Tuesday 6 October 2009

நீங்கள் புகை பிடிப்பதால் ஏற்படும் உருப்புடாத 25 தீய நன்மைகள் !! ஒரு சமூக பார்வை..

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவுதான் நாம் எடுத்து சொன்னாலும் அதனால் எந்த பலனும் உண்டாகப்போவதில்லை. நம் அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டாலே மறைந்து நின்று ஒரு சிகரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக எதற்கு நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன (தீய)நன்மைகள் என்பதைப்பார்ப்போம்!  

1. பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு வயிறாரஉணவு கிடைக்கும்.
2. நாட்டுக்கு உதவுகிறீர்கள். சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரிகளால் நாட்டுக்கு நன்மை.
3. (சென்னைகூவம் போல) நாற்றம் பிடித்த மோசமான சுற்று சூழலில் இருக்க வேண்டி வந்தாலும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகையால் எல்லா அசிங்கங்களையும் மறைத்து புகை மேகத்துக்குள் இருப்பது. தேவலோகத்தில் இருப்பது போல, மேகத்துக்கிடையே சஞ்சரிப்பது போன்ற அனுபவம் தரும்.
4. கவலையேபடாதிர்கள்சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப் புறத்தின் எந்த நாற்றமும் நம்மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் என்ன குறையிருந்தாலும் நமக்கு ஒன்றும் பெரிதாக தெரியாது.
5. சிகரெட் புகைக்குள் எப்போதும் மறைந்திருந்தால் கடன் காரர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்.
6. சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி பிறநட்புகளை வளர்த்துக்கொள்ளலாம். அவ்வளவு ஏன் முன் பின் தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.
7. எப்போதும் தீப்பெட்டி அல்லது லைட்டர் வைத்துக் கொண்டிருப்பது அதுவும்கூட தமிழ்நாட்டில் இரவு மின்வெட்டு ஏற்படும் போது மிக மிக உதவியாக இருக்கும்.
8. சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத் தொல்லை அதிகம் இருக்காது. சிகரெட் தயாரிப்பாளர்கள் அடுத்த முறை புகையிலையுடன் கொசு மருந்தையும் கலந்து தயாரித்தால். தனியாக கொசு வர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.
9. பிரச்சனைகள் வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சிந்தித்து தலையை புண்ணாக்க வேண்டியதில்ல. டென்சனே தேவையில்லை ஒரேயொரு சிகரெட்டை பற்ற வைத்தால் போதும். தீக்குச்சியை உரசும் போது கோபத்தை வெளிப்படுத்தலாம், தீக்குச்சி எரிவதை ஒரு வினாடி ரசித்து அதில் எதிரியின் அழிவைக் கற்பனை செய்து ஆசுவாசப்படலாம், சிகரெட்டை பற்றவைத்து ஊதி தள்ளும் போது பிரச்சனைகளை புகை போல் ஊதித் தள்ளுவதை போல் கற்பனை செய்யலாம். எஞ்சிய துண்டு சிகரெட்ட நசுக்கித் தள்ளி நம்ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ளலாம்.
10. சிகரெட் பிடித்து லொக் லொக் கென்று இருமி மற்றவர்களின் அனுதாபத்தை சுலபமாக சம்பாதிக்கலாம். பிறர் கவனத்தை தன் பக்கம் இழுக்கலாம்.
11. அதிகம் சிகரெட் பிடிப்பதால் கூடிய சீக்கிரமே நமக்கு முதுமைத் தோற்றம் வந்து விடும். முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும் . ஏன் பஸ்ஸில் கூட இடம் கிடைப்பது எளிது.
12. தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து கைத் தடியுடன் நடக்கும் நிலை ஏற்படும். துரத்தும் தெரு நாய்களை விரட்ட அதுவே உதவும்.
13. இரவு முழுதும் இருமிக் கொண்டிருப்பதால் வீட்டில் திருடர்கள் வருவார்கள் என்ற பயமில்லை. தனியாக நாய்கள் வளர்க்க வேண்டியதில்லை.
14. வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறைத்து விடலாம்.
15. எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில் உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய் விடும்.
16. வேண்டாத விருந்தாளியை விரட்ட புகையை அவர்கள் முகத்துக்கு நேரே அடிக்கடி ஊதி விட்டால் போதும்.
17. புகை பிடிப்பதால் கேன்சர் வந்து பிறகு நாம்படும் அவஸ்தையை பார்க்கும் நம்பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக்கொண்டு அதன் பக்கமே தலைவைத்துப்படுக்காமல் நல்ல பிள்ளைகளாக வளர அதுவே உதவும்.
18. மிகவும் அத்தியாவசியமாக தேவை இருந்தாலொழிய யாரும் நம்அருகில் வந்து பேச்சுக் கொடுத்து தொல்லை பண்ன மாட்டார்கள்.
19. சிகரெட் பிடிப்பதில் பல ஸ்டைகளை கற்றுக் கொள்வது சினிமாத் துறையில் நல்ல எதிர்(கேடு)காலத்தை உருவாக்கித் தரலாம்.
20. வாழ்க்கையின் பிற்பகுதியில் டாக்டர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் பணத்தை அள்ளி அள்ளி தந்து நாமும் வள்ளலாகலாம்.
21. சிகரெட் பாக்கெட்,காலி தீப்பெட்டி,எரிந்த தீக்குச்சி,சிகரெட்டின் எஞ்சிய துண்டுகள் போன்றவற்றை அதிகமாக சேர்த்து வைத்து கின்னஸ் சாதனை படைக்கலாம்.
22. வீட்டில் இறைந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளை சின்னக் குழந்தைகள் விரும்பி எடுத்து விளையாடுவதால் அவர்களுக்கு தனியாகவேறு விளையாட்டுப் பொருட்கள் வாங்கத் தேவையில்லை.
23. மக்கள் நெருக்கமாக உள்ள இடங்களில் புகை பிடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்க்கலாம். கூட்டத்தில் தனியாக தெரியலாம்.
24. சில்லரைத் தேவைப்பட்டால் சட்டென ஒரு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி சில்லரை பெற்றுக் கொள்ளலாம்.
25. நாட்டில் பொறுப்பற்ற மக்களின் ஆயுளை குறைத்து மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.

புகை திருக்குறள் 
இழுக்க இழுக்க இன்பம்தான்இழுத்தப்பின்

வேறு என்ன கேன்சர்தான்
சிகரெட் பிடிப்பதில் இவ்வளவு தீய நன்மைகள் இருப்பதை கருத்தில் கொண்டு புகை பிடிப்பவர்கள் யாரும் இனி யாரைக்கண்டும் சங்கடப்படத் தேவையில்லை. நாம் எக்கேடு கெட்டாலும் பிறருக்கு உதவுகிறோமே நிம்மதியுடன் தொடருங்கள் சேவையை.

நன்றி : சக்கரை பீர்  என்ற சாதிக்.

ஆக்கம் மட்டும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment