Sunday 20 July 2008

தர்மம் செய்வதன் முக்கியத்துவம்....

அறிவிப்பாளர்: அபூமூஸா அல்அதி (ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவசியமாகும்,'' நான் வினாவினேன்:
""ஒருவரிடம் செல்வம் இல்லையென்றால்...?'' அண்ணலார் (ஸல்): அவன் சம்பாதித்து தானும் உண்ணாவேண்டும்; ஏழைகளுக்கும் தரவேண்டும்!'' நான்: ""அவனால் அவ்வாறு செய்ய முடியவில்லையென்றால்...?'' அண்ணலார் (ஸல்): ""தேவையுள்ள, துன்பத்திற்குள்ளான மனிதர் எவருக்கேனும் உதவட்டும்!''
நான்: ""அதுவும் அவரால் முடியவில்லையென்றால்...?'' அண்ணல்நபி (ஸல்): ""மக்களை நன்மை புரியும்படி அவர் தூண்டட்டும்!''

அண்ணல் நபி (ஸல்): ""மக்களுக்குத் தீங்கிழைக்காதிருக்கட்டும்! இதுவும் ஒரு நற்செயலே!'' (முஸ்லீம்) அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
""எவர் தன் சகோதரருக்குத் தேவையேற்படும் நேரத்தில் அவருக்கு உதவுகின்றாரோ அவருக்குத் தேவை ஏற்படும் நேரத்தில் அல்லாஹ் உதவி புரிவான்!'' (புகாரி, முஸ்லீம்) விளக்கம்: ஒரு நபிமொழியில் கூறப் பட்டுள்ளது: ""அல்லாஹ் தன் அடியார்கள் சிலரை மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காகப் படைத்துள்ளான். மக்கள் தம் தேவைகளை அவர்களிடம் தெரிவிக்கின்றார்கள். அவர்கள் அவற்றை நிறைவு செய்து விடுகின்றார்கள். இத்தகையோர் இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும், அவன் தரும் வேதனையி லிருந்தும் பாதுகாப்பாக இருப்பார்கள்,'' புகழ்பெறும் நோக்கம் வேண்டாம் அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: ""மனிதர்களால் கற்பிக்கப்பட்ட பிற கடவுளர்களை என்னோடு இணைசேர்ப்பதை விட்டு நான் மிகவும் தேவையற்றவனாவேன். எவன் ஒரு நற்செயல் புரிகின்றானோ, அதில் என்னுடன் வேறொருவனையும் இணையாக்கிவிட்டானோ, அத்தகையவனின் செயலுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. நான் அவனது செயலைக் குறித்து வெறுப்படைந்துள்ளேன். அந்தச் செயல், என்னுடன் அவன் யாரை இணைவைத்தானோ அவனுக்குரியதாகும்!'' (முஸ்லீம்)

தொழுகையே முக்கியம் : தொழுகையை அதிகப்படுத்த வேண்டும். இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள், இதுபற்றி கூறும் போது, ""எனக்கு காற்று பாரிச வாய்வு (பீடிப்பு) ஏற்பட்டிருந்தது. எனவே, நான் அண்ணல் நாயகம்(ஸல்) அவர்களிடம், தொழுகை செய்வது பற்றி வினவிய போது, "நின்று தொழுவீர்! முடியாவிடில் உட்கார்ந்து தொழுவீர்! இதுவும் முடியாவிடில் ஒருக்கணித்துப் படுத்துத் தொழுவீர்!'' என்றார்கள்.எந்த நிலையிலும் தொழுகையைக் கைக்கொள்ள வேண்டும் என்பது அண்ணலாரின் கருத்தாக இருந்தது. 

தேவையுள்ளோருக்கு உதவுங்கள் ! அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன்: ""எந்தச் செயல் சிறந்தது...? தரமானது....?'' அண்ணல் நபி(ஸல்): ""இறைவன் மீது நம்பிக்கை கொள்வதும், இறைவழியில் அறப்போர் புரிவதும்!'' நான்: ""எத்தகைய அடிமைகளை விடுவிப்பது சிறந்தது...?'' அண்ணல் நபி(ஸல்): ""விலை அதிகமாயிருக்கின்ற, தம் உரிமையாளனின் பார்வையில் சிறந்தவர்களாயிருக்கின்ற அடிமைகளை விடுவிப்பது சிறந்தது!'' நான்: ""என்னால் அது இயலவில்லையெனில்?'' அண்ணல் நபி(ஸல்): ""ஒரு பணியைச் செய்பவனுக்கு நீர் உதவி புரியும்; அல்லது தன் பணியைச் சரிவர செய்ய முடியாதவனின் வேலையை நீர் செய்து கொடும்!'' நான்:""அதுவும் என்னால் முடியவில்லையென்றால்...?''
அண்ணல் நபி(ஸல்) :  ""மக்களுக்குத் துன்பம் தராதீர்! இது உமக்கு தர்மமாகத் திகழும்; இதற்காக உமக்கு நற்கூலி கிடைக்கும்!'' (புகாரி, முஸ்லிம்) விளக்கம்: அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதன் கருத்து, ஏகத்துவ மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாகும். ஜிஹாத்- அறப்போரின் பொருள், சத்திய மார்க்கத்தை அழித்திட நினைப்போரை எதிர்த்துப் போராடுவதாகும். எதிரிகள் சத்திய மார்க்கத்தை, சத்திய அழைப்பாளர்களை அழித்திட வாளை ஏந்தினால், தானும் வாளேந்தி, ""எங்கள் உயிர்களையும், உங்கள் உயிர்களையும் விட சத்திய மார்க்கமே உயர்வானது; நீங்கள் அழித்திட முனைந்தால் நாங்கள் உங்களை மாய்த்திடுவோம், அல்லது அதனைப் பாதுகாக்கும் முயற்சியில் மாய்ந்து விடுவோம்,'' என்று பிரகடனம் செய்வது ஓர்இறைநம்பிக்கையாளனின் கடமையாகும். அரபு நாட்டில் அன்று அடிமை முறை அமலில் இருந்தது. அக்காலத்தில் நாகரிகச் சமுதாயங்கள் அனைத்திலும் இந்தச் சாபக்கேடு நிலவி வந்தது. இஸ்லாம் வருகை தந்தபோது அடக்குமுறைக்கு ஆளான, தாழ்த்தப்பட்ட மனிதர்களை மேம்படுத்துவதற்காகவும், மனிதகுல சகோதரத்துவத்தில் அவர்களை இணைப்பதற்காகவும் அடிமைகளை விடுவிப்பதை தன் சீர்திருத்தத்தின் ஓர் அம்சமாக ஆக்கிக் கொண்டது. அதனைமாபெரும் நற்செயல் என்று கூறியது. தேவையுள்ளோருக்கு உதவி புரிவதும், ஒரு மனிதன் செய்ய முடியாத அல்லது வகை தெரியாமல் செய்கின்ற பணியை முடித்துக் கொடுப்பதும் சிறந்த நற்செயலாகும். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ""ஒரு மனிதன் இஸ்லாத்தைத் தழுவிய ஓர் அடிமையை விடுதலை செய்வானாயின் அவ்வடிமையின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக அம்மனிதனின் ஒவ்வோர் உறுப்பையும் அல்லாஹ், நரக நெருப்பிலிருந்து விடுவிப்பான்!''

அண்ணல் நபிகளார் வாழ்வினிலே...நூலில் இருந்து.

No comments:

Post a Comment