Saturday 18 December 2010

இல்லப்பராமரிப்பில் எதனை எப்படி நடைமுறைப்படுத்தலாம்?

 இல்லப்பராமரிப்பு  ஒரு பாடல் வரிகள் உண்டு."சொர்க்கம் என்பது நமக்கு,சுத்தம் உள்ள வீடுதான்;சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான்"எத்தனை அழகிய வரிகள்.சிலர் வீடுகளுக்குள் நுழைந்தால் அவர்கள் தரும் காப்பி கோப்பையை தொடவே அருவெறுப்பாக இருக்கும்.சுத்தம் அந்தளவு இருக்கும்.இதற்கு எதிர் மாறாக வேறு சில வீடுகளுக்குள் நுழைந்தால் மனதே ரம்யமாகி விடும்.பளபளக்கும் சுத்தத்தைப்பார்க்கும் பொழுது நாம் இவற்றை எவை எல்லாம் ஃபாலோ செய்து நம் வீட்டு சுத்தத்தினை இன்னும் மேம் படுத்திக்கொள்ளலாம் என்று மனம் அசை போடும்.

சிலருக்கு வீட்டினை தூய்மைப்படுத்துவது தூங்குவது,சாப்பிடுவது போல் அன்றாட வேலையாக,ஏன் மூச்சு விடுவது போல்.இதற்கு எதிர்மாறாக மற்ற சிலருக்கோ "ப்ச்ச்.."என்ற அலட்சிய மனோபாவம்.

நீங்கள் நுழையும் வீடுகள்,உங்கள் தெரிந்த,நண்பர்கள்,உறவினர்கள் வீடுகளை சற்று நேரம் மனக்கண்ணில் அலசுங்கள்.அசுத்தனமான இல்லங்களுக்கு சொந்தக்கார்களின் இல்லங்கள் அதகளமாக இருக்கும் வீடுகளின் உரிமையாளர்கள் வீட்டில் எப்பொழுதும் இரைச்சலும்,கூச்சலும்,கணவன் மனைவி சச்சரவும்,ஒழுங்கில்லாத குழந்தைகளும்,பண்பில்லாத பழக்கவழக்கங்களும்,இன்னும் சொல்லப்போனால் ஒரு சுபிட்சமில்லாத வாழ்க்கை சூழ்நிலை இருக்கும்.ஆள் இல்லாத அறைகளில் விளக்குகளும்,மின்விசிறிகளும் சர்வசாதராணமாக ஓடிக்கொண்டிருக்கும்.எந்த வித ஒழுங்கும்,கட்டுபாடுகளும் இருக்காது.வேலை பார்ப்பவர்களால் அடிக்கடி சின்ன,பெரிய திருட்டுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும்.எல்லா செயல்களிலும்,நடவடிக்கைகளிலும் அலட்சிய மனப்போங்கு,ஸ்திரமாக முடிவெடுக்காத்தெரியாத தயக்கம்,இன்னும் எவ்வளவோ ரசிக்கதகாத அம்சங்கள் நிறைந்திருக்கும்.

தூய்மையான இல்லங்களுக்கு சொந்தக்கார குடும்பங்களை இப்பொழுது மனக்கண்ணில் அலசுங்கள்.கண்டிப்பாக சுபிட்சம் நிறைந்த,நிறைவான குடும்பமாக,தெளிவான சிந்தனை உள்ளவர்களாக,அமைதி நிறைந்த குடும்பமாக முதல் குடும்பத்திற்கு நேர் எதிர் அம்சங்கள் நிறைந்த அழகிய குடும்பமாக ,மற்றவர்களுக்கு முன்மாதிரியான குடும்பமாக திகழும்.

சில நாட்களுக்கு முன் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தேன்.வீட்டு சூழ்நிலையைப்பார்த்து விட்டு எனக்கு தலையே சுற்றி விட்டது,போர்க்களம் போல் வீடு காட்சி அளித்தது.சுத்தம் செய்யாத டம்ளர்கள்,ஈரடவல்கள்,சோபா மீது ஒரு செல்ஃப் முழுக்க அடுக்கி வைக்கும் அளவு பொருட்கள்,தரையில் அப்படி அப்படியே கிடக்கும் துணிகள்,கலைந்து போன பேப்பர் கற்றைகள்,ஒட்டடை தொங்கும் சுவர்கள்,பிசுபிசுப்பான தரைகள்..அடுக்கிக்கொண்டே போகலாம்.இப்படியான பரமரிப்பு இல்லாத இல்லங்களைக்காணும் பொழுது அறுவெறுப்புத்தான் மிஞ்சுகின்றது.

இதற்கு நேர் எதிராக இன்னொருவர் இருக்கின்றார்.நம் வீட்டிற்குள் வந்தாலே செருப்பை வாசலுக்கு எதிரே கழற்றி வைக்காமல் ஒரு ஒரமாக கழற்றி வைப்பார்.அந்த ஒரு ஜோடி செருப்பு கூட கழற்றி வைப்பதில் ஒரு நேர்த்தி இருக்கும்.

உள்ளே நுழையும் பொழுதே கால் மிதி சற்று கோணல் ஆக இருந்தால் தன் கால்களால் சரி செய்து விட்டுத்தான் உள்ளேயே நுழைவார்.ஷோபாவில் உட்காரும் நேர்த்தி,காப்பிக்கோப்பையை காலி செய்துவிட்டு அதன் கைப்பிடி இருக்கும் பகுதியைக்கூட ஒரு நேர்த்தியுடன் திரும்ப வைக்கும் பொழுது பிரமித்துப்போய் இருக்கின்றேன்.இப்படிப்பட்டவர் தனது இல்லத்தை எப்படி வைத்து இருப்பார் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.இப்படிப்பட்டவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் போல் இருக்கும்.

நம்முடைய பொருட்கள்,உடமை,வீடு அனைத்தும் இறைவன் நமக்குகொடுத்த அருட்கொடைகள்,பாக்கியங்கள்.அதனை முறைப்படி பராமரித்து சுத்தப்படுத்தி,ஏனோதனோ என்றிராமல்,ஒரு முன்மாதிரியாக இருந்தால் இல்லம் இனிய இல்லமாகிவிடும்.மனமும் நிறைந்ததாகிவிடும்.மற்றவர்கள் அதனைக்காணும் பொழுது நம் பால் உள்ள மரியாதை அதிகரிக்கும்.

சிறிய வீடோ,பெரிய வீடோ,பழைய வீடோ ,புது வீடோ வீடு,சொந்தவீடோ,வாடகை வீடோ நம்முடையது,நாம் ஜீவிப்பது..அதனை சுத்தமாகவும் சுகாதாரமாகும் வைத்திருப்பது நமது கடமை.ஆணும் சரி,பெண்ணும் சரி இருவரும் சேர்ந்தே இதில் ஈடுபாடு காட்டினால் பிற்காலத்தில் குழந்தைகளும் அதனைப்பின் பற்றுவார்கள்.

அடுத்ததாக  வீட்டு பராமரிப்பில் எதனை எப்படி நடைமுறைப்படுத்தலாம் எனபதைப்பற்றி அலசுவோம்.


இல்லப்பராமரிப்பை வீட்டிற்கு வெளியில் இருந்து ஆரம்பிப்போமா?

வீட்டின் வெளிப்பகுதி:
தனி வீடோ அடுக்குமாடிவீடோ வீட்டிற்கு வெளியில் குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்து தூசி கிளம்பாமல் நீர் தெளித்து,கேட் கிரில்கள்,காம்பவுண்ட் விளக்குகளை,வீட்டிற்கு வெளிப்பகுதியில் உள்ள ஜன்னல் கிரில்களை அவ்வப்பொழுது சுத்தம் செய்து வந்தால் வீடே தனித்துவமாக காட்சி அளிக்கும்.காம்பவுண்டுக்குள் செடி கொடிகள் இருந்தால் காய்ந்த தளைகள் அகற்றி,அவ்வப்பொழுது மண் சட்டிகளை இடம் மாற்றி கீழே படிந்துள்ள மண் துகள்களை சுத்தம் செய்வதைக்கடை பிடியுங்கள்.வீட்டிற்கு முன் செருப்புகள் சிதறிக்கிடக்காமல் ஸ்டேண்ட் வாங்கி வைத்து வீட்டிலுள்ளவர்களை செருப்பை கழற்றும் பொழுது ஸ்டேண்டில் கழற்றி வைக்க பழக்குங்கள்.வாசலுக்கு வெளியில் உள்ள கால் மிதி தூசி தும்புகள் இல்லாமல் தினமும் தட்டி சுத்தப்படுத்த தவறாதீர்கள். மாதம் இரு முறையாவது சோப்பினால் சுத்தம் செய்யுங்கள்.கதவு,நிலைப்படி போன்றவற்றை துணியினால் துடைத்து ஒட்டடை இன்றி சுத்தம் செய்யுங்கள்.


