்பாலும் செய்யப்படுவது சமையல் எண்ணெய். அதன் பிறகு கடலையை அவித்தோ வறுத்தோ உண்பார்கள். கடலை மூலம் செய்யப்படும் கடலை மிட்டாய், கோகோ மிட்டாய் போன்றவை குழந்தைகள் விரும்பி உண்ணும் மிட்டாய்களாய் இன்றும் இருக்கின்றன. சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் “Peanut Planet” என்றோர் கடை இருந்தது. இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை. கடலை இன்றும் நம் தமிழக சமையலில் மட்டுமல்லாமல் இந்திய சமையலில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. உதாரணம் கடலை சட்னி. அது இருந்தால் எனக்கு வேறு எதுவும் தேவை இல்லை தோசைக்கு. 


அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடலை கொண்டு செய்யப்படும் வெண்ணெய் (Peanut Butter) புகழ்பெற்ற உணவாக உள்ளது. மேலும் பல்வேறு சாக்லேட் நிறுவனங்கள் இவற்றைக் கொண்டு சாக்லேட் தயாரிக்கின்றன. Butterfinger, Reese’s Peanut Buttercups, Twix, Snickers போன்றவை உலகப்புகழ் பெற்ற சாக்லேட் வகைகள். மேலும் சில ஆப்பிரிக்க நாடுகளிலும் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்திலும் வேர்க்கடலை சூப் போட்டு குடிக்கின்றனர்.



எதற்கு என்று கேட்கிறீர்களா? எதற்கும்.
கடலை என்பது உடல் பருமன் குறைய, ரத்தம் சீராக ஓட, ரத்த அழுத்தம் குறைய, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது. புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்கள் அழிய, நரம்புகள் நன்றாகச் செயல்பட, நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைய, பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க, கடைகளில் எளிதாக குறைந்த விலையில் கிடைக்கும் முட்டை இது.

கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.

வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப்பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிடவேண்டும்.
இன்று பெரும்பாலான ஏழைகள், நடுத்தர மக்கள் வேர்க்கடலை வாங்கிச் சாப்பிடுவதும், உயர்தட்டு மக்கள் முந்திரியை நெய்யில் வறுத்து சாப்பிடுவதும், அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள். 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’தானே. கொழுப்புச் சத்து நிறைந்த பருப்பு வகைகளை அதிக அளவில் சாப்பிடும்போது, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மாரடைப்பு போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும். எனவே நட்ஸ் வகைகளை அளவோடு சாப்பிடுவதே ஆரோக்கியம்.    'நாள் ஒன்றுக்கு 30 கிராம் நட்ஸ் உடலுக்குத் தேவை. அதிலும் உணவில் நெய், பருப்பு, எண்ணெய் இவற்றை அதிகம் சேர்த்துக்கொள்பவர்கள், நட்ஸ் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்வது நல்லது. எல்லா வகை நட்ஸையும் கலந்து 30 கிராம் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும்’ என்கிறார் சீஃப் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி. வேர்க்கடலை  கோலின், புரதம், கொழுப்பு, வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் என சத்துக்கள் அதிகம் உண்டு. மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.. 

வேர்க்கடலை எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்?

வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச்சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச்சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.

சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவா?

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள். வேர்க்கடலையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம்.

மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன் களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.

வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன?

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க் கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது குறையும். வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடு வதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும். வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.

வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்து விடுகின்றன.

நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள். இப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும் போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும். ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டு விடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.

வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகச் செயல்படுகின்றன. இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.

வேர்க்கடலை ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடு வதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிடவேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன. ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.

வேர்க்கடலையை சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக்கூடியது. எனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.


மேலை நாடுகளில்  கடலை உணவு...

ஆப்பிரிக்கர்களின் உணவில் கடலை ஒரு பெரிய இடத்தை பிடித்துள்ளது. கோழி அடித்து குழம்பு வைத்தாலும், குரங்கை கொன்று கறி சமைத்தாலும் அதில் கடலை இருக்கும். ஆப்பிரிக்க மக்களின் உணவு பழக்கங்களில் கடலை எத்தகைய இடத்தை பிடித்துள்ளது என்பதை இங்கே காணலாம். மேற்கு ஆப்பிரிக்க கடலை சூப் பிராந்திய வேறுபாடுகள் எடுத்து பலவாறு மாறியது. கானாவில்  அது கிழங்கு, வாழைக்காய், மற்றும் ரொட்டி மற்றும் மரவள்ளிக் கிழங்கு செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு வேரினால் செய்யப்பட்ட fufuவுடன் பரிமாறப்பட்டது., மாலி மற்றும் செனகலில், மாபி (Maafe) என்று அழைக்கப்படும் கடலை சூப்பில் கோழி இறைச்சி மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சேர்ப்பார்கள்.

Thiébou guerté என்ற உணவு செனகல் நாட்டில் பிரபலம். நேரடி மொழிபெயர்ப்பில் கடலை அரிசி என்று வரும். செனகல் நாட்டின் மிக முக்கிய பணப்பயிர் கடலை தான். ஆகையால் அங்கு உண்ணப்படும் பெரும்பாலான உணவு வகைகளில் கடலை இடம்பெறுகிறது.


தென்அமெரிக்க நாடுகளே இந்த கடலையின் தொடக்கவிடம் என்பதை முன்னரே கண்டோம். ஆயினும் வேர்க்கடலை கொண்டு உருவாக்கப்படும் தனித்துவமான உணவுகள் நிறைய இல்லை என்பது ஆச்சயமூட்டும் ஒரு விஷயம். Papas Con Ocapa மற்றும் Chicken Fricasse போன்ற உணவுகளே அதிகம் செய்யப்படுகின்றன.


என்னுரை : 
                      என்னதான் சொல்லுங்கள். ஒரு மழைநாள் மாலையில் ஜன்னலோரம் அமர்ந்து கொண்டு அம்மா உப்பு போட்டு அவித்துக் கொடுத்த வேர்க்கடலையை உரித்து எடுத்து சாப்பிடுவது போன்ற ஒரு சுவை எந்த சாக்லேட்டிலும் கிடைக்காது.  அதேபோல் என்னதான் கோழி, மீன், திராட்சை என்று வாங்கி வைத்தாலும் மசாலாவில் புரட்டி எடுத்த கடலைதான் மிகச்சிறந்த துணையுணவு.

ஆக்கம் & தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.


No comments:

Post a Comment