Thursday 10 September 2009

விந்தணு மூலம் அறிவுள்ளவரை உருவாக்க முடியுமா?-ஒரு ஆய்வு....


விந்தணு உருவாக்கம் என்பது ஆண்களில் விதைகளில் நிகழ்கிறது. இதை ஆங்கிலத்தில் Spermatogenesis என்பார்கள். மூலவுயிர் கலங்கள் என்ற சாதாரண உடற்கலத்தை ஒத்த கலங்களில் இருந்து இழையுருப் பிரிவு (Mitosis) ஒடுக்கற் பிரிவு (Meiosis) போன்ற கலப் பிரிவுகளின் வாயிலாக விந்தணு அணுக்கள் எனப்படும் 23 நிறமூர்த்தங்களை (Chromosomes) கொண்ட விந்துகள் உருவாக்கப்படுகின்றன. இதில் ஓமோன்களின் தூண்டல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஒரு நுகம்.. அல்லது முளைய முதற் கலத்தை ஆக்க பெண் முட்டையும் ஆணின் விந்தும் சேர்ந்தாக வேண்டும். பெண்ணின் முட்டை 23 நிறமூர்த்தங்களை காவ.. ஆணின் விந்து 23 நிறமூர்த்தங்களை காவ.. கருட்டலின் போது அவை சேர்ந்து 23 சோடி நிறமூர்த்தங்களாக சாதாரண மனித கலத்திற்குரிய நிறமூர்த்தங்கள் உருவாகின்றன.

இந்த நிறமூர்த்தங்களில் டி என் ஏ என்ற பெரிய சங்கிலி மூலக்கூறுகள் உண்டு. அவற்றில் ஜீன்கள் எனப்படும் பகுதிகள் உண்டு. அந்த ஜீன்களே எமது இயல்புகளுக்கு காரணம்.

ஒரு முதிர்ந்த ஆணிடம் இருந்து இயற்கையாக தோன்று விந்தணுக்களில் உள்ள நிறமூர்த்தங்கள் ஒருபோதும் அவர்களில் உள்ள உடற்கலங்களில் உள்ளது போன்று அமைவதில்லை. காரணம்.. விந்தணு ஒரு தோன்றும் நிகழ்வின் போது cross over என்ற செயற்பாட்டின் மூலம் ஜீன்கள்.. ஒரு நிறமூர்த்தத்தில் இருந்து அடுத்ததற்கு பகுதியாக பரிமாறப்படுவதன் மூலம்.. நிறமூர்த்த அடிப்படையில்.. தனித்துவமான விந்துகள் உருவாகின்றன.

ஆக ஒருவரின் வாழ்நாளில் அவர் சார்ந்த இயல்புகள் அப்படியே விந்தணுவில் அடக்கப்படுவதில்லை. மாறல்கள் நிகழ்கின்றன. அதுவும் இல்லாமல்.. ஒரு ஆணின் ஜீன் தனது இயல்பை வெளிப்படுத்த வேண்டின் பெண்ணின் அதே நிலைக்குரிய ஜீன் சோடியின் தன்மையும் அதற்கு இணங்கியாக வேண்டும். சில சந்தர்ப்பங்களில் பெண் ஆதிக்கமுள்ள ஜீனையும் அதேவேளை அதே சோடிக்குரிய ஆதிக்கமற்ற ஜீனை ஆண் கொண்டிருந்தாலும்.. பெண்ணின் இயல்பே வெளிப்படும். மேலும் மனிதரில் குறிப்பிட்ட பல இயல்புகள் பல ஜீன்களின் ஒருமித்த வெளிப்பாட்டாலும் உருவாகின்றன.. (மதிநுட்பம் போன்றவை.)

ஆக.. விந்துகளை மட்டும் வைச்சுக் கொண்டு இயல்புகளை பூரணமாக தீர்மானிக்க முடியாது. ஆனால் முட்டையையும் விந்தையும் தேர்வு செய்து கருக்கட்ட விட்டால் மட்டுமே நல்ல இயல்புகளைப் பெற முடியும்.

எனி முட்டை + விந்து ஜீன்கள் அப்படியே பொருந்தினாலும்.. நல்ல இயல்பை வெளிப்படுத்தி விடுமா என்று பார்ப்போம்..

நல்ல ஜீன்களை பெண்ணின் முட்டையூடும்.. ஆணின் விந்தோடும்.. தெரிவு செய்து இணைத்துக் கொண்டாலும்.. ஜீன்கள் சரியாக வெளிப்பட கலங்கள் வளரும் முளையச் சூழல் சரியாக அமைய வேண்டும். முளையம் சரியான சூழலில் வளராவிட்டால்.. ஜீன்களின் வெளிப்படுத்தலில் தவறுகள் மாற்றங்கள் நிகழலாம்.

மேலும்.. முளையமும் சரியாக வளர்ந்து.. இயல்பும் வெளிப்பட்டு குழந்தையும் பிறந்திட்டு என்று வையுங்கோ..! அதன் பின் சூழல் இயல்பை தீர்மானிக்கும். சூழல் என்பது நாம் வாழும் பூமியின் பெளதீகச் சூழல்.. இரசாயன.. சமூகச் சூழல்.. எமது உடலினுள் உள்ள சூழல்.. என்று பல.

எனி மூளைத் திறமை.. அல்லது திறனை எடுத்து கையாண்டால்.. அதைத் தீர்மானிப்பது ஜீன்கள் மட்டுமல்ல. சூழலும் தீர்மானிக்கிறது. அந்த வகையில்.. எல்லாம் ஜீன் அளவில் சரியாக அமைந்து சூழல் சரியான சூழல் அமையவில்லை என்றால் திறமையான ஜீன் சரியாக வெளிப்பட மாட்டாது.

ஆகவே இந்த விளம்பரங்கள்.. ஓரளவுக்கு மேலோட்டமாக கருத்தைக் காவி வர முடியுமே அன்றி.. எல்லாம் 100% சரியாக அமைய வேண்டின் இயற்கையின் தேர்வும்.. சூழலும் சரியாக அமைய வேண்டும்.

இன்னொரு விடயம்.. ஒரு குழந்தையை இவ்வாறு தேர்வு முறையில் உருவாக்க ஆகும் செலவு பல மடங்கு. அந்தச் செலவை மீதப்படுத்தி இயற்கை வழியில் குழந்தையை உருவாக்கின்.. அந்த பணம்.. குழந்தைக்கு நல்ல உணவு உட்பட்ட சூழலை ஏற்படுத்தி உள்ள இயல்புகள் சரிவர வெளிப்படுத்த வகை செய்ய முடியும். உள்ளதை வைச்சு உச்ச பயனை பெறலாம்.

எனவே சாதாரண மக்கள் இதற்கு ஆசைப்படுவதை விடுத்து.. உருப்படியா இயற்கை வழியில் சிந்தியுங்கோ.

அழகு.. கல்வி அறிவு.. விளையாட்டுத் திறன்.. கணணி அறிவு.. இதெல்லாம் வெறும் ஜீன்களால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. ஜீன்களின் வெளிப்பாட்டை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இயற்கைச் சூழலே இன்றும் இருக்கிறது..! என்பதை மக்கள் உணர்ந்து கொள்வது நன்று.

நன்றி: யாழ் இணையம்.

No comments:

Post a Comment