ஹால்:
நம்மை பிறர் மதிப்பீடு செய்வதில் வீட்டின் முன்னறை பெரும்பங்கு வகிக்கின்றது.விலைஉயர்ந்த சோபாக்கள்,கம்பளங்கள்,சாண்டிலியர்கள்,ஓவியங்கள் போன்றவற்றை அடுக்கி அழகு படுத்த வேண்டுமென்பதில்லை.இருப்பவற்றை சுத்தமாக வைத்து இருந்தாலே போதும்.தூசிகள் இல்லாத சோபா,கோடிழுத்தால் கோடு வராத டீபாய்,சோபாவுக்கு அடியில் குப்பைகள் தேங்காத நிலை,தொலைக்காட்சி பெட்டி இருக்கும் அலமாரியில் பொருட்கள் கன்னா பின்னவென்று இராமல் நேர்த்தியாக அடுக்கி வைத்தல்,அன்றைய தினசரியைத்தவிர மற்ற பழைய பேப்பர்களை பிறர் கண்களுக்கு படாமல் மறைவான இடத்தில் வைத்தல்,தினசரி,மற்றும் புதிய பத்திரிகைகள் போன்றவற்றை நேர்த்தியாக அடுக்கி வைத்தல்,மாதம் ஒரு முறை துவைத்து மாற்றிய கர்ட்டன்கள்,விளக்குகள் பேன் போன்றவற்றை துணியினால் 10 நாட்களுக்கு ஒரு முறையாவது துடைத்து சுத்தப்படுத்துதல் போன்றவற்றில் உறுதியாக இருங்கள்.ஆங்காங்கு உங்கள் பொருளாதர வசதிக்கு ஏற்ற படி படங்கள்,பூங்கொத்துக்கள் போன்றவற்றை மாட்டினால் வீடு அழகு கொஞ்சும்.


படுக்கையறை:
கட்டில் வாங்கினால் ஸ்டோரேஜ் கட்டிலாக பார்த்து வாங்குதல் படுக்கை அறை அடைசல் இல்லாமல் இருக்க வழிவகுக்கும்.காலையில் எழுந்ததுமே போர்வைகளை மடித்து தலை அணைகளை எல்லாம் அப்புறப்படுத்தி கட்டிலுக்கடியில் இருக்கும் ஸ்டோரேஜில் அடுக்கி வைத்து,பெட் சீட்டை உதறி சுருக்கமில்லாமல் விரித்து வையுங்கள்.வாரம் ஒரு முறை பெட்ஷீட் மாற்றும் பழக்கத்தினை மேற்கொள்ளுங்கள்.அதே போல் படுக்கையறையில் இருக்கும் திரைச்சீலைகளையும் அடிக்கடி துவைத்து சுத்தம் செய்யுங்கள்.படுக்கை அறையில் நசநசவென்று பொருட்கள் அடைத்து இருப்பதை விட எளிமையாக சுத்தமாக வைத்து இருந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.குளிர்சாதன வசதியுடன் கூடிய படுக்கையறையாக இருந்தால் நறுமணமாக இருப்பதற்கு செலவு செய்யத்தயங்காதீர்கள்.இதமான வர்ணத்தில் பெயிண்டும்,ஒரு சில இதமான ஓவியங்களும் மனதிற்கு இதம் தரும்.
 

கப்போர்ட்:
அநேகமாக எல்லாப் படுக்கை அறைகளிலும் இருக்கும்.ஆறுமாதத்திற்கு ஒரு முறையாவது உள்ளே இருக்கும் பொருட்கள் அனைத்தையும் எடுத்து நன்கு துணியால் துடைத்து பேப்பர் மாற்றுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.அநேக வீடுகளில் நியூஸ்பேப்பரை கப்போர்ட் தட்டுகளுக்கு விரித்து பொருட்களை அடுக்குவார்கள்.இந்த முறை கனமான சார்ட் பேப்பர்,அல்லது பிரவுன் ஷீட்டை விரித்துப்பாருங்கள்.இனி அந்த பழக்கத்தை விடவே மாட்டீர்கள்.அழகாக இடைவெளி விட்டு அடுக்கி,நாப்தலின் பால்களை ஆங்காங்கே வைத்து ,துணிகளும் மற்ற பொருட்களையும் தனித்தனி அடுக்குகளில் வைத்து தேடினால் உடனே கிடைக்கும் படியாக அமைத்துக்கொள்ளுங்கள்.
 

