கடந்த பல வருடங்களாகவே, கடல்சார் பொறியியல்(மெரைன் இன்ஜினீயரிங்) படிப்பில் மாணவர்களின் ஆர்வம் பெருமளவில் அதிகரித்து வருவது நாம் அறிந்ததே.

அந்த படிப்பு தற்போது பல பொறியியல் கல்லூரிகளில் பாடப்பிரிவாக இருந்து கற்றுகொடுக்கப்பட்டாலும், அந்தப் படிப்பிற்கென்றே சில பிரத்யேக கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது மெரைன் பயிற்சிக்கான மத்திய பல்கலைக்கழகம். அதேசமயம் இதை தவிர்த்த வேறு சில முக்கிய கல்வி நிறுவனங்களும் இந்த படிப்பிற்காக உள்ளன. எனவே அவற்றில் சிலவற்றை தெரிந்து கொள்வது மாணவர் சமூகத்திற்கு பயனுள்ளதாக அமையும்.

கடல்சார் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்- கொல்கத்தா:
இந்த துறையில் இந்தியாவிலேயே இது ஒரு முன்னோடி கல்வி நிறுவனமாகும். கடந்த 1947 -இல் அமைக்கப்பட்ட இந்நிறுவனம், முதலில் கடல்சார் பொறியியல் பயிற்சி இயக்குனரகம் என்றுதான் அழைக்கப்பட்டது. பின்னர் 1994 -இல் கடல்சார் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. துவங்கப்பட்ட இத்தனை வருடங்களில், பலவிதமான மாற்றங்களை சந்தித்து, இன்றைக்கு உலகின் தலைசிறந்த கடல்சார் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இந்நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு உயர்தர பயிற்சிகளை வழங்குவதற்கான அனைத்து வசதிகளும் இங்கே உள்ளன
. அருகிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில், கடல்சார் பொறியியலில் 4 வருட பி.டெக். படிக்கும் மாணவர்களுக்கு இது பயிற்சியளிக்கிறது. பாடத்திட்டமானது, மெக்கானிக்ஸ் ஆப் மெஷின்ஸ், மெடீரியல்ஸ், அட்வான்ஸ்ட் மேதமேடிக்ஸ், அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ப்லூயிட் மெகானிக்ஸ் மற்றும் பிறபொறியியல்/தொழில்நுட்ப படிப்புகள் அடங்கியவை.இவைத்தவிர கூடுதலாக, நிர்வாக சேவைகள், மேலாண்மை மற்றும் தொழில்முனைதல் படிப்புகள் போன்றவையும் அடக்கம். மேலும் உடற்பயிற்சி, அணிவகுப்பு, வீட்டு பராமரிப்பு, நீச்சல் மற்றும் வெளி விளையாட்டு போன்ற பயிற்சிகள் கடல்சார் பொறியாளர்கள் நல்ல உடல் மற்றும் மனோதிடத்துடன் இருப்பதற்காக அளிக்கப்படுகின்றன. தற்போதைய நிலையில் பி.டெக். படிப்பில் 246 இடங்கள் உள்ளன. இது அங்கேயே தங்கி படிக்கும் படிப்பாகும். இங்கு படிக்கும் அனைவருக்கும் கேம்பஸ் இண்டர்வியூ முறையில் வேலை கிடைத்து விடுகிறது.

இந்த படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, ஐ.ஐ.டி -களால் நடத்தப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறுகிறது. பொதுவாக பி.எஸ்சி(நாட்டிக்கல் அறிவியல்கள்) பட்டப்படிப்பிற்கான கல்வித்தகுதியே இந்தப் படிப்பிற்கும் பொருந்தும். இந்த படிப்பை முடித்தப்பிறகு, ஒருவர் பொறியாளர் என்ற முறையில் கப்பலில் பராமரிப்பு, இயந்திர இயக்கம் மற்றும் பாதுகாப்பு பணிகளை நன்கு மேற்கொள்வதற்கான தகுதி பெறுகிறார். இப்படிப்பை முடித்தவர் முதலில் இளநிலை(ஜூனியர்) பொறியாளர் என்ற நிலையில்தான் பதவி பெறுகிறார். ஆனால் பதவி உயர்வு பெறுவதற்கு, அவர் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தால் நடத்தப்படும் தகுந்த தேர்வுகளை எழுத வேண்டும்.

தேசிய கடல்சார் கல்வி நிறுவனம்:
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் இந்த கிளையானது, கடல்சார் பொறியியல் சம்பந்தமாக 4 வருட பி.டெக். படிப்புகளை நடத்துகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை ஐ.ஐ.டி தேர்வுகள் மற்றும் கொல்கத்தாவின் கடல்சார் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மூலமாக நடக்கிறது.

கடல்சார் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்- மும்பை:
இந்திய கடல்சார் கல்வித்துறையில் ஒரு சீரியப் பணியை இந்த கல்வி நிறுவனம் செய்து வருகிறது. அதிகரித்துவரும் கடல்சார் நிபுணர்கள் தேவையை அதிகரிக்க, இக்கல்வி நிறுவனமானது, மெக்கானிகல் இன்ஜினீயரிங் மற்றும் நேவல் ஆர்கிடெக்சர் போன்ற துறைகளின் பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து, அவர்களை கடல்சார் பொறியாளர்களாக உருவாக்க ஒரு வருட பயிற்சி படிப்பை தொடங்கியுள்ளது.

இந்த ஒரு வருட படிப்பானது, கல்லூரியில் 6 மாதமும், கப்பலில் 6 மாதமும் நடைபெறும். இதைத்தவிர ஒரு புதிய கருத்தாக்கத்துடன், பல அம்சங்களைக் கொண்ட, கடல்சார் அறிவியலுக்கான 3 வருட பி.எஸ்.சி படிப்பை கடந்த 2003 -இல் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதற்கான மாணவர் தேர்வும் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு மூலமே நடைபெறும். இப்படிப்பை முடித்தவர் நாட்டிக்கல் அறிவியல் மற்றும் கடல்சார் பொறியியல் ஆகிய 2 துறைகளிலும் தேர்ந்தவராக இருப்பார்.

பொதுவாக இத்தகைய பலஅம்ச படிப்பானது, இத்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய ஒரு நிபுணத்துவ படிப்பாக திகழ்கிறது. இந்தப் படிப்பானது, பொது கப்பல் போக்குவரத்து இயக்குனரகத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளதோடு, மும்பை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டும் உள்ளது. இந்த பி.எஸ்சி படிப்பை முடித்தவர்கள், 18 மாத நடைமுறை கடல்சார் மற்றும் கப்பல் போக்குவரத்து பயிற்சியில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்.
இதை முடித்தபிறகு, திறன் சம்பந்தப்பட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நாட்டிக்கல் சம்பந்தப்பட்ட வாய்மொழித் தேர்வு ஆகியவற்றுக்கான 2 வது மேட்(வெளிநாடு செல்லுதல்) சான்றிதழ் தேர்வு அல்லது கிளாஸ் IV, பகுதி-’பி’ சான்றிதழ் – திறன் சம்பந்தப்பட்ட எழுத்து தேர்வு மற்றும் பொறியியல் சம்பந்தப்பட்ட வாய்மொழித் தேர்வு ஆகியவற்றில் கலந்து கொள்ளலாம்.

இந்த இருவகை தேர்வுகளை எழுதுவதில், மாணவர்களுக்கு விருப்பத்தேர்வு நடைமுறை உண்டு. மேற்கண்ட பி.எஸ்.சி தகுதி மாணவருக்கு இருந்தால், அவர், கடல்சார் பொறியாளர் அதிகாரிக்கான பகுதி ‘ஏ’ தேர்வு திறன் அறிதலுக்கான கிளாஸ் IV சான்றிதழ் தேர்வு மற்றும் திறன் அறிதலின் 2 வது மேட் சான்றிதழுக்கான அடிப்படை படிப்பு போன்றவற்றிலிருந்து அவர் விலக்களிக்கப்படுவார். மேலும், 2 வது மேட்(வெளிநாடு செல்லுதல்) மற்றும் கடல்சார் பொறியாளர் அதிகாரி கிளாஸ் IV பகுதி ‘பி’ தேர்விலிருந்தும் விலக்களிக்கப்படுகிறார்.

லால்பகதூர் சாஸ்திரி கல்லூரி- நவீன கடல்சார் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி கல்வியகம்:

மும்பையில்1948 -இல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், உலகளவில் இத்துறைக்காக இயங்கும் பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இதில் 1200 மாணவர்கள் படிப்பதோடு, ஏறக்குறைய 50 கடல்சார் படிப்புகளும் சர்வதேச தரத்தில்(ஐ.எம்.ஓ) வழங்கப்படுகின்றன. இக்கல்வி நிறுவனம் கடல்சார் அதிகாரிகளுக்கென்றே பரந்தளவிலான பயிற்சியை வழங்குகிறது. 

இந்த உயர்நிலை கல்வியால், வெளிநாட்டு நிறுவன கப்பல்களிலும் சிறப்பாக பணிபுரியக்கூடிய திறன்களை இந்திய மாணவர்கள் பெறுகிறார்கள். கடல்சார்ந்த மற்றும் கப்பல் தொழில்சார்ந்த படிப்புகளின் அனைத்து அம்சங்களையும் தேவைகளையும் கருத்தில்கொண்டு, நவீன முறையிலான அனைத்து வசதிகளும் இங்கு உண்டு. சர்வதேச தரத்துடன் 1984 -இல் இங்கு ஆரம்பிக்கப்பட்ட “கூடுதல் முதுநிலை படிப்பு” மற்றும் 1994 -இல் ஆரம்பிக்கப்பட்ட “முதன்மை பொறியாளருக்கான கூடுதல் படிப்பு” ஆகியவை இக்கல்லூரியின் மற்றொரு சிறப்பம்சம்.இவைத்தவிர இங்கு
7 நிலையிலான படிப்புகளும் உள்ளன. அவை,எல்.என்.ஜி. – எல்.பி.ஜி., புல் மிஷன் சிமுலேட்டர், லிக்யுட் கார்கோ ஹேண்ட்லிங் சிமுலேட்டர், இஞ்சின் ரூம் சிமுலேட்டர், ஹிப் மேனோவரிங் சிமுலேட்டர், ரேடார் சிமுலேட்டர், ரேடார், ஏ.ஆர்.பி.ஏ. மற்றும் நேவிகேஷன் சிமுலேட்டர் ஜி.எம்.டி.எஸ்.எஸ். போன்றவையாகும்.

இத்தகைய புகழ்வாய்ந்த கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் படிப்பதன் மூலம், அவர்களின் வருங்கால கனவுகள் எளிதில் வசப்படுகின்றன.

தொகுப்பு : மு. அஜ்மல்கான்.