பாத் ரூம்:
இது அநேக வீடுகளில் படுக்கையறையுடன் அமைந்திருக்கும்.இதனை அதிகம் கவனம் செலுத்தி எப்பொழுதும் உலர்ந்த நிலையில் வைத்திருந்தால் ஆரோக்கியமாக இருக்கும்.குளிக்கும் முன்னர் தினமும் சுத்தப்படுத்தும் வழக்கம் அவசியம்.வாஷ் பேசின்கள்,டாய்லெட்டுகளை அதற்குறிய கிளீனிங் உபகரணங்களை வைத்து சுத்தப்படுத்தி,தரையை பிரஷ் செய்து நறுமணயூட்டிகளை மாட்டி வையுங்கள்.ஒரு வைப்பரை வாங்கி வைத்து ஒவ்வொருவரும் உபயோகித்தபின் வைப்பரால் நீர் தேங்காத வண்ணம் சுத்தம் செய்யும் பழக்கத்தினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படுத்திக்கொண்டால் நலம் பயக்கும்.வைப்பர்,புரூம்,பிரஷ் போன்றவற்றை பாத்ரூமின் மூலையில் சாய்த்து வைப்பதைத்தவிர்த்து சின்ன ஹூக்குகளை ஓரமாக பொருத்தி அதில் மாட்டி வைத்தால் தரையை இலகுவாக சுத்தம் செய்யலாம்.டாய்லெட்டினுள் இருக்கும் கேபினெட்டின் கண்ணாடி மற்றும் கேபினெட்டை ஈரத்துணியால துடைத்து பொருட்களை நேர்த்தியாக அடுக்கி வைத்து நாப்தலின் உருண்டைகளைப்போட்டு வையுங்கள்.பழைய பிரஷ்கள்,காலியான பேஸ்ட்கள்,குப்பிகள்,காலியான சாஷேக்கள் போன்றவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்துங்கள்.ஜலபாதையில் ஒரு போதும் முடி தங்கி இருக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.தரையை மட்டுமின்றி சுவரில் பதித்திருக்கும் டைல்ஸ்,மற்றும் பிட்டிங்குகளையும் அவ்வப்பொழுது அதற்குறிய கிளீனிங் லிக்விட் கொண்டு சுத்தம் செய்ய தவறாதீர்கள்.
 
சமையலறை
ஒரு இல்லத்தின் மிக முக்கியமான அறை.நல்ல காற்றோட்டத்துடனும்,வெளிச்சத்துடனும் அமையப்பெற்று இருப்பது அவசியம்.சில இல்ல சமையல்கட்டுகளில் மேடை முழுக்க பொருட்களை நிறைத்து வைத்திருப்பார்கள்.ஸ்டவ் தவிர மிக அத்தியாவசிய பொருட்கள் ஓரிரண்டு இருந்தால் தான் பார்க்க அழகாகவும்,சுத்தம் செய்ய எளிதாகவும் இருக்கும்.மிக்ஸி,எலெக்ட்ரிக் குக்கர் போன்றவற்றை உபயோகித்து விட்டு,அப்புறப்படுத்தும் வசதி இருந்தால் எடுத்து உள்ளே வைத்து விட்டால் இன்னும் பளிச் என்றாகி விடும்.இரண்டடி அகலத்தில் நாண்கு அடுக்குகள் கொண்ட மரத்தாலான செல்பை செய்து சமையல் கட்டில் ஒரு ஓரமாக வைத்து இருந்தால் ஒவ்வொரு அடுக்கிலும் எலெக்ட்ரிக் குக்கர்,டேபிள்டாப் கிரைண்டர்,மைக்ரோவேவ் அவன்,மிக்ஸி,கிரில்ட் அவன் ,டோஸ்டர் போன்ற மின்சார உபகரணங்களை வைத்துக்கொண்டால் இடம் அடைத்துக்கொள்ளும் அவஸ்தை இருக்காது.மிகவும் வசதியாக இருக்கும்.முயற்சித்துப்பாருங்களேன்.

நெய் வாங்கும் பொழுது கிடைத்த பாட்டில்,பருப்புப்பொடி வாங்கும் பொழுது தந்தது,தேயிலை ,காப்பித்தூளுக்கு கிடைத்த இலவச பாட்டில்களை அப்புறப்படுத்தி விட்டு ,ஒரே மாதிரி அளவுள்ள பெட் பாட்டில்களை மளிகை பொருட்களை நிரப்புங்கள்.பருப்பு ,உப்பு,சர்க்கரை போன்றவற்றுக்கு ஒரே அளவுள்ள பெரிய சைஸ்பாட்டில்களை வாங்கி வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.இந்த பாட்டில்களை கையாளும் பொழுது ஈரக்கையினால் எடுப்பதை தவிர்த்தால் அழுக்கு படிவதை தவிர்க்கலாம்.மாதம் ஒரு முறை சோப்பு நீரினால் கழுகி உலரவைத்து எடுத்தல் அவசியம்

நம் வசதிக்காக பாத்திரங்களை அளவுக்கதிகமாக வைத்திருந்தாலும் சமையலறை அலங்கோலமாகி விடும்.ஆகவே அளவான பாத்திரங்களை வைத்து சமைக்க பழகிக்கொண்டால் அடுக்களையும் சுத்தமாகும்.வேலை செய்பவரும் காத தூரம் ஓடமாட்டார்.

கிச்சன் சின்க் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக,உலர்ந்த நிலையில் இருந்தால் பூச்சிகள் வருவது குறையும்.எச்சில் பாத்திரங்களை அதனுள் போட்டு வைக்காமல் இருப்பதே நல்லது.

ஸ்டோர் ரூம்:ஒரு வீட்டுக்கு ஸ்டோர்ரூம் அமையப்பெற்று இருந்தால் சுத்தத்தை அதிகம் பேணலாம்.வாய்ப்பு இருப்பின் ஸ்டோர் ரூம் இணைக்கத்தவறாதீர்கள்.ஸ்டோர் ரூம்தானே என்று பொருட்களை அடைசலாக வைத்து இராமல் அதிலும் உங்களின் சுத்த பரமரிப்பைத்தொடருங்கள்.

சாப்பாட்டறை:சாப்பாட்டு மேசையில்; தேவை இல்லாத பொருட்கள் பரப்பி இருப்பதை ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.எப்பொழுதும் துடைத்து சுத்தமாக வைத்திருங்கள்.அதன் நாற்காலிகள் மீது ஈர டவல்கள் போன்றவை தொங்குவதை தவிர்த்து விடுங்கள்.சாப்பிட்டதும் உடனுக்குடன் சுத்தம் செய்து பாத்திரங்களை அப்புறப்படுத்தி விடுங்கள்.ஊறுகாய்,சாஸ்,நெய்,உப்பு,பொடிவகைகள் போன்றவற்றை உள்ளே எடுத்து வைக்கும் வசதி இல்லாவிட்டால் அழகாக ஒரு டிரேயில் அடுக்கி ஓரமாக வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

பரண்:இதிலும் கசகச வென்று சாமான்கள் அடைத்து வைக்காமல் பெரிய அட்டைப்பெட்டிகளில் கட்டி.உள்ளே எனென்ன பொருட்கள் இருப்பது என்ற லிஸ்டை ஒரு பேப்பரில் எழுதி அட்டை பெட்டி மேல் ஒட்டி லாஃப்டில் அடுக்கி வைத்தால் எடுப்பதற்கு சுலபமாக,பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.



படிப்பறை:படிக்கும் அறையில் புத்தக அலமாரியில் பொருட்களை அளவுக்கு அதிகமாக அடுக்கி,நேர்த்தி இல்லாமல் இருந்தால் பிள்ளைகளுக்கு படிக்கும் மூடே போய் விடும்.மேசை மீது ஓரத்தில் புத்தகங்களை அடுக்கி வைத்து விட்டு வேலை செய்வதற்கு ஏற்ற வாறு இடம் ஒதுக்கி இருக்க வேண்டும்.பேனா,பென்சில்களுக்கு ஸ்டாண்ட்,பேப்பர் குப்பைகளை போட சிறிய குப்பைத்தொட்டிஎன்று வைத்து குழந்தைகளுக்கு நல்ல பழக்கத்தை வலியுறுத்துங்கள்.எந்தெந்த பொருட்கள் எங்கெங்கே இருக்கின்றது என்று தூக்கத்தில் எழுப்பிக்கேட்டாலும் டக் என்று சொல்லும் அளவு பிள்ளைகளை நாம் சீர்படுத்தினால அவர்களின் சிந்தனையும் சீராக தெளிவாக அவர்களை நேர்வழிப்படுத்தும்.

உங்கள் இல்லம் எளிமையாக இருந்தாலும் சுத்தமாக அழகாக,ரசனை மிக்கதாக அமைந்து உங்கள் இனிய இல்லம் சொர்க்கமாக அமைய வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment